நிர்மலா ராகவன்

வருங்கால மனைவி

உனையறிந்தால்1
கேள்வி: நான் இருபது வயது மாணவன். என் நண்பர்கள் பதினேழு வயதிலேயே girl friends தேடிக்கொண்டார்கள். ஆனால் அப்போது ஏற்பட்ட காதல் எதுவும் நிலைக்கவில்லை. அதிகப் பிரச்னையற்ற இல்லற வாழ்வு அமைய எத்தகைய பெண்ணை மணக்க வேண்டும்?

பதில்: பலே! உனக்கு வயதுக்கு மீறிய அறிவும், நிதானமும் இருக்கிறதே!

பெற்றோரின் குறுக்கீடு அதிகம் இல்லாவிட்டால், தனக்குப் பொருத்தமான பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஓர் இளைஞனுடையதாகிறது. முதலிலேயே சிறிது பழகுவதால், ஒருவருக்கு மற்றவரது குணாதிசயங்கள் புரிய வாய்ப்புண்டு. ஆனால், காதலிக்கும் காலத்தில் மிக ஜாக்கிரதையாக, தமக்கு இல்லாத நல்ல குணங்களைக்கூடக் காட்டி மயக்கும் ஒருவர் (ஆணோ, பெண்ணோ), கல்யாணத்துக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிக்கிறார். அப்போதுதான் ஏமாற்றம், கோபம் எல்லாம் எழுகின்றன.

பேருந்து நிறுத்தத்தில் பார்த்தவுடன் காதல் கொள்வது, அப்படிப் பார்த்த பெண்ணைத் துரத்தி அடிப்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. புதினங்களில் படித்திருப்பீர்கள். ஒரு பெண் வாசகசாலையிலிருந்து கட்டுப்புத்தகங்களை எடுத்து வருகிறாள். அப்போது தற்செயலாக அவள்மேல் மோதி, மன்னிப்பு கேட்கிறான் — வேறு யார்? — கதாநாயகன்தான்! குனிந்து, அவளுடைய புத்தகங்களைத் திரட்டியும் கொடுக்கிறான். இது போதாதா, இருவருக்குமிடையே காதல் மலர! (எதிரில் வந்து மோதுபவர்கள்மேல் எல்லாம் காதல் வருமா? யோசிக்க வேண்டிய விஷயம்). இதெல்லாம் எப்படி நிலைக்கும்?

எனக்குத் தோன்றும் சில பொது விதிகளை அலசலாமா? சில இளைஞர்களுக்கு நான் அறிவுரை(?) கூற, அவர்களால் திருமண வாழ்க்கையைத் தாக்குப்பிடிக்க முடிகிறது.

1. புகழ்ச்சி

ஏதாவது ஆதாயம் இருந்தால்தான் புகழ்வது என்றாகிவிட்டதே இன்றைய உலகம்!

ஆணோ, பெண்ணோ, அதிகம் புகழ்கிறவரை நம்பி, தன் வாழ்க்கையை ஒப்படைத்துவிடக் கூடாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடக்கூடும்.

`நீ எவ்வளவு அழகா, கம்பீரமா இருக்கே! வயதுக்கு மீறிய அறிவு உனக்கு!’ என்று பேசி, அனுபவம் இல்லாதவர்களை மயக்குவது எளிது. இப்படிப் பேசுகிறவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

2. வயது

அதிக வயது வித்தியாசம் நல்லதல்ல. ஏனெனில், கணவர் மனைவியை ஒரு குழந்தைபோல் பாவித்து, அருமையாக நடத்துவார். இதைப் பெண்கள் விரும்ப மாட்டார்கள். (சமவயதினராக இருந்தாலும், பெண்கள் சீக்கிரம் வயதானவர்கள்போல் தோற்றம் அளிப்பார்களே!)

3. பொருளாதாரம்

பெரியவர்கள் நிச்சயித்த திருமணம் என்றால் குடும்ப அந்தஸ்து ஏறக்குறைய சமமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். (தமிழ்ப் படங்களில்தான் வேலைக்காரன்மேல் காதல் கொள்வதெல்லாம் நடக்கும். அபூர்வமாக, குடும்ப நிலை சரியாக இல்லாத பெண்களும் இப்படி நடந்துகொள்வதுண்டு).

பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு முதலில் காதலன் செய்வதெல்லாம் உகந்ததாகப்பட்டாலும், நாளடைவில், இரு குடும்பங்களுக்குமிடையே இருக்கும் வித்தியாசம் பெரிதாகப்படும். ஏமாற்றம் விளைவது இப்படித்தான்.

வசதி குறைந்த குடும்பத்திலிருந்து வந்த பெண்ணோ மலைத்துப்போவாள். ஆடம்பரமான வாழ்க்கை நடத்தும் புக்ககத்தினரின் ஏளனத்துக்கு ஆளாகக்கூடும். இல்லையேல், காணாததைக் கண்டதுபோல், செலவழிப்பாள். சம்பாதித்துப்போடும் கணவன்பாடுதான் கஷ்டம். தட்டிக் கேட்டால், குடும்ப அமைதி கெடும் என்று பெருமூச்சுடன் விட்டுக்கொடுத்துப் போகும் கணவன்மார்களை நான் அறிவேன்.

4. கல்வித் தகுதி

ஆணுக்கும், வருங்கால மனைவிக்கும் கல்வியிலும் ஏறக்குறைய சமநிலை இருக்க வேண்டும். அப்போதுதான் ஒன்றாக அமர்ந்து, எல்லா விவகாரங்களையும் அலசமுடியும். ஒருவரது நண்பர்களுடைய உரையாடலில் மற்றவர் கலந்துகொள்ள முடியும். எத்தனை நாட்கள்தான் காதல் வாசகங்களையே நம்பியிருக்க முடியும்!

5. உத்தியோகம்

கணவனுடைய உத்தியோகத்தைப்பற்றி மனைவிக்கு ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். ஒரே உத்தியோகத்தில் இருப்பவர்களானால், பேசுவதற்கு, கலந்தாலோசிப்பதற்கு, நிறைய சமாசாரங்கள் இருக்கும். ஆனால், போட்டி எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கதை: கணவன், மனைவி இருவருமே பிரபலமான பின்னணிப் பாடகர்கள். `உங்களுக்குள் போட்டி, பொறாமை வருகிறதா?’ என்று நான் அந்த இளைஞரைக் கேட்டேன்.

`இப்போது இருவருக்குமே நிறைய வாய்ப்புகள் வருவதால், போட்டி இல்லை!’ என்று பதிலளித்தார்.

அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டால், மனைவியின் முன்னேற்றம் எரிச்சலைத் தரும் என்றாரோ?

6. தோழமையை வளர்ப்பது

கணவன், மனைவி இருவருமே தத்தம் அன்றாட வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டால், தோழமையும், நெருக்கமும் வளரும். ஆனால், அதை `பலகீனம்’ என்று தவறாக எண்ணி, அதிகாரம் செலுத்த முயலும் துணையிடம் கண்டிப்பாக இருக்க வேண்டுவது அவசியம்.

7. வெளியழகு எதற்கு?

அழகை மட்டும் கண்டு மோகித்து மணந்துவிட்டு, `இவளுக்குப் பிறருடன் பழகவே தெரியவில்லை. முட்டாள்!’ என்று, காலங்கடந்து பழிப்பானேன்! அதோடு, அழகு என்ன, நிலைக்கக்கூடியதா?

கதை: ஒரு விருந்தில் புதிதாகத் திருமணமான அந்த தம்பதியரைச் சந்தித்தேன். `எங்களுடையது காதல் திருமணம்!’ என்று பெருமையாகக் கூறிய அத்தமிழர் மிக அழகாக இருந்தார். அவருடைய மனைவி ஒரு சீனப்பெண். ஒரே பார்வையில், `குண்டு!’ என்றுதான் தோன்றும். களையான முகம் என்றுகூட வர்ணிக்கத் தோன்றாது. வயதுக்கு மீறிய முதிர்ச்சி முகத்தில்.

சாதாரணமாக, காதல் திருமணம் என்றால் அழகுதான் முதலிடம் வகிக்கும் என்று நினைத்தவர்களுக்கு இந்தத் தொடர்பு அதிசயமாக இருந்தது. எல்லாரும் கலந்து பேசியபோது அந்தப் பெண்ணும் அவ்வப்போது கலந்துகொண்டாள்.
எங்கள் முடிவு: இவள் மிக நல்ல அம்மாவாக இருப்பாள்!

எப்படி அந்த முடிவுக்கு வந்தோம் என்றெல்லாம் அலசத் தோன்றவில்லை. அந்த இளைஞருடைய தாய் அன்பானவளாக, பரிவானவளாக, பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பவளாக இருக்கவேண்டும். தன் தாயைப் போலிருந்த ஒருத்தியை விரும்பி மணந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கை நிச்சயம் இன்பகரமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

8. ஒன்றுமில்லாததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுபவர்

சிறு சிறு விஷயங்களுக்காக அதிக உணர்ச்சிவசப்பட்டு, மகிழ்ச்சி, கோபம், ஆத்திரம் போன்ற குணங்களை வெளிப்படுத்துபவர் ஆணோ, பெண்ணோ, அவரை மணந்தால், வாழ்க்கை SEE-SAW போலிருக்கும். அமைதி, நிதானம் இதெல்லாம் இவர்களுக்குப் பிடிபடாதவை. என்றுமே சிறுபிள்ளைத்தனம் மாறாது இருப்பவர்கள்.

பதின்ம வயதுப் பையன்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியைகள்மேல் பித்தாக இருப்பார்கள். தன் காதலியாகவே ஆசிரியையை மதித்து, வீட்டில் அவளைப்பற்றி ஓயாமல் பேசுவார்கள். ஒரே நாளில் பல முறை வணக்கம் தெரிவிப்பார்கள்! `எனக்கு ஒரு மனைவி வந்தால், அவள் இந்த ஆசிரியைமாதிரியே இருக்கவேண்டும்!’ என்று கனவு காண்பார்களாம். ஒருவர் என்னிடம் பகிந்துகொண்டது இத்தகவல்.

ஆனால், ஓர் ஆசிரியையின் அறிவு முதிர்ச்சி, மனப்பக்குவம் எத்தனை இளம்பெண்களுக்கு இருக்கும்?

9. நடிகைமாதிரி

வேறு சிலர், எப்போதும் புடவை உடுத்து, ஒற்றைப் பின்னலும், தலைநிறையப் பூவுமாக திரைப்படங்களில் தாம் கண்ட நடிகைபோல் வருங்கால மனைவி இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். என்னைக் கேட்டால், இதுவும் ஒருவிதக் கட்டுப்படுத்துதல்தான்.

அவர்கள் விருப்பப்படி ஒரு பெண் மனைவியாக வாய்த்து, அவள் தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்டால், அன்பு குன்றிவிடுமா? சண்டை ஆரம்பிக்குமோ?

10. எதிர்பார்ப்பு

பெற்றோருக்கு ஒரே பிள்ளையானால், `என் பெற்றோர் என்னுடன்தான் இருப்பார்கள்!’ என்று முதலிலேயே கண்டிப்பாகச் சொல்லிவிடுவது நலம்.

`இன்னும் பத்து வருடங்கள் கழித்தும், இவளுடன் (இவருடன்) சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன்!’ என்று தோன்றினால், துணிந்து மணம் புரியலாம். இருப்பினும், காலப்போக்கில் குணம் மாறலாம். யாரும் என்றும் ஒரேமாதிரி இருப்பதில்லை.
இப்படியெல்லாம் பொறுக்க ஆரம்பித்தால், அறுபது வயதுவரை பிரம்மச்சாரியாகவே காலம் கடத்த வேண்டியதுதான் என்பவர்களுக்கு:

மணக்குமுன் விழிப்பாக இரு. மணந்தபின், அரைக்கண்ணை மூடிக்கொள்! (BENJAMIN FRANKLIN)

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *