கவிஞர் ஜவஹர்லால்

we_have_a_long_way_to_go__by_down_hearted

சாதிக்குச் சங்கங்கள் உண்டே யன்றிச்
சாதிக்கச் சங்கங்கள் இல்லை; வீணே
மோதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றி
முனைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; உள்ளம்
பேதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றிப்
பிணைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; இங்கே
ஏதுக்குச் சங்கங்கள் ? ஆய்ந்து பார்த்தால்
எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

மனிதாபி மானத்தைக் காண வில்லை;
மனத்தினிலே நல்லெண்ணம் பூப்ப தில்லை;
இனிதான சொற்களிங்கு வீழ்வ தில்லை;
இடர்துடைக்கக் கைகளிங்கு நீள்வ தில்லை;
கனிவான நெஞ்சங்கள் தோண வில்லை;
கண்களிலே தூயசுடர் ஒளிர்வ தில்லை;
இனியஉள்ளம் நல்லசெயல் எங்கு மில்லை;
எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

பள்ளங்கள் மேடாக வில்லை; இங்கே
பாவங்கள் குறைவாக வில்லை; நல்ல
உள்ளங்கள் உயர்வாக வில்லை; நாட்டின்
ஊனங்கள் சீராக வில்லை; நெஞ்சக்
கள்ளங்கள் அழிவாக வில்லை; செய்யும்
கபடங்கள் மறைவாக வில்லை; எங்கும்
இல்லங்கள் வளமாக வில்லை; நாட்டில்
எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

நதிநீரைப் பங்குதர மனமே இல்லை;
நாட்டினிலே ஒருமைப்பாட் டுணர்வே இல்லை;
விதியைத்தான் நம்புவதைத் தவிர வேறு
வினைவலியை நம்புகின்ற நெஞ்சே இல்லை;
கதிமாற்றும் தேர்தலிலே செம்மை யாகக்
கடமையாற்றி நிலைமாற்றும் துணிவே இல்லை;
நிதிசேர்க்கும் தவறுகளோ குறைய வில்லை;
நாமெங்கே போகின்றோம் ? தெரிய வில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *