தமிழ்த்தேனீ

இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டாள் கனகம். ஏங்க  நாளைக்கு  எந்த வேலையும் வெச்சுக்காதீங்க. நம்ம வைதேகிக்கு  60 வயசாவுது  வைதேகியோட பொண்ணுங்க  மாப்பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து   வைதேகி வீட்டிலே ஒரு விழா ஏற்பாடு செஞ்சிருக்காங்க.

    ஏதோ யோசனையாய் இருந்த ராஜகோபாலன்   சரிம்மா  உன்னோட  ஆர்வம் புரியுது  நாம  போயிட்டு வரலாம்  என்றார்

அவர் மனதில்  வைதேகியைப் பற்றிய  எண்ணங்கள் நிழலாடின. அவருடைய  சகதர்மிணியின்  தங்கை. அவருக்கு திருமணம் ஆகும் போது அவள் 16  வயதுப் பெண்.  மாமனார் வீட்டுக்கு  போனால்  பொண்டாட்டி கவனிக்கறாளோ இல்லயோ   மாமா  காபி சாப்டுங்க, மாமா  இந்தாங்க  பஜ்ஜி கொண்டாந்து வெச்சிருக்கேன் சாப்பிடுங்க  என்றும் அவ்வப்போது  அவரைப் பார்த்துப் பார்த்து அக்கா புருஷங்கிற  பாசத்தோட  கொஞ்சமும்  களங்கமில்லாம கவனிச்சு  எல்லாத்தையும்  செய்யற பாசமான  மச்சினி.

அவரும் வைதேகியை  தன்னோட  தங்கையாகவே பாவிச்சு  பாசம் செலுத்த  ஆரம்பித்தார். மாமனார்  ஒரு நாள்  மாப்பிள்ளை  நம்ம வைதேகிக்கும்  கல்யாணம்  செய்யலாம்னு பாக்கறேன்  என்றவுடன்

ஆமாம் மாமா  நானே  சொல்லணும்னு இருந்தேன்  என்னோட  வேலை செய்யறவர்  கண்ணன்  அவரோட  தம்பி  ரமேஷ் நல்லா  படிச்சிட்டு அரசாங்க  வேலையிலே இருக்கானாம். என்றார் ராஜகோபாலன்.

அதே போல்  தன் வீட்டிலேயே பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்து அந்தத் திருமணத்திலே  மாப்பிள்ளை என்கிற  பந்தாவெல்லாம் இல்லாமல்  மாமனாரையும்  தன்னுடைய தகப்பனைப் போலவே  நினைத்து  அவர்கள் வீட்டையும்  தன் வீட்டைப் போல  நினைத்து  எல்லா காரியங்களையும்  இழுத்துப் போட்டுக்கொண்டு  செய்து  கல்யாணத்தை  நிறைவாக நடத்தியவர்  ராஜ கோபாலன்.

மாமனார்   அவர் கையைப் பிடித்துக்கொண்டு  மாப்பிள்ளே  நீங்க  என் பிள்ளை  மாதிரி   எல்லாத்தையும்  நல்லா  நடத்திட்டீங்க.  அப்பிடியே  வைதேகியை  அவங்க புகுந்த வீட்டுக்கு  கொண்டு போயி  நீங்களும் என் பொண்ணு கனகாவும்தான்  விட்டுட்டு வரணும்  என்றார். அதெல்லாம் நாங்க  பாத்துக்கறோம்  நீங்களும் கூட வாங்க  என்றபடி  வைதேகியின் புருஷன் ரமேஷ் வீட்டுக்கு  அழைத்துப் போய்  அவர்களை விட்டுவிட்டு விருந்தும் உண்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அட  காலம் எவ்ளோ வேகமா ஒடுது  அதுக்குள்ளே  வைதேகிக்கே  60  வயசாயிடிச்சா!

அது மட்டுமா  இரண்டு வருஷத்துக்கு  முன்னாலே  வைதேகியோட  புருஷன்  திடீர்ன்னு  ஹார்ட் அட்டாக்கிலே  போனதும்   குழந்தை மாதிரி வைத்திருந்த  வைதேகியின் நிலையை  எண்ணிக் கலங்கியதும் அவர் நினைவுக்கு வந்து அவர் மனதை சலனப்படுத்தியது.

ஆனாலும்  இங்கே  வந்து  விழாவிலே கலந்து கொண்ட போது  வைதேகி  அவளுடைய குழந்தைகள்  யாருமே  இறந்து போன ரமேசைப் பற்றிய  கவலையே  இல்லாமல்  மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

மனுஷன்  இருக்கறவரைக்கும் தான்  மதிப்பு   பல சமையத்திலே  இருக்கும் போதே  மதிப்பு இல்லாம போயிடறதும் உண்டு  என்று நினைத்துக் கொண்டு

இந்தப் பொம்பளைங்களே  இப்பிடித்தான் புருஷன் போயிட்டான்னா  அதோட  தொல்லை விட்டுதுன்னு  மறந்துருவாங்க  என்று நினைத்துக் கொண்டார்.

விழா  இனிதே   முடிந்தது.  வாங்க  மாமா  சாப்பிட உக்காருங்க என்று வழக்கம் போல்  உபசரித்தாள் வைதேகி.

சாப்பாடு   முடிந்து  சரிம்மா  நாங்களும் கிளம்பறோம்   இன்னும் அவ்ளோ தூரம் போகணும்  என்றபடி கிளம்ப யத்தனித்தார் ராஜ கோபாலன்

ஒரு பெண்மணியும் அவளுடைய  புருஷனும்  நாங்களும் கிளம்பறோம்என்றபடி கிளம்பினார்கள்

அந்தப்  பெண்மணி  இதே மாதிரி  எங்க வீட்டிலேயும்  ஒரு விழா ஏற்பாடு  செய்யறோம்  அடுத்த  மாசம்  எல்லாரும் வந்திடுங்க  என்றாள்

வைதேகி  வேகமாக  வந்து  இன்னொரு வாட்டி  அப்பிடி சொல்லாதே  இதே மாதிரி  விழா  யார் வீட்டிலேயும் வரவேண்டாம்

எனக்குதான் தெரியும்  என் புருஷன்  ரமேஷ்  இல்லாத  வீடு எப்பிடி வெறிச்சோடிக் கிடக்குன்னு  அந்தத் தனிமையை இனிமே யாரும் அனுபவிக்க வேண்டாம்  . உங்க  வீட்டிலே  வேற மாதிரி  விழாக் கொண்டாடுங்க  எல்லாரும் வருவாங்க  என்றாள் கண்ணில் பொங்கி வந்த  ஒரு துளிக் கண்ணீரை  முந்தானையால் துடைத்துக் கொண்டு

நம்ம  நாட்டுப் பொண்களுக்கு  புருஷன் மேலே இருக்கற  பாசமும்  அன்பும் வேற  யாருக்கும் வராது. பத்தினிங்கற  சொல்லுக்கே  இலக்கணம்  இவங்கதான். இவங்களோட  மனசாழத்தை  கண்டு பிடிக்கவே  முடியாது  என்று உணர்ந்தார் ராஜகோபாலன்.

அவர்  நேராக வைதேகியிடம் சென்று நாங்க  வரோம்  . நாங்க  இருக்கோம் எப்போ வேணா நீ அங்கே வந்துடு தனியா அவதிப்படாதே நீயும் எங்க வீட்டுப் பொண்ணுதான்  புரியுதா  என்றவர்  சமாளித்துக்கொண்டு  சரி  நாங்க கிளம்பறோம் என்று கிளம்பினார்

அன்புடன்

தமிழ்த்தேனீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *