நிர்மலா ராகவன்

வெளியில் நற்பெயர், வீட்டிலோ!

நலம்-1-1-1-1

`கணவன்மார்கள் மனைவிக்குப் போதிய சுதந்திரம் கொடுக்காததால்தான் பெண்கள் இல்லற வாழ்வில் சலிப்படைகிறார்கள், விவாகரத்து நடைபெறுவதும் இதனால்தான் என்கிறீர்களே! எல்லா சுதந்திரமும் கொடுத்தும், சில பெண்கள் கணவரை நல்லபடி நடத்துவதில்லையே?’ என்று கேட்டார் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார் நண்பர் சிவராமன். அவர் குரலில் ஏதோ ஏக்கம் தொனித்தது. அவர் மனைவியைப் பிரிந்து வாழ்கிறவர் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

உடன் வந்திருந்தவர் அதீதமாகத் தலையைக் குனிந்துகொண்டதிலிருந்து, ஏதோ அந்தரங்கமான சமாசாரம் என்று நான் மேலே எதுவும் கேட்காமல் விட்டுவிட்டேன்.

`என்னைப்பற்றி சிலரிடம் பேசிப்பார்த்தேன். `அப்படியா?’ன்னுட்டுப் போயிடுவாங்க. நீங்க அப்படியில்லே!’ என்றார் சிவராமன்.

அவர் முன்பொருமுறை வேறு குழப்பத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டபோது, நான் அதை அலசி, ஆறுதலாக ஏதோ கூறியது `மண்டையில் பல காலமாக இருந்த பெரிய பாரத்தை கல்லால் நகர்த்தியது போலிருந்தது!’ என்று சொன்னார். என்னிடம் மீண்டும் உதவி கேட்கவே தயங்கியது புரிந்தது.

நான் ஏதாவது பேசும்போது, சிவராமன் ஒரு மாணவனைப்போல் மரியாதையாகக் கைகளைக் கட்டிக்கொண்டு, என் கண்களையே உற்றுப் பார்ப்பார். என்னைவிட பத்துவயது இளையவர். ஆனால், பார்வை என்னவோ ஒரு குழந்தை தாயைப் பார்ப்பதுபோல் பாசமாக இருக்கும்.

விடை பெறும்போது அவரே, `உங்களிடம் இன்னொரு ஆலோசனை கேட்க வேண்டும். நாளை அழைக்கலாமா?’ என்று கெஞ்சுவதைப்போல் கேட்டார்.

`எப்போ?’
`காலை ஆறு மணிக்கு?’
`ஐயோ!’
`ஏழு?’
மறுநாள் வானொலி நேரம்போல சரியாக ஏழு மணிக்கு தொலைபேசி மணி அடித்தது.

`ஹலோ!’ என்ற சிவராமன் அதற்குமேல் பேச முடியாது திணற, அவருடைய சிரமத்தை ஒருவாறாகப் புரிந்துகொண்டேன்.

`நான் ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன்,’ என்று உண்மையாக ஆரம்பித்தேன்: தட்டிக்கேட்க யாருமில்லாத நிலையில், தான் கண்ட பெண்களோடு சகவாசம் வைத்திருந்ததை புது மனைவியிடம் கூறுகிறான் ஒருவன். அதுவரைதான் எழுதியிருந்தேன்.

நான் மேலே எதுவும் சொல்வதற்குள், அவர் தொடர்ந்தார்: அதற்குப்பின் அவர்மேல் உள்ள நம்பிக்கை அவளுக்கு அறவே போய்விட்டது. தொழில் நிமித்தம் அவர் இரவில் நேரம் கழித்து வந்தாலும், `எவளோட இருந்துட்டு வந்திருக்கீங்க?’ என்று சுடுசொற்களை வீசுவாள், `நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண்!’ (அடுத்த ஒரு மணி நேரமும் இப்படித்தான் மனைவியைக் குறிப்பிட்டார்).

அவளுக்குப் பிடித்த துறையில் முன்னேற இவருடைய உதவி தேவைப்பட்டது. இருவரும் திருமணத்துக்கு முன்பே காதல்வசப்பட்டு, சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்களாம். அவள் பெரிய பணக்காரி என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

படிப்பிலும், அந்தஸ்திலும் மிகப் பெரிய நிலையில் இருந்தவள் தன்னை விரும்புகிறாள் என்ற உணர்வு, `என்னைவிட பாக்கியசாலி இந்த உலகில் யாருமில்லை!’ என்று அவரை நினைத்துப் பூரிக்கவைத்தது. அதைத் திரும்பத் திரும்பச் சொன்னார்.

`ஒண்ணா சேர்ந்து இருக்கிறபோது, ’நமக்குள்ளே எந்த ரகசியமும் இருக்கக்கூடாது,’ என்று சொல்லிக்கொண்டோம். அப்போ தெரியலே, அது எங்கே கொண்டு விடும்னு! வாசலிலேயே நிக்க வெச்சு கன்னா பின்னான்னு கத்துவா!’ விட்டு விட்டுப் பேசினார், அந்த நிகழ்ச்சியை நினைவுகூர்வதே சகிக்க முடியாமல் இருந்ததுபோல்.

திருணமானபிறகு மனைவியில் குத்தல் பேச்சு ஆரம்பித்தது.

‘நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண்ணை நான் கட்டுப்படுத்தியதே இல்லை. ஆனால், அவளுக்கு என்மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது!’

பொறுக்க முடியாமல் போக, விவாகரத்திற்கு மனு செய்தார்.

அவளுக்கு ஒரே ஆத்திரம். பணமும், புகழுமாய் தானிருக்க, தன்னை ஒதுக்கிவைத்துவிட ஒருவர் துணிவதாவது!

அவர்கள் மகனுக்கு அப்போது மூன்று வயது. மாதம் ஒரு முறை தந்தை மகனுடன் நேரத்தைக் கழிக்கலாம் என்று சட்டம் பெரியமனம் பண்ணிற்று.

ஆனால், சிவராமன் எண்ணியபடி, விவாகரத்து அவருக்கு நிம்மதியான வாழ்வைக் கொடுக்கவில்லை. மனைவியை அறவே உதறமுடியாது போயிற்று. அவர் மகனை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது, அவளும் வலுக்கட்டாயமாக தொற்றிக்கொள்வாளாம்.

`இப்போதும் பழையபடி குத்தல் பேச்சுதான்! எதுவும் மாறவில்லை. நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண் சொல்கிற இடத்துக்குத்தான் போகவேண்டும். சாப்பிட நான் ஏதாவது வாங்கிக் கொடுத்தால், அதை அனுமதிப்பதில்லை. இப்போது பத்து வயதாகிறது என் மகனுக்கு. அவனுடன் நான் அதிகம் பேசக்கூட விடுவதில்லை!’ என்று அழுகைக்குரலில் என்னிடம் கூறியவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

`நீங்கள் என்றாவது.. அவள் சொன்னதுபோல..,’ என்று இழுத்தேன்.

`வேறு பெண்ணைத் திரும்பிக்கூடப் பார்த்தது கிடையாது! என் உலகமே குடும்பம்தான் என்றிருந்தேன்’.

` ஐம்பது, அறுபதுன்னு என் வயசு கூடிட்டே போய், இப்படியே என் காலம் முடிஞ்சுடப்போகுது! இதை நினைக்கிறப்போவே பயமா இருக்கு!’

`எப்படிச் சமாளிக்கிறீர்கள்? குடியா?’ என்று விசாரித்தேன், சர்வசாதாரணமாக.

அதில் கேலியில்லை என்று அவரும் உணர்ந்திருக்க வேண்டும். `அதேதான்!’ என்று ஒத்துக்கொண்டார். சுயவெறுப்பு அவர் குரலில்.

தானிருந்த இடத்தில் இன்னொரு பெண்ணைக் கொண்டுவந்துவிடப் போகிறாரே என்ற கலக்கமோ?

`அவளுக்குக் காதலன் யாராவது இருக்கிறார்கள்?’ என்று விசாரித்தேன்.

`அப்படி இருந்து தொலைச்சாதான் தேவலியே!’ என்று பொருமினார்.

உலகம் அவள் பக்கம்தான் சாய்ந்திருந்தது. சிவராமனுடன் வேலைபார்த்த என் சிநேகிதி ஒருத்தி தானாகவே கூறியிருந்தாள்: `இவனோட யார் குடித்தனம் நடத்த முடியும்! எப்பவும் குடி! பாவம், அவ!’

`நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண்!’ என்று அடிக்கடி அவர் குறிப்பிட்டவளுடைய விஷம் தோய்ந்த வார்த்தைகளைப் பொறுக்க முடியாததால்தால் அவர் குடிக்கிறார்; தன் வாழ்க்கையின் அவலத்தை தாற்காலிகமாவது மறக்க நினைக்கிறார் என்பது யாருக்கும் புரிவதில்லை.

எப்போதோ படித்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது: `வாழ்க்கையில் தோல்வி அடைகிறோமே என்று ஒருவன் குடிக்கிறான். குடிப்பதால் இன்னும் அதிகமாகத் தோல்வி அடைகிறான்!’

`இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்களேன்! எதுக்காக இப்படி உங்களையே வருத்திக்கணும்?’

`இன்னொரு கல்யாணமா! வேண்டாம்பா!’ என்று நடுங்கினார்.

`மகன் முகத்தைப் பார்ப்பதற்காகவே மாதம் முழுவதும் காத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள்! அடுத்த முறை, `நீ வரவேண்டாம்!’ என்று அவளிடம் கண்டித்துச் சொல்லிவிட்டு, அவனை மட்டும் வெளியே அழைத்துக்கொண்டு போங்கள். அவனுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுங்கள்!’ என்று ஒரு உபாயத்தைக் கூறினேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை.

`மகனைத் தனியாக அழைத்துப் போய்விட்டு, மறுநாள் என்னைக் கூப்பிட்டுச் சொல்லுங்கள். காத்துக்கொண்டிருப்பேன்,’ என்று எங்கள் உரையாடலை முடித்தேன்.
அடுத்த வாரம் அவர் அழைக்கவில்லை.

ஆர்வத்தைத் தாங்கமுடியாது நானே கூப்பிட்டு, `என்ன நடந்தது?’ என்று விசாரித்தேன்.
`வழக்கம்போலத்தான்!’ மிகுந்த நிராசை அவர் குரலில்.

`ஐயோ, ஏன்? நீ வராதேன்னு சொல்லலே?’

`என்னால் கடுமையாகப் பேச முடிவதில்லை! இப்போ எனக்கு ஒரே ஆசைதான்– என் மகன் பெரியவன் ஆனதும், அவனிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லணும்!’

இதில் சம்பந்தப்பட்ட மூவருக்குமே மகிழ்ச்சியோ, நிம்மதியோ கிடையாது. அந்தப் பெண் செய்ததுபோல், வீட்டுக்கு வெளியே நற்பெயர் சம்பாதித்து, வீட்டுக்குள் சந்தேகமும் சண்டையுமாக இருந்தால் என்ன மகிழ்ச்சி கிடைக்கும்?

`வேண்டாம்’ என்று விட்டுப்போன வாழ்க்கைத்துணையை விடாப்பிடியாகப் பிடித்து வைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் விவேகம். Learn to let go.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *