ஒரு இனிய பயணம் !..
க.பாலசுப்ரமணியன்
ஈரம் கசிந்த என் கைகளைப் பிடித்துக்கொண்டு
என் கால்சுவடுகளுக்கு இணையாகக்
கால் பதித்து …..
நாள்தோறும்..
வாரம்தோறும்…
மாதங்கள் தோறும்..
ஆண்டுகள் தோறும்..
கைகோர்த்துச் செல்லும் நண்பா !
என் காலச் சுவடே!
உன் பாதங்கள் ..
இலைச்சருகுகளை மிதிக்கும்போது..
அவைகள் நொறுங்கும் சப்தத்தில் ..
இடிமுழக்கங்கள்… கேட்கும்..
நிலத்தில் உயிர்கொண்ட..
நீர்த்துவலைகளில் ..
உன் பாதங்கள் படும்பொழுது..
தீப்பொறிகள் தெறித்து
பாதைகளுக்குக்
கருவண்ணம் தீட்டும் !
உன் பார்வையில் மலர்ந்த பூக்கள் ..
கருணை வெள்ளத்தில் கனிந்து
புதுமணத்தை காற்றில் பூசி
நாசியின் நரம்புகளுக்கு
நம்பிக்கை ஊட்டும் !
உன்னிடம் கேட்கக் கேள்விகள் இல்லை !
என்னிடம் சொல்லிட பதில்கள் இல்லை !
உன் அமைதியின் ஆழத்தில் ..
நான் முழுகிக் கொண்டிருக்கின்றேன்..
உன் புன்சிரிப்பில் ..
நான் புதிய மொழிகளை ..
கற்றுக்கொண்டிருக்கின்றேன் !
உனக்குக் கடவுள் என்ற பெயர் உண்டென்று
யாரோ சொன்னார்கள்…
பஞ்சபூதங்களைப் பெற்றெடுத்த
உனக்குப் பெயர் எதற்கு?
கடந்தவன் என்றால் ..
காலனுக்கும் உருக்கொடுத்தாயோ?
புரியாத தத்துவமே!
புரிந்துகொள்ளக் காலமில்லை !
என் கண்களில்..
கடவுள்களுக்குக் கலைகொடுத்த..
காலன் அன்றோ நீ..!
இந்த அமைதியான பயணத்தில்..
உன்னோடு நானும்..
என்னோடு நீயும்..
எங்கே செல்கிறோம்..?
யாருக்காக..??
உன்னிடம் பதில்கள் இல்லை !
என்னிடம் கேள்விகளுக்குக் குறைவில்லை..!!
கையோடு கைகோர்த்து….
காலம் காலமாய்..
நீயும் நானும்..
ஒரு இனிய பயணம் !