பொ.வே.சோவின் உரையில் இலக்கிய மேற்கோளாட்சி

0

பொ.வே.சோவின் உரையில் இலக்கிய மேற்கோளாட்சி
(சிறப்புப்பார்வை – முல்லைப்பாட்டு)

ம.மோ.கீதா

சங்க இலக்கியப் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று முல்லைப்பாட்டு ஆகும். இந்நூலிற்கு உரையாசிரியர்கள் உரை எழுதியவண்ணம் உள்ளனர். அவர்களில் ஒருவராகப் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தனார் விளங்குகின்றார். இவர், தம் உரையில் கையாண்டுள்ள இலக்கிய மேற்கோளாட்சிகளைப் பற்றி இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.

உரை:
உரை என்பது ஒன்றினைப் புதிதாக உருவாக்குவதாகும். இலக்கியம் இலக்கணம் என்று எல்லாவற்றினையும் விளக்கிக் காட்டும் ஒரு கண்ணாடி போன்றது உரையாகும். இவ்வுரையினைப் பற்றித் தொல்காப்பியம்,

”பாட்டிடை வைத்த குறிப்பினாலும்
பாவின்று எழுந்த கிளவியானும்
பொருளோடு புணரப்பொய்ம் மொழியானும்
பொருளோடு புணர்ந்த நகை மொழியானும்”

என்ற செய்யுளியல் நூற்பாவின் வாயிலாக உரை குறித்துத் தொல்காப்பியர் கூறும் கருத்தை அறிய முடிகிறது.

உரையின் வகைகள்:
உரையின் வகையினை ஆசிரியர்கள் பல்வேறு காலக்கட்டமாகப் பிரித்து இறுதியாக இன்றுவரையில் 17 நிலையாகப் பிரித்துக்காட்டியுள்ளனர். அவை:
இலக்கியஉரை, இலக்கணஉரை, சைவத்தத்துவஉரை, வைணவஉரை, காண்டிகையுரை, விருத்தியுரை, செய்யுள்வடிவஉரை, மறுப்புரை, பொழிப்புரை, கருத்துரை, பதவுரை, தொகுப்புரை, விளக்க உரை, விசேட உரை, வினா விடை போக்குரை என உரையின் வகையினை இன்று பல வகையாகப் பகுத்து அமைத்துள்ளனர்.

உரையின் இயல்புகள்:
உரையின் இயல்புகள் எவ்வாறுஇருக்கவேண்டுமெனில், எளிமையாகவும், அனைவருக்கும்புரியும்வகையிலும், பல்துறைப்புலமையுடனும், இலக்கிய நயம், இலக்கண நயம், மேற்கோளாட்சி, சிறப்பு,விளக்கம், எல்லாத் தரப்பு உரையாசிரியர்களும் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும்.

உரையின் அமைப்புகள்:
உரையானதுதெளிவுடனும் பல்துறை அறிவுடனும் நடைச்சிறப்பு ,தொடரமைப்பு, வினா விடைப் போக்கு, சொற்பொருள், பாடவேறுபாடு, கருத்து விளக்கம், இலக்கண இலக்கிய விளக்கம், உரையின் மரபு, நூலாசிரியரின் கருத்து வெளிப்படுத்தும் திறன், சொற்பொருள் தருதல், மேற்கோள் காட்டுதல், தொடர் பொருள் நயம் ஆகியவை அமைந்திருத்தல் வேண்டும்.

முல்லைப்பாட்டு

பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்தாவதாக அமைந்திருப்பது முல்லைப்பாட்டு ஆகும். இது நப்பூதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. பத்துப்பாட்டுள் மிகச் சிறிய நூல் இதுவாகும். முல்லை நிலத்தலைவியினுடைய கற்பின் மாண்புகளையும், கார்காலத்தின் அழகிய வர்ணனைகளையும், பாவை விளக்கு ஏற்றும் பெண்களின் நிலையினையும், வீரர்களின் சிறப்புக்களையும் கற்பனை நயத்துடன் மிக அழகாகப் பேசும் நூல் இம்முல்லைப்பாட்டாகும்.

