குறளின் கதிர்களாய்…(125)
பயன்தூக்கார் செய்த வுதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
-திருக்குறள் -103(செய்ந்நன்றி அறிதல்)
புதுக் கவிதையில்…
உதவியில் உயர்வு
பயன் கருதாமல் உதவுதலே..
அதன்
சிறப்பைச் சீர்தூக்கிப் பார்த்தால்,
அதனால் வரும் நன்மை
அளவில் பெரிது,
அலைகடலை விட…!
குறும்பாவில்…
பயன்கருதாதவர் செய்த உதவியால்
பெற்ற நன்மையின் சிறப்பு,
பரந்த கடலினும் பெரிது…!
மரபுக் கவிதையில்…
பலனாய் என்ன கிடைக்குமென
பார்த்தே உதவி செய்யாமல்,
நிலைக்கும் அன்பினைப் பெரிதாக
நினைத்தே உதவுவோர் சிறப்பினையே
அலசிப் பார்க்கையில் தெரியும்பார்,
அதனால் வந்திடும் நன்மையதும்
அலைகள் நிறைந்த கடலினிலும்
அளவில் மிகவும் பெரிதென்றே…!
லிமரைக்கூ…
பயன்பாராமல் உதவுதல் அரிதே,
உதவிடின் அதுபோல், வரும்நன்மை
அளவினில் கடலைவிடப் பெரிதே…!
கிராமிய பாணியில்…
ஒதவிசெய்யணும் ஒதவிசெய்யணும்
அடுத்தவங்களுக்கு ஒதவிசெய்யணும்,
ஆதாயத்தப் பாக்காம ஒதவிசெய்யணும்
அளவில்லாம ஒதவிசெய்யணும்..
அப்புடி
ஒதவுறவுங்க ஒசந்தவுங்க,
உண்மயிலே ஒசந்தவுங்க,
அந்த
ஒதவியால வரும்நன்ம கொஞ்சமில்ல
அதனோட பெருமைக்கும் பஞ்சமில்ல,
அது பெருசு மிகப்பெருசு
அந்தக் கடலவிடப் மிகப்பெருசு..
அதால
ஒதவிசெய்யணும் ஒதவிசெய்யணும்
அடுத்தவங்களுக்கு ஒதவிசெய்யணும்,
ஆதாயத்தப் பாக்காம ஒதவிசெய்யணும்…!
–செண்பக ஜெகதீசன்…