படக்கவிதைப் போட்டி .. (65)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
சாந்தி வீஜே எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.05.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
ஏமாற்றம்…
உறவாய் எண்ணிய காக்கையாரே
உமது குணமது மாறியதே,
சிறுவர் கையில் பண்டமதைச்
சேர்த்தே பிடுங்கி வந்தீரே,
உறவினர் வரவை உரைப்பதினால்
உயர்வாய் எண்ணி யிருந்தோமே,
பிறப்பில் எமது முன்னோராய்ப்
போற்றிய பெருமையும் பொய்யாச்சே…!
-செண்பக ஜெகதீசன்…
காகமே உன்
தாகம் தீர்க்க
தண்ணீரும்
பசிக்கு அன்னமும் இட்டேன்
நீசனீஸ்வரரின் வாகனமாம்
முன்னோர்களின் சின்னமாம்
நீ கரைந்தால்
விருந்தினர் வருவதாகவும்
நீ வலமாகப் போனால்
காரிய சித்தியாகவும்
உன்னைப்புகழ்ந்து
பாடியிருக்காராம்
காக்கைப்பாடினியார்
இதெல்லாம் எனக்கு
செவி வழி வந்த செய்திதான்
ஒற்றுமைக்கும்
பகிர்ந்துணவுக்கும்
கூடி வாழ்தலுக்கும்
உவமையாக சொன்ன
உண்மைத்தகவலுக்காகவும்
உயிர்களுக்குஉதவணும்னுதான்
தண்ணீரும்
அன்னமும் இட்டேன்
அதனால்தான் உன் பகிர்ந்துணர்வைக் காட்ட
கடையிலிருந்தோ சிறுவர்
கையிலிருந்தோ
இதை பறித்து வந்திருக்கிறாயோ ?
வேண்டாம் காகமே
பறித்து வருவதும்
கவர்ந்து வருவதும் கூட
ஒரு வகையில் திருட்டுத்தானே
எனக்கு இது வேண்டாம்
அம்மா திட்டுவாள்
உன் அன்புக்கு நன்றி !
சரஸ்வதி ராசேந்திரன்