ஆரண்ய காண்டம் அன்னையின் மணி வயிறு! கசிவு வெளிச்சங்களில் அவள் முகம் தெரிகிறது ஆயிரம் கோடி பிரகாசமாய். அவள் இன்புற்ற கீற்று உணர்ச்சிக்கோடுகளும் அவள் நடுக்குற்ற வெடவெடப்புகளும் என்னுள் வர்ணங்கள் பாய்ச்சின. ஊசிமுட்களும் கருப்பு இலைகளுமாய் அவள் காலம் தள்ளியபோதும் அவளது ஒரே ரோஜாவாய் அவள் நாளங்களில் மின்னல் வெட்டுவேன். பத்து மாதங்கள் கழன்றபின் ஆண்டுகள் ஆண்டுகள் ஆண்டுகள் பல முதிர்ந்த பின் நானும் அவளுக்கு காக்காய் முள்ளாய் ஆன பின்னும் கருப்பையில் கிடப்பது அவள் நிழலா? என் நிழலா? உவ்வா…உவ்வா.. ஆம் இது என் பழைய குவா குவா இல்லை. இந்த மசக்கை வாந்தியில் அம்மா நீ காட்டினாய் மீண்டும் ஒரு அம்மாவின் மொழி பெயர்ப்பு என்று!
நான் பிறந்த ஊர் நெல்லைச்சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள கல்லிடைக்குறிச்சி. பட்டப்படிப்பில் முதன்மையாகத் தேறி (கூட்டுறவு/பொருளாதாரம்) மாண்புமிகு வி.வி.கிரி அவர்களால் தங்கப்பதக்கம் விருது பெற்றேன். பட்டப்படிப்பு முடிந்ததும் ‘நான் டெஸ்ட் கேடகரி’ (NON -TEST CATEGORY) எல்.ஐ.சி யில் தேர்வு ஆகி பணியில் (1966) சேர்ந்து பணி முடித்து1999 ல் விருப்பு ஓய்வும் பெற்று விட்டேன் பணியின் போது தனிப்பட்ட முறையில்1975ல் எம்.ஏ.பொருளாதாரம முதல் வகுப்பில் தேறினேன்.(வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம்ஆந்திரபிரதேசம்) எனக்கு கணிதம் இயற்பியல் போன்ற நூல்களைப்படிப்பது பெரிதும் பிடிக்கும்.கவிதைகள் எழுதுவது மட்டுமே என் இலக்கியத்தேடல் ஆகும். தமிழ் மொழியின் தொன்மையியல் பற்றிய நூல்களில் மிக்க ஆர்வம் கொண்டவன். முதன் முதல் செம்மலர் இதழில் செங்கீரன் என்ற பெயரில் (1969) கவிதைகள் எழுதத்தொடங்கினேன்.அதில் நிறைய எழுதியுள்ளேன்.ஜுனியர் விகடனில் முதன் முதலாக தேசிய கீதம் என்ற தலைப்பில் எனது கவிதை வெளியாயிற்று.அது முதல் கல்கி குங்குமம் முத்தாரம் தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களில் எழுதியுள்ளேன். பெரும்பாலும் செங்கீரன் ருத்ரா என்ற பெயர்களிலேயே கவிதைகள் எழுதியுள்ளேன்.2000 ஆண்டிலிருந்து திண்ணை அம்பலம் வார்ப்புகள் ஆறாம்திணை போன்ற இணைய இதழ்களில் (ருத்ரா என்ற பெயரில்) எழுதிவருகிறேன்.சங்க இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டு சங்க நடைச்செய்யுள் போன்று பாடல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் மனைவியும் பி எஸ்.என்.எல்லில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள்.கணிதம் டோபாலஜி இயற்பியலில் குவாண்டம் மெகானிக்ஸ் மற்றும் எட்வர்டு விட்டனின் எம் தியரி மற்றும் ஐன்ஸ்டீன் நிறுவிய சிறப்பு பொது சார்பியல் கோட்பாடுகள் போன்றவை மிகவும் விருப்பமான தளங்கள்.இதில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.