குத்துப்பாறையும் புல்லும் மொய்த்த குன்றம் தன்னில் பள்ளி கொண்ட கோவணப் பெருமாள் கோலோச்சிய திரு அண்ணாமலை யென்னும் மலையுண்டு. ஆயிரம் இமயமும் அதிலே அமிழும்..அந்த அழகிய அமைதியின் புன்சிரிப்பில் மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே பிரம்ம சூத்திர பாஷ்யங்கள் ஆகும். பேசாத மொழியில் மொழி ஏதுமில்லை. தமிழைத்துப்பிய வடமொழி என்றும் வடமொழி மற்றொரு தமிழ்மொழிஎன்றும் பட்டி மன்றப் பாய்ச்சல்கள் இல்லை. பேசாதிரு!பேசாதிரு!பேசாதிரு! பேசியதெல்லாம் விந்துக்கள் ஆகி விந்துக்கள் எல்லாம் காடுகள் ஆகி காடுகள் தோறும் விலங்குகள் தான். வேள்வி வளர்த்து நம் தீயை எல்லாம் யாருக்கு கொடுக்க இயலும் அறிவாய். தீயே தீக்கு தின்னக்கொடுக்க..இந்த சாம்பலுக்கு ஏது உரிமையடா? மறைத்து மறைத்துச் சொன்னாலும் காதுக்குள்ளே சொல்லூற்றி நாலு விதமாய் சொன்னாலும் அஞ்ஞானத்தின் வர்ணம் தான் அது அதர்மத்தின் கொடுங்காடுகள் தான். மனிதன் நிழலை மனிதன் உரித்து மணிச்சுடர் ஆடை உடுத்துவதே மகா மகா திரு நிர்வாணம். நிர்வாணமாய் நிற்பவருக்கு ஆண் குறியென்ன? பெண் குறியென்ன? ஆட்டங்கள் போதும்!பாட்டுகள் போதும்! ஆகாசத்தைக் காய்ச்சிடுவீர் அதன் அமுதச் சாற்றை அருந்திடுவீர்
நான் பிறந்த ஊர் நெல்லைச்சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள கல்லிடைக்குறிச்சி. பட்டப்படிப்பில் முதன்மையாகத் தேறி (கூட்டுறவு/பொருளாதாரம்) மாண்புமிகு வி.வி.கிரி அவர்களால் தங்கப்பதக்கம் விருது பெற்றேன். பட்டப்படிப்பு முடிந்ததும் ‘நான் டெஸ்ட் கேடகரி’ (NON -TEST CATEGORY) எல்.ஐ.சி யில் தேர்வு ஆகி பணியில் (1966) சேர்ந்து பணி முடித்து1999 ல் விருப்பு ஓய்வும் பெற்று விட்டேன் பணியின் போது தனிப்பட்ட முறையில்1975ல் எம்.ஏ.பொருளாதாரம முதல் வகுப்பில் தேறினேன்.(வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம்ஆந்திரபிரதேசம்) எனக்கு கணிதம் இயற்பியல் போன்ற நூல்களைப்படிப்பது பெரிதும் பிடிக்கும்.கவிதைகள் எழுதுவது மட்டுமே என் இலக்கியத்தேடல் ஆகும். தமிழ் மொழியின் தொன்மையியல் பற்றிய நூல்களில் மிக்க ஆர்வம் கொண்டவன். முதன் முதல் செம்மலர் இதழில் செங்கீரன் என்ற பெயரில் (1969) கவிதைகள் எழுதத்தொடங்கினேன்.அதில் நிறைய எழுதியுள்ளேன்.ஜுனியர் விகடனில் முதன் முதலாக தேசிய கீதம் என்ற தலைப்பில் எனது கவிதை வெளியாயிற்று.அது முதல் கல்கி குங்குமம் முத்தாரம் தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களில் எழுதியுள்ளேன். பெரும்பாலும் செங்கீரன் ருத்ரா என்ற பெயர்களிலேயே கவிதைகள் எழுதியுள்ளேன்.2000 ஆண்டிலிருந்து திண்ணை அம்பலம் வார்ப்புகள் ஆறாம்திணை போன்ற இணைய இதழ்களில் (ருத்ரா என்ற பெயரில்) எழுதிவருகிறேன்.சங்க இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டு சங்க நடைச்செய்யுள் போன்று பாடல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் மனைவியும் பி எஸ்.என்.எல்லில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள்.கணிதம் டோபாலஜி இயற்பியலில் குவாண்டம் மெகானிக்ஸ் மற்றும் எட்வர்டு விட்டனின் எம் தியரி மற்றும் ஐன்ஸ்டீன் நிறுவிய சிறப்பு பொது சார்பியல் கோட்பாடுகள் போன்றவை மிகவும் விருப்பமான தளங்கள்.இதில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.