காற்றினிலே வரும் கீதம்
க.பாலசுப்ரமணியன்
காலைப் பொழுதில் கரையும் காகம்
காற்றினில் தெளிக்கும் கானம்!
காதில் ஒலித்திடும் கருவண்டின் துடிப்பில்
கற்பனை தேடும் ஞானம்!
கூவிடும் கோழியின் குழைந்திடும் குரலில்
தூதிடும் துள்ளும் கீதம்!
கறந்திடும் பாலில் சொட்டிடும் சுகத்திற்கு
கைகள் போட்டிடும் தாளம் !
தென்னையின் கீற்று தென்றலைத் தீண்டிட
உலவிடும் உன்னத ராகம் !
புள்ளினம் ஒன்றாய் புகலிடம் தேடிட
கள்ளுண்ட வண்டும் ஆடும் !
விண்ணினில் எங்கும் சிதறிய மீன்கள்
மண்ணின் மனதினை மாய்க்கும்!
கண்ணின் விழிகள் களைத்திடும் போதும்
காலத்தின் காவியம் பாடும்!
புன்னகை சிதறிடப் பூத்திடும் மனதில்
புதிதாய் பாடல்கள் தோன்றும் !
கல்லுறை நீரும் தமிழினில் கேட்டால்
தந்திடும் தேனிசை கீதம்!