-மீ.விசுவநாதன்

(இன்று ஸ்ரீராமநவமி தினம் (15.04.2016))

மானுடனாய்ப் பிறந்த மாலின்
   –வாழ்வதனைக் காதை சொல்லும்!
தானுடைய எண்ண வீம்பும்
   –தம்பியரின் நல்ல பண்பும்              rama
வானுயர ஓங்கி நிற்கும்
   –வானரத்தின் ஞான வாக்கும்
தேனுயிராம் காதல் கொண்ட
   –தெய்வமகள் தேர்வு முண்டு! 

வான்பறக்கும் கழுகும், கங்கை
   –மாலுமியாம் குகனும், காட்டில்
தானிருக்கும் கரடி யென்ற
   –சாம்பவனும், பொன்போல் மாய
மானிருக்கும் பர்ண சாலை
   –மாமுனிகள் வாச முண்டு!
கூனிருக்கும் கொள்கை கொண்ட
   –கூனிகளும் இருப்ப துண்டு! 

காமனுக்கே உள்ளம் தந்து
   –காலனிடம் சென்றோ ருண்டு!
மோகமதைக் கொன்று விட்ட
    –மூத்தவர்கள் நிறைய வுண்டு!
சேமமதைப் பெறுவ தற்குச்
  –சீதையவள் கருணை யுண்டு!
ராமனது கதையில் தானே
   –ரத்தினமாய் தர்ம முண்டு!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *