நலம்.. நலமறிய ஆவல்! (1)
நிர்மலா ராகவன்
1 காதல் திருமணம்
ஒரு தாயின் ஆதங்கம்: ஆறு மாதங்களுக்குமுன், என் மகன் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளையே மணக்க விரும்புவதாகவும் கூற, என் கணவர், `அப்படிச் செய்வதானால், இனி நீ இந்த வீட்டுக்குள் நுழையக்கூடாது!’ என்று இரைந்தார். அவனும் கோபித்துக்கொண்டு போய்விட்டான்.
சமீபத்தில், அவன் எல்லாருக்கும் தனது கல்யாணப் பத்திரிகை கொடுத்திருப்பதை ஒரு நண்பர்மூலம் அறிந்தோம். எங்களுக்கு அழைப்பில்லை. என் கணவர் அழுதபடி இருக்கிறார்.
அலசல்: திரைப்படங்களிலும், புதினங்களிலும் காதலின் மகத்துவத்தைப்பற்றி அறியும் இளைஞர்கள் காதல் கல்யாணத்தை விரும்புவதில் என்ன ஆச்சரியம்? ஆனால், இவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை. பெரியவர்கள் பார்த்து நிச்சயித்தாலும், காதலித்து மணந்தாலும், இரண்டு ஆண்டுகள்தாம் புது மோகம் நிலைக்கும். அதன்பின், எல்லா குடும்பத்திலும் ஏற்படும் சண்டை சச்சரவுகள் தவிர்க்க முடியாதவை.
வாழ்நாள் பூராவும் சேர்ந்து வாழப்போகிறவர்கள் கணவனும் மனைவியும்தானே! `தனக்கு இவள்தான் சரி!’ என்று உங்கள் மகன் முடிவெடுத்ததை உங்கள் கணவர் ஏன் அப்படி வன்மையாக எதிர்த்திருக்க வேண்டும்?
மகன் வளர்ந்திருந்தாலும், எல்லாவற்றிலும் தான் சொல்வதுபோலவே நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, மிரட்டுவதோ சிறுபிள்ளைத்தனம். தனது எல்லா விருப்புவெறுப்புகளையும் ஒதுக்கிவிட்டு, தந்தை சொற்படியே நடந்துவந்தால், நாளடைவில் வெறுமைதான் மிஞ்சும்.
உங்கள் மருமகள் ஒரு பேரக்குழந்தையைப் பெற்றுக் கொடுத்தால் உங்கள் வீம்பு மறைந்துவிடக்கூடும். ஆனால், தன் கல்யாணத்துக்கு பெற்றோர் வந்து ஆசீர்வதிக்கவில்லையே என்று மகனும், அவனுடைய திருமணத்தைப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லையே என்று நீங்களும் எக்காலத்திலும் வருந்த நேரிடும்.
பொதுவாக, பெற்றோர் மறுக்க மறுக்க, இளைஞர்களின் பிடிவாதம்தான் அதிகரிக்கும். அப்படியே ஒரு பெண் தங்கள் குடும்பத்திற்கு ஏற்றவளில்லை என்று அவர்கள் நம்பினால், அக்காரணத்தைப் பொறுமையாக விளக்க வேண்டும். `நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன், இனி உன் பாடு!’ என்று இருந்தால்தான் எக்காலத்திலும் நிம்மதி.
மருமகளுக்கும் என்றுமே உங்கள்மீது கசப்பு இருக்கும் — தன்னை ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொள்ளவில்லையே என்று. பெற்றோர் சம்மதத்துடன் மணந்தால், இரு தரப்பிலும் உறவு சுமுகமாக இருக்குமே!
(ஆறுமோ மனம் என்ற என் சிறுகதை வெளியானதும் ஒரு மாது தொலைபேசியில் என்னை அழைத்துப் பேசியதை ஒட்டியது).
தொடருவோம்