முல்லைப்பாட்டின் அமைப்புமுறை:
இந்நூல் 103 அடிகளையுடைய ஒரு சிறிய நூல் ஆகும்.இருப்பினும் மற்ற நூல்களினைக் காட்டிலும் இது ஒரு கலைக் களஞ்சியமாகவும், கற்பனைக் களஞ்சியமாகவும் முல்லைப்பாட்டு விளங்குகிறது. அன்றைய கால மகளிர் முல்லை மலருடன் நெல்லைக் கலந்து தூவித் தெய்வத்தினை வணங்கி நற்சொல் கேட்டனர் என்பதை இந்நூலின்மூலம் அறிய முடிகிறது. மேலும்,வீரர்கள் தங்கும் படை வீட்டின் அமைப்புமுறை, இடையர்களின் வாழ்வியல் கூறுகள், நாழிகைக் கணக்கர் செயல்பாடுகள், தலைவன் திரும்பி வரும் கார்காலத்தில் காடு அழகுபெற்று விளங்கியமை ஆகியவற்றினைப் புலவர் தம் நுட்பமான கற்பனை நயத்துடன் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். இச்செய்திகளுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் பிற நூல்களின் செய்திகளையும் தொகுத்து பொ.வே.சோ. தம்முடைய உரையில் ஒப்பிட்டுக் காட்டிய விதம் இந்நூலிற்கு மேலும் சிறப்பைத் தருவதாக அமைந்துள்ளது.

பொ.வே.சோ.:
சோமசுந்தனாரின் உரை என்பது சற்றுக் கடினமான உரை என்றாலும் பிற உரையாசிரியர்களுடன் இவரது உரையினைப் பொருத்திப் பார்த்தால் இவரது உரையே சிறந்த உரை என்று கூறலாம். ஏனெனில், மற்ற உரையாசிரியர்கள் மூலம், விளக்கவுரை, திணை, துறை போன்றவற்றினைக் கூறியிருப்பர்.ஆனால், இவர் மூலத்தினை முதலிலேயே தந்துவிட்டு அவற்றிற்குத் திணை, துறை, அகலவுரை, விளக்கம், பாடல் பாடப்பட்ட சூழல் போன்ற செய்திகளையும் பாடலின் முடிவில் தருவதே இவரின் உரை நோக்கமாகக் காணலாம்.

பொ.வே.சோ. உரை அமைப்பும் சிறப்பும்:
சோமசுந்தனாரின் உரை என்பது அனைவருக்கும் பயனுடைய உரையாக அமைந்துள்ளது. இவர், கூறவரும் செய்திக்கு நேரடியாக வராமல் பாடலின் அடி, பொருள், கருத்தினைக்கூறி அது மேலும் புரியுமாறு செய்யும் மிக நீண்ட தொடரமைப்புமுறை, அதற்கு இணையாக இலக்கண இலக்கிய மேற்கோள்கள் பிற நூல்களின் உரையுடன் தனது உரையினை மிக நேர்த்தியாகப் பொருத்திக் காட்டும் பாங்கே இவரது உரையின் சிறப்புக் கூறாகும். பிற உரையாசிரியர்களின் மேற்கோள்களையும் இவர் சுட்டிக்காட்டும் விதம் மிகவும் சிறப்பானதாகும்.

பொ.வே.சோ. உரையில் இலக்கிய மேற்கோளாட்சி:
பெருமமழைப் புலவரின் உரையினைக் குறிப்பிடும்பொழுது அதற்கு இணையாகப் பல இலக்கியங்களிலிருந்து விளக்கிக்கூறும் மாண்பினையுடையவர். இவர்அகநானூறு, கலித்தொகை சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பட்டினப்பாலை போன்ற இலக்கியங்களிலிருந்து முல்லைப்பாட்டு உரையில் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.

பொருண்மை நோக்கு:
பொ.வே.சோவின் உரையில் தான் சொல்ல வந்த கருத்தின் பொருளுக்கேற்ப அதை இன்னும் உயர்த்திக்காட்டி, அது எந்த அளவிற்கு ஏற்புடையது என்பதனை ஆராய்ந்து அதற்குப் பிற இலக்கியங்களினை மேற்கோள்களாகக் காட்டியுள்ளார்.

அக்காலத்தில் பெண்கள் இறைவனை எவ்வாறு வழிபட்டனர் என்றும்,கார்காலச் செய்தியினையும் விளக்கும் வகையில் திருக்குறள்,சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி ஆகியவற்றை மேற்கோள்களாகக் காட்டியுள்ளார். தான் கூறும் பொருளுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டுமெனில், இம்முறையினைக் கைக்கொள்வதே சரியென இவர் கையாண்டுள்ளார்.

சோமசுந்தரனார் முல்லைப்பாட்டிற்கு எழுதிய உரையில் திருக்குறள்-5,களவழி நாற்பது-1, அகநானூறு-4, கம்பராமாயணம்-2, சீவகசிந்தாமணி-3 பாடல்களும் பட்டினப்பாலை-1, சிறுபாணாற்றுப்படை-1, பெரும்பாணாற்றுப்படை-1, சிலப்பதிகாரம்-5, மணிமேகலை-1 முறையும் பொருத்தமுடன் மேற்கோள்களாக எடுத்தாண்டுள்ளார். இவர், திருக்குறளினை அதிக இடங்களில் கையாண்டுள்ளதிலிருந்து இவர் திருக்குறளின் மீதுகொண்ட பற்று புலனாகிறது.

கருத்துப் புலப்பாடு:
பொ.வே.சோவின் கருத்துப்புலமை என்பது மிகவும் ஆழமான செய்திகளைக் கூறக் கூடியவை. இவர்,உரையினை நோக்கினால் இயல்பான செய்தியினைக்கூட மிகவும் சுவையுடையதாக மாற்றிக் கூறக்கூடிய புலமையுடையவர் எனக் காட்டும். தலைவியின் துயரநிலையினைக் கருதி நற்றாய் இறைவனிடம் வேண்டும் செய்தியுடன் இடையர்கள் கூறும் செய்தியினையும் புகுத்தி ஒப்பீட்டுக்காட்டியுள்ளார். இச்செய்திக்குச் சிலப்பதிகாரம், திருக்குறள், சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களைப் பொருத்திக்காட்டித் தான் சொல்ல வந்த செய்திகளை மிக நேர்த்தியாகப் பொருத்திக் காட்டும் திறனைப் பார்க்கும்பொழுது பொ.வே.சோ. கருத்தாழமிக்கவர் என்பதை மெய்ப்பித்துள்ளார்.

சொல்லாட்சி மேற்கோள்:
பொ.வே.சோமசுந்தரனார் சொல்லாட்சித் திறனைப் பார்த்தால் மற்ற உரைகளைவிட இவரது உரை சற்று வேறுபட்டு விளங்குவதை அறிய முடிகிறது. சான்றுக்குத் தலைவன் வருகையினைக் கூறும்பொழுது அதற்குச் சிறுபாணாற்றுப்படை பாடலின் அடியினை எடுத்துக்கூறி மேற்கோள் காட்டியுள்ளார்.பொ.வே.சோவின் உரை ஓர் அடிக்கு பல சொற்களை மட்டுமல்லாது பல்வேறு தொடர்களைச் சுட்டிக்காட்டியுள்ளதை உணர முடிகிறது.

முடிவுரை:
சங்க இலக்கிய நூல்களுக்கு இன்று பலவிதமான உரைகள் வந்திருந்தாலும், பல்வேறு சிறப்புகளையுடைய உரை பெருமழைப்புலவரின் உரையே அனைவரும் கூறும் அளவிற்கு அது காணப்படுகிறது. போற்றத்தக்க வகையில் பல்வேறு இலக்கிய மேற்கோளாட்சியைப் பெற்றுத் திகழும் ஒரே உரை இவருடையதே ஆகும்.

___________________________________________________

திருமதி ம.மோ.கீதா
உதவிப் பேராசிரியர்
அ.வ.அ.கல்லூரி(தன்.)
மன்னம்பந்தல்-609 305
மயிலாடுதுறை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *