கிருத்திகா கீர்த்தனா

‘காலேஜ் விட்டதும் முதலில் யாழினியைப் பார்க்க வேண்டும்’ மனதுக்குள் எண்ணியவனாக அரைகுரையாக பாடத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான். கல்லூரி முடிந்ததும் யாழினியே கௌதமை பார்க்க வந்துவிட்டாள்.

மாலை வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்காற்றை வாரி வழங்கி கொண்டிருந்தது, வேப்பமரம். அதன் கீழ் அமர்ந்து இருவரும் மாற்றி மாற்றி யோசித்து கொண்டிருந்தனர்.

“கௌதம், நாம கண்டிப்பா வீட்டை விட்டுப் போகனும….? இன்னொரு முறை யோசிச்சுப் பாரேன்”

“இல்லை, யாழினி. நான் பலதடவை யோசிச்சுப் பார்த்துட்டேன்…… இதைத் தவிர வேற வழி இல்ல……”

“இருந்தாலும்… அப்பாகிட்ட நாம பேசி புரிய வைக்க முடியாதா?.. நாம போனபிறகு அவர் இதே மாதிரி மனசை மாத்திக்காமல் இருந்தா என்ன செய்றது…… அம்மாவுக்கும் இதனால பிரச்சனை வரலாம்….”

“நீ இனிமே இதப் பத்தி பேசாத….. நான் முடிவு பண்ணிட்டேன்….நாளைக்கு நாம கிளம்பறோம்….உனக்கு தேவையானதெல்லாம் எடுத்திட்டு தயாரா இரு…….”

“ம்ம்ம்……….. நீயும் அப்பாவப்போலவே பிடிவாதமா இருக்க….. நாளைக்கு சாயந்திரம்   5 மணி ட்ரெய்னுக்கு கிளம்பிடலாம்….”

”இதுதான் சரி…..இப்ப வா வீட்டுக்குப் போகலாம்…”

 மறுநாள்…  யாழினி வீட்டில்…..

யாழினியின் அப்பா, முருகானந்தம் கண்களில் வருத்தம் நிரம்ப எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா, சிவகாமி செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தாள். எதிர்பாராதவிதமாக யாழினியின் அறையில் ஏதோ எடுக்கச் சென்றவரின் கைகளில் அந்தக் கடிதம் கிடைத்தது.

“அப்பா, நான் உங்களை ஏமாற்றிவிட்டுச் செல்வதாக நினைக்க வேண்டாம். உங்களின் பிடிவாதத்தை மாற்ற நான் எடுத்துக் கொண்ட சிறிய முயற்சியே இது.. கௌதமும், நானும் உங்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம். உங்களிடம் இருந்து நல்ல முடிவு வரும் வரை காத்திருப்போம். ஆனால் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் திரும்பி வர மாட்டோம்…. இது உறுதி. எங்களைத் தேட வேண்டாம். உங்கள் முடிவே, எங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்”

                                                      இப்படிக்கு,

உங்கள் பாசத்திற்குரிய மகள்

         யாழினி….

         கடிதத்தைப் பார்த்ததில் இருந்து,  “இனியும் உங்களை புரிஞ்சிக்கலைனா, நான் ஒரு நல்ல அப்பாவா இருக்க முடியாது. இனி எந்தக்காலத்திலும் குடிக்க மாட்டேன்… இது சத்தியம்.. நீயும், கௌதமும் திரும்பி வந்துடுங்கம்மா….குடிப்பழக்கத்தால என் குடும்பம் சீரழியறத நான் இனி அனுமதிக்க மாட்டேன்”, எனக் கதறிக் கொண்டிருந்தார்.

சிவகாமியும் கண்களில் நீர் அரும்பியவளாக, “நீங்கள் எடுத்த முடிவு அவங்களை நம்மகிட்ட கொண்டு வந்து சேர்க்கும்….. நீங்க மனசை தளர விடாதிங்க…..அவங்க நிச்சயம் வந்துடுவாங்க…..” என ஆறுதல் கூறினாள்.

அவர் உண்மையாகவே திருந்திவிட்டார் எனப் புரிந்து கொண்டாள். அவருக்கு தெரியாமல் ரூமுக்குள் சென்று கதவைத் தாளிட்டாள். கௌதமுக்கு போன் செய்தாள்.

“ஹலோ…… கௌதம் நான் அம்மா பேசறேன்…….நீயும் உன் அக்கா யாழினியும் உங்க பெரியப்பா வீட்லருந்து கிளம்பி காலைல வந்துடுங்க……..உங்கப்பா உண்மையிலே மனசு மாறிட்டார்…..’இனி நான் குடிக்கவே மாட்டேன்’னு சத்தியம் பண்ணுனார்……நீ போட்ட ப்ளான் நல்லா வேலை செய்யுது…..”

”அம்மா… என்ன சொல்றீங்க….. நீங்க சொல்றது உண்மையா….. இதுக்காகத்தான நானும் அக்காவும் இவ்வளவு சிரமப்பட்டோம்.. நாளைக்கு காலைல வீட்டுக்கு வந்துடுவோம். இங்க பெரியப்பாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டோம்…

அப்பாவை குடியை நிறுத்தச் சொல்லி எத்தனையோ தடவை கேட்டுப் பார்த்தாச்சு…. கேட்கவே இல்லை. அவர் எங்க பேச்சைக் கேட்கலைனாலும் எங்க மேல அவருக்கு பிரியம் ஜாஸ்தி…. அதனாலதான் நாங்க இந்த மாதிரி ப்ளான் பண்ணுனோம்… அதாவது அவரை விட்டுட்டு போயிடுவோம்னு ஒரு பயத்தை ஏற்படுத்துனோம். இப்ப அதனாலதான் அவர் மனசு மாறியிருக்கார்…

இத விட சந்தோசம் நமக்கு வேற என்ன வேணும்….

இருந்தாலும்… நாங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க அம்மா……”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல…. என் பிள்ளைங்க எப்பவும் தப்பு பண்ண மாட்டாங்கனு தெரியும்…. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி இது உங்க ப்ளான்னு என்கிட்ட சொல்லாம இருந்திருந்தா…. நான் என்ன ஆகிருப்பேன்னு எனக்குத் தெரியல….”

“உங்களுக்கு ஒன்னும் ஆகாதும்மா…… அப்புறம் இந்த ப்ளானப் பத்தி அப்பாவுக்குத் தெரிய வேண்டாம்…..”

“நான் எதுவும் சொல்லல…..நீங்க சீக்கிரம் வந்துடுங்க….”

“சரிமா…. நான் போனை வைக்கிறேன்…”

இன்றைய குடிமகன்களை திருத்த இன்றைய குடிமகனின் திட்டம்…!!!!!!!!

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “இன்றைய குடிமகன்

  1. பாலசுப்பிரமணி பெரியவேட்டுவபாளையம் says:

    குடிமகன் என்ற வார்த்தைக்கு இருவேறு பொருள்படும் இக்காலத்தில் யாழினி மற்றும் கெளதம் இருவரையும் குடிமகனாகவும், முருகானந்தத்தை (குடி) மகனாகவும் இக்கதாபாத்திரத்தில் கொண்டுவந்து சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை காணவிரும்பும் கீர்த்தனாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *