நிர்மலா ராகவன்

யாருக்கு மருமகள்?

நலம்-
அந்த இளம்பெண் தன் சின்ன மாமியாரின் வீட்டு விசேஷத்திற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே வந்திருந்தாள்.

காலையில் எல்லாருக்கும் முன்னர் எழுந்து, வாசல் தெளித்து கோலம் போட்டு.. இப்படி ஓயாது வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு, அடிக்கடி சமையலறையிலிருந்து அழைப்பு வந்தது. “சீதா! ஒரு கோலத்தைப் போட எத்தனை நேரம்! இன்னும் எவ்வளவு வேலை பாக்கி இருக்கு! வந்து கீரையை ஆய்ந்து நறுக்கிக் குடு! சீக்கிரம்! அப்புறம்..!”
எதையும் நேர்த்தியாகச் செய்யும் அப்பெண் தன் திறமையை எல்லாம் காட்டி கோலத்தைப் போட்டுக்கொண்டிருந்தாள். சிறிதும் ஆயாசப்படாமல், “இதோ வரேன்!” என்று எழுந்தவளைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“நீ ஒரு நல்ல மாட்டுப்பொண்ணா?” என்று கேட்டேன், கொஞ்சம் கேலியும், உண்மையாகவும்.

“ஆமாம்!” என்று பெருமையுடன் சிரித்தபடி ஓடினாள்.

எனக்கு வியப்பளித்தது என்னவென்றால், அவள் வயதையொத்த பல பெண்கள் அங்கு இருந்தார்கள். அவர்களது தேவைகளையும் இவளே கவனிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால், இவள் மட்டும்தான் வேறு வீட்டிலிருந்து புகுந்த பெண்.

அவள் ஏழைப் பெண்ணில்லை, முதுகலைப் பட்டம் பெற்றவள் என்றறிந்து என் ஆச்சரியம் இன்னும் அதிகமாயிற்று.

`எந்த வேலையாக இருந்தாலும், அதை நன்றாக செய்யக்கூடியவள்!’ என்று அவர்கள் புகழ்ந்தபோது, இவள் அதைப் பெருமையாக எடுத்துக்கொண்டது தப்பாகப் போயிற்று. மாமியார் வீட்டில் மட்டுமின்றி, அவளுடைய உறவினர்கள் எவர் வீட்டுக்குப் போனாலும், இவள்தான் வேலை செய்ய வேண்டும்.

நாலைந்து ஆண்டுகள் கழிந்தன. அதே வீட்டில் இன்னொரு கல்யாணம். முதல் வாரமே இருபது பேருக்குமேல் கூடி இருந்தார்கள். துணிகளைத் துவைத்துப்போட இயந்திரம் இருந்தாலும், மொட்டை மாடியில் உலர்த்த வேண்டுமே! மருமகள் எதற்கு இருக்கிறாள்!
நானும் அவள் பின்னாலேயே போனேன். அங்கே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பதின்ம வயதுச் சிறுவனிடம், “நீயும் கொஞ்சம் உதவி பண்ணேன்,” என்றேன். அவன் சற்று அதிர்ந்துவிட்டு, கீழ்ப்படிந்தான். நடந்ததைச் சொன்னால், பெற்றோருக்குக் கோபம் வரும் என்று அவனுக்குத் தெரியும். அவர்களுக்கு அவ்வளவு அருமையான ஒரே மகன்! அவனை வேலை செய்யச் சொல்லி யாரோ ஏவுவதாவது!

“எங்க துணியெல்லாம் காய்ந்திருக்கும். கொஞ்சம் எடுத்துக்கொண்டு வந்து விடுகிறீர்களா?” என்று நாத்தனார் கெஞ்சுவதுபோல் கேட்டாள் — அந்தப் பையனின் தாய். தன் மகனை வேலை வாங்கியதற்குத் தண்டனையோ!

நானிருந்த சிறு அறைக்கு வந்து, “எல்லா வேலையையும் என்னையே செய்யச் சொல்றா!” என்று ரகசியக் குரலில் முறையிட்டாள் சீதா.

“காதிலேயே வாங்கிக்காதே!” என்று அறிவுரை கூறினேன்.

நாத்தனாரின் கணவர் அந்த வீட்டு மாப்பிள்ளை இல்லையா? அவர் ஒரே இடத்தில் அசையாது அமர்ந்து, தன் மாப்பிள்ளை முறுக்கை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்.
ஒரு பெண் கல்யாணமாகிப் புக்ககத்திற்குப் போனால் வேலை செய்ய வேண்டும். ஆனால், ஆணுக்குதான் அதிகாரம் செய்யும் உரிமை. யார் வகுத்த நியாயம் இது?
குனிந்து நிமிர்ந்து, பந்தியில் பரிமாறுவதும் சீதாவின் வேலையாகிப் போயிற்று.

அந்த மாப்பிள்ளை சாப்பிடும்போது, கேட்ட பதார்த்தத்தையே திரும்பத் திரும்பக் கேட்க, பிறருக்கு இருக்காது என்ற நிலை வந்தது.

நான் அப்போது சமையலறையில் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தேன்.
“ஒருத்தருக்கே எல்லாத்தையும் போட்டுட்டா எப்படி?” என்று சீதா பொரும, நான் மறுபடியும், “காதிலேயே வாங்கிக்காதே!” என்றேன்.
நல்ல மருமகள் என்றாலும் இப்படியா!

வீட்டுப் பெண்களும் அவர்கள் குடும்பமும் ஒரே இடத்தில் உட்கார்ந்து அதிகாரம் செய்யலாமா?

நான் சொன்னதிலிருந்த நியாயத்தை சீதா புரிந்துகொண்டாள்.

வீட்டுப் பெண்டிர், `சீதா முன்னே மாதிரி இல்லே. சொல்ற வேலையைச் செய்யறதில்லே!” என்று அவள் வெளியில் போயிருக்கும் சமயம் பார்த்து, அவள் மண்டையைப் பல விதமாக உருட்டிக் கொண்டிருந்தார்கள்.

என்னால் பொறுக்க முடியவில்லை. “ஏன், பாவம், அந்தப் பெண்ணை இப்படிக் காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சறேள்?” என்று கேட்டுவிட்டேன், ஒரு சிறு சிரிப்புடன். என்னையும் தாக்குவார்களோ?

அப்படி எதுவும் நடக்கவில்லை.

“நீங்களே சொல்லுங்கோ. நன்னா வேலை செய்யக்கூடிய பொண்ணு! இப்போ எது சொன்னாலும் காதிலேயே வாங்கிக்க மாட்டேங்கிறா!” என்று என்னிடம் நியாயம் கேட்டார்கள். சொல்லிக் கொடுத்ததே நான்தான் என்று தெரிந்தால் என்ன ஆகியிருக்குமோ!

அவளுடைய நாத்தனார் எந்த வேலையும் செய்வதில்லை என்பதைச் சுட்டிக் காட்டினேன்.

“அவளோட வீட்டிலே அவதான் எல்லா வேலையும் செய்யறா!” என்று வக்காலத்து வாங்கினார்கள்.

சீதாவும் அவள் வீட்டில் ஓயாமல் வேலை செய்வாள். ஆனால் அது கணக்கில் வராது. என்ன இருந்தாலும், அவள் இன்னொருத்தர் வீட்டுப் பெண்தானே!

உருப்படியாக வேறு எந்த வேலையும் இல்லாது, அவர்கள்பாட்டில் மத்தியானம் பூராவும், “இப்பல்லாம் சீதா சோம்பேறியா போயிட்டா!” என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

சோம்பல் இல்லை, தன் மதிப்பு பிறருக்கு நாயாக உழைப்பதில் இல்லை; அப்படி உழைத்தால் தன்னை ஏமாந்தவளாகத்தான் பார்க்கிறார்கள் என்று அவளுக்குப் புரிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன். வெளியில் சொல்லவா முடியும்!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *