வாழ்த்துகள், ஈழத் தமிழருக்கு அரணாகத் தொடர்வீர்களாக.
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு,
வணக்கம்.
வரலாறு காணாத வெற்றியைச் சுமந்து பூரிக்கும உங்களுக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேறக் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் ஈழத் தமிழரின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நெஞ்சாரத் தெரிவிக்கிறோம்.
தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் எதிர்காலம் யாவும் உங்கள் தலைமையில் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் தொடரும் என்பதில் ஈழத் தமிழருக்கு என்றும் நம்பிக்கை இருந்தே வந்தது.
தமிழக வாக்காளப் பெருமக்கள் அந்த நம்பிக்கையை வலுவூட்டினர்.
தமிழக மீனவர் வாழ்வாதாரம், கச்ச தீவு, ஈழத்தமிழரின் எதிர்காலம் யாவிலும் தாங்கள் கொண்ட கொள்கையும் கோட்பாடும் ஈழத்தமிழருக்கு உகந்தது. உங்கள் வழியே ஈழத்தமிழராகிய நாமும் சிந்திக்கிறோம். இச்சிந்தனைகள் நடைமுறைக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
பாண்டிய அரச சின்னங்களை எடுத்துச் சென்ற சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தனைக் கைப்பற்றிப் பாண்டிய அரசுச் சின்னங்களை மீட்டு, சிங்களத்தின் அரசு, ஆட்சியையும் கைப்பற்றிய தமிழகத்தின் பேராண்மை அறியாத, வரலாற்றை மறந்த, இன்றைய சிங்களத் தலைவர்கள் தமிழகத்தைச் சீண்டி வருகிறார்கள், தமிழக மீனவரைத் தாக்குவதையும் சுடுவதையும் அரசுக் கொள்கையாக முன்னெடுக்கிறார்கள். ஈழத் தமிழரைக் கொடுமைக்கு உள்ளாக்குவதை அரசுக் கொள்கையாக முன்னெடுக்கிறார்கள்.
உங்களின் சாணக்கியமும் பொறுமையும் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தலும் கொடுமை நோக்குடைய தமிழக எதிர்ப்பும், தமிழர் எதிர்ப்பு நோக்குமுடைய சிங்களத் தலைவர்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் காலம் விரைவில் கனியும்.
மீண்டும் ஈழத் தமிழரின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் கூறி அமைகிறேன். தமிழகத்தில் நல்லாட்சி தொடர்வதாக. ஈழத் தமிழருக்கு அரணாகத் தொடர்வீர்களாக.
நன்றி.
அன்புடன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இலங்கைத் தமிழரசுக் கட்சி.