மீ.விசுவநாதன்

குதிரையின் வேகம் இருக்கிறது – பணக்
குறியாய் மனமும் அலைகிறது !
கதிரையும் காற்று விசையினையும் – தன்
கைக்குள் அடக்கத் துடிக்கிறது !

பொய்தனைப் பூசித் திரிகிறது – தினம்
போலி அன்பால் நடிக்கிறது !
கைதனில் பொன்னை வைத்தபடி -மனக்
கவலை நோயில் அழுகிறது !

பெற்றவர் நோயில் கிடந்தாலும் – காசுப்
பித்தால் கடிந்தே நடக்கிறது !
மற்றவர் மதிக்க வேண்டுமென – கள்ள
மனத்து முகத்தால் சிரிக்கிறது !

ஆடிய ஆட்டம் அடங்குகையில் – உறவை
அழுது புலம்பி அழைக்கிறது !
தேடிய தீமை அணைக்கையிலே – தன்
சித்தம் கலங்கி நிற்கிறது !

(09.06.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *