நிர்மலா ராகவன்

ஊனம் யாருக்கு?

நலம்-1-1
என் உறவினரான நளினி முதன்முறையாகக் கருவுற்றிருந்தபோது, `இரட்டைக் குழந்தைகள்!’ என்று மருத்துவர் கூற அவள் பெரிதும் மகிழ்ந்தாள்.

எட்டாம் மாதத்தில், குழந்தைகள் முன்போல் வயிற்றில் உருளவில்லையே என்று சந்தேகப்பட்டு தாயிடம் தெரிவிக்க, அடித்துப் பிடித்துக்கொண்டு பரிசோதனைக்குப் அழைத்துச் செல்லப்பட்டாள். ஒரு குழந்தை வயிற்றிலேயே இறந்து மூன்று நாட்களாகி இருந்தன. இன்னொன்றை வயிற்றைக் கீறி எடுத்தார்கள். இது அந்தக் குழந்தை லல்லியின் கதை.

பிற குழந்தைகளைப்போல் லல்லி குப்புறப் படுக்கவில்லை, தவழவில்லை, உட்காரவில்லை. அண்ணன் அதைச் சுட்டியபோது, நளினி ஆத்திரத்துடன், `எல்லாக் குழந்தைகளும் ஒரேமாதிரி இருக்குமா?’ என்று அவர்கள் வாயை அடைத்துவிட்டாள். அவளுக்கும் உள்ளூர பயம் இருந்திருக்க வேண்டும், ஏதாவது அசம்பாவிதமாக ஆகிவிடப்போகிறதே என்று.

ஒரு வயதுக்குமேல் ஆயிற்று. அப்போதும் லல்லி எழுந்து நிற்கவோ, நடக்கவோ இல்லை. ஒரே இடத்தில் சாய்ந்து உட்கார்ந்திருப்பாள். வேறு வழியின்றி மருத்துவர்களை நாட, `அவளுடன் இருந்த கரு இறந்தபோது, லல்லியின் மூளைக்குப் பிராணவாயு செல்லாததால் சேதம் உண்டாகிவிட்டது. இனி அவளால் சுயமாக நடக்க முடியாது!’ என்றுவிட்டார்கள்.

சிறு குழந்தையாக இருந்தபோது, அவளைத் தூக்கிக்கொண்டுபோய் குளிக்கவைப்பது, பள்ளிக்கூடத்தில் விடுவதெல்லாம் எளிதாக இருந்தது. ஆனால், எத்தனை காலம்தான் இப்படியே விடுவது! ஓரளவு நடந்தால்கூட போதுமே என்று ஐந்து வயதில் லல்லியை மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றார்கள் — மருத்துவ உதவி நாடி.

அடிக்கடி போய் அறுவைச் சிகிச்சை செய்ததில் இப்போது ஏதோ நடக்கிறாள். உட்காருவதும், எழுந்திருப்பதும் சிரமம்தான். தனிமையிலேயே உட்கார்ந்திருக்க நேரிட்டதால், ஓயாது படிக்கும் நற்பழக்கம் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் அவள் உரையாடுவதைக் கேட்டால் பிரமிப்பாக இருக்கும். அத்துணை புலமை!

ஒரு முறை நானும் என் மகளும் லல்லியைப் பேரங்காடி ஒன்றிற்கு அழைத்துப் போயிருந்தோம். `கால் வலிக்கிறது!’ என்று தரையில் உட்கார்ந்துவிட்டாள். அதன்பிறகு எழுந்திருக்க அவள் பட்டபாட்டைப் பிறர் வேடிக்கை பார்த்துக்கொண்டே போனார்கள்.
`எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள்!’ என்று வருத்தமாக லல்லி சொன்னபோது, நாளிதழ் ஒன்றில், `நாங்களும் மனிதர்கள்தானே! எங்களை ஏன் அப்படி உற்றுப் பார்க்கிறீர்கள்?’ என்று ஊனமடைந்தவர் ஒருவர் மனம் வருந்தி கோரிக்கை எழுப்பி இருந்தது நினைவில் எழுந்தது.

`நாமும்தான் மற்றவர்களைப் பார்க்கிறோம், யார் என்ன ஆடையணி அணிந்து வந்திருக்கிறார்கள் என்று! அதற்காகத்தானே எல்லாரும் வெளியே வருகிறார்கள்!’ என்று அவளைச் சமாதானப்படுத்தினேன்.

லல்லிக்குப் பதினாறு வயதானபோது, சகமாணவன் ஒருவன், `எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கிறது. ஒரே காதல்!’ என்றானாம்.

அவன் கேலியாக அப்படிக் கூறினானா என்றெல்லாம் இவள் யோசிக்கவில்லை. சற்றும் அயராது, `சரி. பள்ளி முதல்வர் அறைக்குச் செல்வோம். நீ என்னிடம் சொன்னதை அவரெதிரே சொல்லு. உன்னை பள்ளியைவிட்டே துரத்துவார்! எனக்குப் படிப்புதான் முக்கியம்!’ என்றாள். பிறந்ததிலிருந்தே அனுபவித்த இயலாமை ஒருவரது துணிச்சலை அதிகரிக்கவும் செய்யும், இழக்கவும் செய்யும். அந்த விதத்தில் லல்லி அதிர்ஷ்டசாலிதான்.

லல்லிக்கு இப்போது பதினெட்டு வயது. கல்லூரியில் படிக்கிறாள். ` ‘என்னுடன் படிப்பவர்கள், `உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?’ என்று கேட்கிறார்கள்!’ என்று அவள் பேச்சுவாக்கில் சொன்னபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

லல்லி அதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டிருக்கிறாள். `நான் போன வருடமே லைசன்ஸ் வாங்கிவிட்டேன். மைவி (MYVI, மலேசியத் தயாரிப்பான சிறிய கார்) வீட்டில் இருக்கிறது என்று பொய் சொன்னேன்!’ என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தாள். அவள் சிரிப்பில் வருத்தம் சிறிதுமில்லை. `என்னாலும் பிறரைச் சமாளிக்க முடியும்!’ என்ற மனஉறுதிதான் காணப்பட்டது.

எனக்குப் பொறுக்கவில்லை. முழங்கைகளுக்குக்கீழ் ஒரு வளையத்தில் கைவிட்டபடி, இருபுறமும் ஊன்றுகோல் வைத்து நடக்கவேண்டிய நிலையிலிருந்த பெண்ணிடம் துளிக்கூட இரக்கமில்லாது இப்படியா பேசுவார்கள்!

`நானாக இருந்தால், `என்னை ராணிமாதிரி அழைத்துப்போக பிறர் இருக்கும்போது, நான் எதற்கு கண்ணைக் கெடுத்துக்கொண்டு கார் ஓட்டவேண்டும்?’ என்றிருப்பேன்!’ என்றேன் நான். அவளை மேலும் ஆதரிக்கும் நோக்கத்துடன், `இப்போது தானே இயங்கும் கார்கள்கூட வந்துவிட்டன! நாம் வழி சொன்னால் போதும்,’ என்றேன்.

`GO RIGHT, GO LEFT!” என்று சிரித்துவிட்டுத் தன்பாட்டில் பேசிக்கொண்டு போனாள். `உனக்குக் காதலன் யாருமில்லை?’ அவள் மனத்தைப் புண்படுத்தவென கேட்கப்பட்ட மற்றொரு கேள்வி.

`அதற்கு நான் என்ன சொன்னேன், தெரியுமா? `எனக்குப் புத்தகங்கள்மேல்தான் காதல்!’ என்று அவர்கள் வாயை அடைத்தேன்!’ மீண்டும் பெரிய சிரிப்பு.

(என் பேரனுக்குப் பதினாறு வயதாகியிருந்தபோது, அவனுடைய நண்பர்கள் அவனைக் கலந்தாலோசித்தார்கள்: `நாம் இப்போது girlfriend வைத்துக்கொள்ள வேண்டுமா?’

அந்த அதிமுக்கியமான கேள்விக்குப் பதிலாக, `நாம் அவர்களை சினிமாவுக்கு அழைத்துப்போக வேண்டும், சாப்பிட வாங்கிக் கொடுக்க வேண்டும். தண்டச்செலவு! போதாக்குறைக்கு, பெண்கள் வாய் ஓயாமல் பேசுவார்கள். அதைவேறு சகித்துக் கொண்டிருக்க வேண்டும்!’ என்றானாம் அந்த தீர்க்கதரிசி! )

அந்த நினைவை லல்லியிடம் நினைவுகூர்ந்தேன்.

`அதானே! படிக்கும் வயதில் எதற்கு காதல்?’ என்றாள் வயதுக்கு மீறிய அறிவுக்கூர்மையுடன்.

இப்பெண்ணுக்கோ சில அவயவங்களில்தான் கோளாறு. ஆனால் உடல் முழுமையாக இருந்தும், சிலர்..! என்ன சொல்வது, போங்கள்!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *