திருக்குறளில் மனித வாழ்வியல் கூறுகள்

0

— க. பிரகாஷ்.

குறள்திருக்குறள் நீதி நூலாக மட்டுமல்லாமல் ஒரு வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்கும், 21 ம் நூற்றாண்டிலுள்ள புதிய தலை முறையினருக்கும் வழிகாட்டும் ஒரு அறநூலாகும். வள்ளுவத்தின் மேன்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லை கடந்த மனித வாழ்க்கையை வளப்படுத்தும் அளவிற்குச் சிறந்து விளங்குகிறது.

வள்ளுவம் தான் தோன்றிய காலத்தோடு நின்று விடாமல் இனி வரும் தலைமுறையினருக்கும் பொருந்தும் படியாக மனிதனுக்கு வாழச்சொல்லிக் கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல் வாழ்க்கையின் மகத்துவத்தை விளக்குகிறது. வள்ளுவம் இலக்கியம் என்னும் நிலையில் நின்று விடாமல் மனித வாழ்க்கையின் அறநெறி சாராம்சத்தையும் பதிவு செய்கின்றது.

”இன்பம் பொருள் அறம் வீடென்னும் இந்நான்கும்
முன்பறியச் சொன்ன முதுமொழிநூல் – மன்பதைகட்
குள்ள அரிதென்றவை வள்ளுவர் உலகம்
கொள்ள மொழிந்தார் குறள்”. (நரிவெரூஉத்தலையார்)

இன்பம் பொருள் வீடு என்னும் இந்நான்கும் மன் பதைகட்கும் முன்பு அறியச் சொன்ன முது மொழிநூல் உள்ள அரிது என்று இன்பம் முதலி இந்நாற்பொருள் இயல்புகளையும் மக்கள் பரப்புக்கு அக்காலத்தில் அறியும் வண்ணம் சொல்லப்பட்ட பழமொழி வேதமானது ஓதி உணரப்படுதற்கு அரிது என்று, வள்ளுவர் அவை உலகம் கொள்ள குறள் மொழிந்தார். மனித வாழ்க்கை தலைசிறந்த அறமாக விளங்கும் அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறியவைத்துப் பயனுடைய வாழ்க்கையை வாழ வள்ளுவம் நன்கு வழி காட்டுகிறது.

அன்பு, பண்பு, இன்சொல், நன்றியறிதல் என மனித மாண்புகளை விளக்குகிறது. மனிதர்களின் வாழ்க்கை நெறியை உயர்த்தும் கோட்பாடாக வள்ளுவம் நல்லறங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது.

ஆன்மீக அறம்:
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” – (குறள் – 1)

கடவுளை அறிவு, ஆற்றல் அப்பாற்பட்ட நிலை என்னும் கருதுகோள் நிலையில் வைத்து மனித பெருமைக்கும், சமுதாய அமைதிக்கும் வள்ளுவர் குறள் வழிக் குரல் கொடுத்துள்ளார். “உலகு“ என நினைவூட்டி உலகளாவிய நோக்கத்தை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளும் மனிதனுக்கு அவனது மனமாற்றத்திற்கு வள்ளுவம் ஒரு புதிய ஆன்மீக அறத்தைத் தந்துள்ளது.

வள்ளுவம் கடவுளை நம்புகிறது. ஆனால் அது ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள், கோட்டைகள் இல்லை ஆனால் அது பேரறிவு, வாய்மையான அறிவு, குணங்களின் திருவுரு, இன்பத்தின் திருவுரு, அன்பின் திருவுரு, அறத்தின் அடையாளம் என்று கருதப்படுகிறது.

ஈதல் அறம்:
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
ஊதியம் இல்லை உயிர்க்கு”

மனிதப் பண்பை உணர்த்தும் ஒரு நெறி ஈதல் அறமாகும். ஈகை என்பது பிறருக்குக் கொடுத்து மகிழும் மனம்.அவ்வாறு கொடுத்துதவும் போது மனிதன் பக்குவம் அடைந்தவனாகி விடுகிறான். போட்டியும், பொறாமையும் அடுத்தவர் பொருளைக் கவரும் எண்ணமும் மனிதனை மிருக நிலைக்குக் கொண்டு செல்லும் ஈகைக் குணம் ஒன்றே மனிதனை மாண்புடையவனாக்கும். வள்ளுவர் ஈகை குணமே உயிரின் ஊதியம் என்பர். கொடுத்துப் புகழடையும் வாழ்க்கையே பயனுடைய வாழ்க்கை என்பதைக் குறள் உணர்த்துகிறது.

காதல் அறம்:
காமத்துப்பால் அறவழிப்பட்ட காதலுறவுகளை எடுத்துரைத்துள்ளது. காதலையும், ஆண் – பெண் உறவுகளையும் வள்ளுவர் நெறிப்படுத்தியுள்ளார். காமத்துப்பாலில் காதல், காதலர் உறவுநிலை ஆகியவற்றை இனிமை பயக்கப் பாடி அன்பெனும் நெறிக்குள் மனங்களின் சங்க மருததிற்குள், மாசுபடாத வாழ்வியல் படி நிலையை வடித்துத் தந்துள்ளார். களவையும் கற்பையும் வகைப்படுத்தி மனிதம் அடையும் வாழ்க்கை நெறியை வள்ளுவா் தந்துள்ளார்.

இல்வாழ்க்கை:
“பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள் – 44)

பழி அஞ்சிப் பார்த்து ஊண் உடைத்தாயின் ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்ததற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின், வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் அவனது மரபுவழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.

அன்பும் அறனும்:
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” (குறள் – 45)

இல் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் ஒருவனது இல்லற வாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத் துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்தப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின், அது பண்பும் பயனும் அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன் விளைவுமாகும்.

கணவன் மனைவியரிடைப்பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. அன்பு பண்பும், அறம் பயனும் இல்வாழ்க்கை உரித்தே ஆகும்.

இல்லவள் மாணாக் கடை:
“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை? (குறள் -53)”

இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்புடையவளானால் அவனுக்கு இல்லாதது எது? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

அடக்கமுடைமையின் சிறப்பு:
“பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை” (குறள் – 132)

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும் பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும். ஒரு மனிதன் தன் வாழ்வில் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதையும், எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதையும் வாழ்க்கை நெறிமுறைகளையும், வாழ்வியல் கூறுகளையும் வழுவாகவும், செழுமையாகவும், செதுக்கியுள்ளார் திருவள்ளுவர்.

பார்வை நூல்கள்:
1. திருக்குறள் – வள்ளுவர் கண்ட தத்துவம் – தெ.பொ.மீ.
2. திருக்குறள் – தமிழ் மரபுரை – ஞா.தேவநேயப் பாவாணர்
3. மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம் – ப.மருதநாயகம்
4. புதிய நோக்கில் திருக்குறள் பாயிரம் – எஸ்.முத்துகிருஷ்ணன்

_____________________________________

க. பிரகாஷ் எம்.ஏ, எம்ஃபில்,
தமிழ்த்துறை
தொழில்நுட்ப கள ஆய்வு பணியாளர்
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *