அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 64

0

அரச அருங்காட்சியகம், கெண்டபரி, இங்கிலாந்து

முனைவர்.சுபாஷிணி

அருங்காட்சியகங்களில் இருக்கின்ற அரும்பொருட்களைக் காட்சிப்படுத்துகின்ற அருங்காட்சியகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பணிகளில்  சிறப்புக் கண்காட்சிகளை இணைத்துக் கொள்வர். உலகப்பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்படுவதற்காக வேறொரு அருங்காட்சியகத்திலிருந்தோ அல்லது தனியார் சேகரிப்பிலிருந்து, அல்லது மற்ற அமைப்புகளிலிருந்தோ கூட இவ்வகைச் சிறப்பு கண்காட்சிக்குட்படுத்தப்படும் பொருட்கள் தருவிக்கப்பட்டு காட்சி படுத்தப்படுவது வழக்கம்.

எனது அருங்காட்சியகப் பயணங்களில் அவ்வப்போது இத்தகைய உலகப்பிரசித்தி பெற்ற அரும்பொருட்களையோ ஆவணங்களையோ காணக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு சிறப்பான வாய்ப்பு அமையும் போது ஆகா .. என்ன நம் அதிர்ஷ்டம் என என் மனதிற்குள் நான் நினைத்துப்பார்த்து மகிழ்வதுண்டு. அத்தகைய ஒரு வாய்ப்புதான் எனக்குச் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் உள்ள கெண்டர்பரி நகரம் சென்றிருந்த போது கிட்டியது.

06d52bd4-f5f5-4c51-9452-2260c45fe19e

இங்கிலாந்தின் புகழ்மிக்க பிரித்தானிய நூலகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படும் மெக்னகார்ட்டா கெண்டர்பரிக்கு கண்காட்சிக்காகக் கொண்டுவரப்பட்டு அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மெக்னகார்ட்டா தற்சமயம் உலகின் பல புகழ்மிக்க அருங்காட்சியகங்களுக்குச் சிறப்பு கண்காட்சிக்கு உலகம் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரும்பொருள். அப்படி என்ன இந்த மெக்ன கார்ட்டாவில் எனக் கேட்பவர்களுக்காக சில விபரங்களைத் தருகின்றேன்.

as

கி.பி.1215ஆம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருந்த மன்னன் ஜோன் மிக மனிதாபிமானமற்ற முறையிலான ஒரு அரசாட்சியை நடத்திக் கொண்டிருந்தார். இவர் கி.பி. 1199ஆம் ஆண்டில் அரசராக முடிசூட்டிக் கொண்டவர். ஏனைய பிரபுக்களுக்கு ஆட்சி ரீதியில் மிகுந்தபாதிப்பை கொடுக்கும் வகையிலான ஆட்சியை இவர் நடத்திக் கொண்டிருந்தார். இவரைப் பதிவிலிருந்து நீக்குவது என்பதும் முடியாத காரியமாக இருந்தது. ஏனைய பிரபுக்கள் அனைவரும் சேர்ந்து மன்னர் ஜோனுக்கு அழுத்தம் கொடுத்து நில உரிமை தொடர்பான விசயத்தில் சட்ட மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் அப்படி ஒத்துழைக்கத் தவறினால் அவர்களது ஆதரவை மீட்டுக் கொள்வர் எனவும் முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தான் மன்னர் ஜோன் பிரான்சு நாட்டில் நடைபெற்று முடிந்த போரில் தோல்வியைத் தழுவி தனது படைகளோடு இங்கிலாந்தின் கெண்டபரி திரும்பியிருந்தார். ஆக இந்தச் சூழலில் பிரபுக்களை எதிர்ப்பது சரியல்ல என்ற முடிவுக்கு அவரும் வந்தார். இல்லையென்றால் ஆட்சி பறிபோய்விடும் என்பதை அவரால் ஊகிக்க முடிந்தது.

மன்னர் ஜோனுக்கும் ஏனைய பிரபுக்களுக்குமான பேச்சு வார்த்தை தொடங்கியது. ஆனால் அது வெற்றிகரமான வளர்ச்சியைக் காணவில்லை. சலிப்படைந்த ஏனைய பிரபுக்கள் இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபர்ட் நகரில் படைகளைத் திரட்டினர். 1215ஆம் ஆண்டு மே 17ஆம் நாள் மிகப்பெரிய படையுடன் அணிவகுத்துச் சென்று லண்டன் நகரை அடைந்து லண்டன் நகரைக் கைப்பற்றினர். இதனைக் கேள்வியுற்று எங்கே தம் ஆட்சி பறிபோய்விடுமோ என்று மன்னர் ஜோன் அஞ்சத்தொடங்கி பேச்சு வார்த்தைக்கு மீண்டும் சம்மதம் தெரிவித்தார்.

as1

மன்னர் ஜோனின் குழுவும் ஏனைய பிரபுக்களும் ரன்னிமீட் நகரில் சந்தித்தனர். ஏற்கனவே உள்ள சட்டத்தை அதிகாரப்பூர்வமாக்குவது என்பதோடு வாய்மொழி உறுதிகளாக இருந்த சில சட்டங்களையும் இந்தச் சந்திப்பில் ஆவணப்படுத்தினர். இந்த ஆவணத்தின்படி சட்டம் என்பது அரசனுக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டது என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதாக அமைந்தது.

தான் ஒப்புதல் அறிவித்து ஏற்றுக் கொண்ட இந்த ஆவணத்தை நடைமுறைப்படுத்தும் முன் புனிதத்தந்தை போப் அவர்களிடம் இவ்விசயம் தெரிவிக்கப்பட்டது. இது அரசனுக்கு நிகழ்ந்த உச்சக் கட்ட அவமானம் என அவர் கூறி இது செல்லாது எனப் பிரகடனப்படுத்தினார். இதனை இப்பிரபுக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சலிப்படைந்த பிரபுக்கள் உள்ளூரில் போரைத் தொடங்கினர். 1216ஆம் ஆண்டில் ஏறக்குறைய இங்கிலாந்தின் பாதி அளவு மன்னர் ஜோனின் எதிரிகளான பிரபுக்களின் கைவசமானது. அதே ஆண்டு மன்னர் ஜோன் மரணமடைந்தார். இது நிலமையை மேலும் மோசமாக்கியது. மன்னரின் ஒன்பது வயது புதல்வர் புதிய மன்னரானார். மன்னர் மூன்றாம் ஹென்றி என அவருக்குப் பெயர் வழங்கி பட்டம் சூட்டப்பட்டது.

அதன் பின்னர் மெக்னா கார்ட்டாவில் மாற்றங்கள் சில செய்யப்படுவது நிகழ்ந்தது. மெக்னாகர்ட்டா இங்கிலாந்தின் முதல் சட்ட ஆவணம் என்பது இதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும். மெக்னா கார்ட்டாவில் மேலும் புதிய சட்டங்கள் தொடர்ந்து இணைக்கப்பட்டும் சட்டத்திருத்தங்கள் உள்ளிணைக்கப்பட்டும் மாற்றங்கள் நிகழ்வது இயல்பாக நடந்தது. ஆனால் 1300க்குப் பிறகு மெக்னா கார்ட்டா பொதுவாக மறக்கப்பட்ட ஒரு விசயமாக அமைந்து போனது. அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் அதனை மறந்து போயினர். ஆனால் மெக்னா கார்ட்டா பற்றிய பேச்சுக்களும் அதன் தேவையும் மீண்டும் 17ம் நூற்றாண்டில் உயிர்பெற்றுக் கிளம்பியது.

as2

சட்ட நிபுணர் சர் எட்வர்ட் கோக் மெக்னா கார்ட்டாவை மறுவாசிப்பு செய்தார். அதன் பின் மெக்னா கார்ட்டா பற்றிய பேச்சு தொடர இது இங்கிலாந்தின் மிக முக்கிய சட்ட ஆவணம் என்ற சிறப்பை பெற்றது. மெக்னா கார்ட்டாவில் இருக்கும் சட்ட குறிப்புக்களில் தனி மனித உரிமை தொடர்பானவை, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பானவை என்பவை குறிப்பிடத்தக்கவை.

உதாரணமாக இதில் உள்ள ஒரு சட்டத்தின் படி, எந்தவொரு தனிமனிதரும் முறையான ஒரு விசாரணை இல்லாமல் சிறையில் அல்லது அரசின் பாதுகாப்பில் வைக்கப்படக் கூடாது என்று ஒரு சட்டம் குறிப்பிடுகின்றது.

as3
மெக்னா கார்ட்டாவில் உள்ள எழுத்துக்கள் லத்தீன் மொழியில் அமைந்துள்ளன.

மெக்னா கார்ட்டாவின் 800ம் ஆண்டு விழா 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி, அது நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த அரும்பொருள், சிறப்பு கண்காட்சிக்காக வந்திருந்த கெண்டர்பரி நகரமானது, இங்கிலாந்தைப் பொறுத்தவரை வரலாற்று ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரம். ஏனெனில் இங்குதான் ரோமானியப்படை முதன் முதலாக ஆட்சியைக் கைப்பற்றியதோடு பின்னர் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தையும் இங்கிலாந்து முழுமைக்கும் பரவலாக்கியது.

அருங்காட்சியகம் பர்றிய குறிப்பு
Canterbury Royal Museum
Beaney House of Art and Knowledge
18 High St, Canterbury CT1 2BD, United Kingdom
நுழைவு இலவசம்

இங்கே நான் சென்றிருந்த அரச அருங்காட்சியகத்தில் கெண்டர்பரி நகரின் வரலாற்றைச் சொல்லும் பல அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் பார்த்து குறிப்பெடுத்து வர நிச்சயம் நான்கு மணி நேரங்களாவது ஆகும். இங்கிலாந்தின் கெண்டர்பரி நகரம் செல்பவர்கள் தவறவிடாமல் செல்ல வேண்டிய மிக முக்கிய ஒரு அருங்காட்சியகம் இந்த அரச அருங்காட்சியகம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *