க.பாலசுப்பிரமணியன்

 

ஐந்தாம் பத்து

anjanayer

கருணைக் கடலே ! கண்கள் போற்றி

காக்கும் வலிமையே ! கரங்கள் போற்றி  !

காற்றின் மைந்தா ! கால்கள் போற்றி !

காத்திட வருவாய் ! கண்மணி போற்றி !

 

வானர வடிவம், மானுட தேகம்

வானவர் குலத்தின் வளர்பிறைத் தெய்வம்!

வல்லவர் நல்லவர் தேடிடும் ஞானம்

வடையையும் மாலையாய்  அணிந்த வினோதம் !

 

குளிர்ந்த பார்வை கூப்பிடும் அருகில்

குறைவில்லா அழகு கூடிய நிறத்தில்

குழந்தையின் சிரிப்பாய் குவிந்த முகத்தில்

குறைகள் மறையும் பார்த்த தருணத்தில்.!

 

பணிவுக்குப் பாசுரம் நீ படைத்தாய் !

பண்புக்கு இலக்கணம் நீ கொடுத்தாய் !

பக்திக்கு ஆலயம் நீ அமைத்தாய் !

பரமனின் உறவை நெஞ்சினில் வைத்தாய் !

 

சீதையின் தலைவனைச் சிந்தையில் வைத்து

சிந்தையில் என்றும் பக்தியை வைத்து

பாதையில் என்றும் பண்பினை வைத்து

சேவடி   தன்னில் சேவைகள் செய்தாய் !

 

குறை தீர்க்க முன் நிற்கும் குணசீலா !

நிறை நிலவாய் அருள்சுரக்கும் ஆனந்தா !

மதி கொடுத்து விதிகடத்தும் வல்லோனே !

கதி  கொடுத்து வினைதீர்ப்பாய் நல்லோனே !

 

வானில் செல்கையில் வானுக்கு அழகு

நீரினைத் தாண்டிட  நீருக்கு அழகு

நிலத்தில் நின்றால் நீயே அழகு

நித்தம் உந்தன் நினைவே அழகு !

 

வாரணம் ஆயிரம் தோளுடை வலிமை

பாரினில் நிகரில்லை பணிவின் மேன்மை

நீருடை மேகமாய் நித்தமும் அருள்வாய்

வாலுடை வேந்தே! வருவாய் விரைந்தே !

 

அலையாத மனமும் அசையாத நினைவும்

அன்பான உணர்வும்  அருளுடை நெஞ்சும்

அழியாத செல்வமாய் , ஆரியன் நினைவும்

அருளிட வேண்டினேன் அஞ்சனை மகனே !

 

கண்களில் பக்தியும் கைகளில் சக்தியும்

மனத்தில் வேகமும் மதியில் யூகமும்

சொல்லில் பண்பும் சோர்விலா அன்பும்

சேர்த்திட அருள்வாய் சீதையின் செல்வா !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *