அனுமன் அறுபது – (ஒரு கவிதை மாலை – 5)
க.பாலசுப்பிரமணியன்
ஐந்தாம் பத்து
கருணைக் கடலே ! கண்கள் போற்றி
காக்கும் வலிமையே ! கரங்கள் போற்றி !
காற்றின் மைந்தா ! கால்கள் போற்றி !
காத்திட வருவாய் ! கண்மணி போற்றி !
வானர வடிவம், மானுட தேகம்
வானவர் குலத்தின் வளர்பிறைத் தெய்வம்!
வல்லவர் நல்லவர் தேடிடும் ஞானம்
வடையையும் மாலையாய் அணிந்த வினோதம் !
குளிர்ந்த பார்வை கூப்பிடும் அருகில்
குறைவில்லா அழகு கூடிய நிறத்தில்
குழந்தையின் சிரிப்பாய் குவிந்த முகத்தில்
குறைகள் மறையும் பார்த்த தருணத்தில்.!
பணிவுக்குப் பாசுரம் நீ படைத்தாய் !
பண்புக்கு இலக்கணம் நீ கொடுத்தாய் !
பக்திக்கு ஆலயம் நீ அமைத்தாய் !
பரமனின் உறவை நெஞ்சினில் வைத்தாய் !
சீதையின் தலைவனைச் சிந்தையில் வைத்து
சிந்தையில் என்றும் பக்தியை வைத்து
பாதையில் என்றும் பண்பினை வைத்து
சேவடி தன்னில் சேவைகள் செய்தாய் !
குறை தீர்க்க முன் நிற்கும் குணசீலா !
நிறை நிலவாய் அருள்சுரக்கும் ஆனந்தா !
மதி கொடுத்து விதிகடத்தும் வல்லோனே !
கதி கொடுத்து வினைதீர்ப்பாய் நல்லோனே !
வானில் செல்கையில் வானுக்கு அழகு
நீரினைத் தாண்டிட நீருக்கு அழகு
நிலத்தில் நின்றால் நீயே அழகு
நித்தம் உந்தன் நினைவே அழகு !
வாரணம் ஆயிரம் தோளுடை வலிமை
பாரினில் நிகரில்லை பணிவின் மேன்மை
நீருடை மேகமாய் நித்தமும் அருள்வாய்
வாலுடை வேந்தே! வருவாய் விரைந்தே !
அலையாத மனமும் அசையாத நினைவும்
அன்பான உணர்வும் அருளுடை நெஞ்சும்
அழியாத செல்வமாய் , ஆரியன் நினைவும்
அருளிட வேண்டினேன் அஞ்சனை மகனே !
கண்களில் பக்தியும் கைகளில் சக்தியும்
மனத்தில் வேகமும் மதியில் யூகமும்
சொல்லில் பண்பும் சோர்விலா அன்பும்
சேர்த்திட அருள்வாய் சீதையின் செல்வா !