தோழா…….விமர்சனம்! (திரை)
சுரேஜமீ
இந்த ஒரு சொல் நம் இதயத்தைச் சட்டெனத் தொட்டுவிடும் அன்பின் வெளிப்பாடு என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஏதோ காரணங்களால், இன்று நாம் அதைத் தொலைத்துவிட்டோமோ என ஏங்கும் நேரத்தில்,
அந்த ஒரு சொல்லை வைத்து, தொலைத்த இடத்தில் நம்மைத் தேட வைத்திருக்கிறார் இயக்குனர் வசி அவர்கள்!
மாற்றான் தோட்டத்து மல்லிகையானாலும் (The Intouchables), கதையின் கருவை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை நம்முடையதன்றோ!
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதன் வலிமையைப் பறைசாற்றிய இந்த மண்ணிற்கு,
மீட்டு எடுத்துவந்து, வாழ்க்கையின் அவசியம் பணமல்ல; மாறாக மனதைப் புரிந்து கொள்ளும் ஒரு புனிதமான உறவுதான் என்பதைத் தெளிவாகக் காட்சிகளில் மட்டுமல்லாமல், வார்த்தைகளிலும் பதிவு செய்த இயக்குனருக்கு பாரட்டுக்கள்!
மிக நேர்த்தியான மற்றும் இயல்பான நடிப்பால் தன் பாத்திரங்களைக் கையாண்ட நாகார்ஜுனா, கார்த்திக் மற்றும் தமனாவிற்கு வாழ்த்துக்கள்!
காதலுக்குத் தேவை காணும் கவர்ச்சி அல்ல; கண்ணில் துளி நீர் வந்தாலும், அதன் வலியைப் புரிந்து கொள்ளும் மனம்தான் என்ற புரிதலை வலியுறித்திய வசனங்கள்
காதலை மேன்மைபடுத்தி இருக்கிறது!
அடுத்து ஒரு நிகழ்வு, ஒரு மனிதனின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் அந்த நிலை ஒவ்வொருவர் வாழ்விலும் நிச்சயம் ஒரு தடவையாவது வந்து செல்வதுதான் வாழ்க்கை. ஆனால், அந்த நிலையிலிருந்து மீள, நமக்குத் தேவை ஒரு நல்ல துணை!
அதையும் வள்ளுவர் அழகாகச் சொல்லுவார்…
கேட்டினும் உண்டோர் உறுதி…..என்று!
அத்தகைய நட்பிற்கு அடையாளமாக ஒரு பாத்திரத்தை அமைத்து, அதற்கு நேர்த்தியாக நடிகர்களைத் தெரிவு செய்து,
இந்த வேகமான வாழ்வில், தொலைந்து போன நட்பிற்கு ஒரு இலக்கணத்தை மீட்டு எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்! மொத்தத்தில் வழிதவறும் வாழ்கைக்கு எது தேவை என்பதையும்;
சில மணிநேர மகிழ்ச்சிக்குத் தேவையான காட்சி அமைப்பையும்,
பொழுதுபோக்கிற்கு ஏற்ற பாடல் காட்சிகளையும்,
எல்லை மீறாமல் எண்ண ஓட்டத்தைப் பதிவு செய்த மொத்த படக் குழுவிற்கும் வாழ்த்துச் சொல்ல
ஒவ்வொரு ரசிகனும், ரசிகையும் தவற மாட்டார்கள்!
இதுதான் ‘தோழா’வின் வெற்றி!
அவசியம் பார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய ஒரு நல்ல ப(பா)டம்!
– சுரேஜமீ