நான் அறிந்த சிலம்பு – 213
மலர்சபா
மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை
மன்னவன் கட்டளைப்படி கண்ணகி அவையை அணுகுதல்
அரசன் வாயிலோனிடம் கூறினான்:
“அத்தகையவள் இங்கே வருவாளாக…
அவளை அழைத்து வருவாயாக..”
பாண்டியன் வினா
கண்ணகியைப் பார்த்து அரசன் கேட்டான்:
“நீர் வார்க்கும் கண்களையுடைய பெண்ணே!
என் முன் நிற்கும் கொடி போன்றவளே..
நீ யார்?”
கண்ணகியின் மறுமொழி
“ஆராய்ந்து பார்க்கும் திறன் இல்லாத மன்னவனே!
உன்னிடம் குறை ஒன்று சொல்லக்கூடியவளாய்
நான் இருக்கிறேன்.
இகழமுடியாத சிறப்பு வாய்ந்த
தேவர்களும் போற்றும்படி
புறா ஒன்றுக்கு நேர்ந்த துன்பம் போக்கிய
சிபி மன்னனும்,
தன் அரண்மனை வாயிலில் கட்டியுள்ள
மணியின் நடுவில் உள்ள நா அசைய
அவ்வொலி எழுப்பிய பசுவின்
கண்களில் இருந்து வழிந்த நீர்
தன் நெஞ்சைச் சுட்டதால்,
பெறுவதற்கு அரிய தன் ஒரே மகனைத்
தேர்க்காலில் இட்டுக் கொன்ற
மனு நீதிச் சோழனும் ஆட்சி செய்த
பெரும்புகழ் வாய்ந்த பூம்புகார் எனது ஊராகும்.
வீரக்கழலைக் கட்டிய மன்னனே!
அங்கே குற்றமற்ற சிறப்புடைய புகழ் வாய்ந்த
பெருங்குடியைச் சேர்ந்த மாசாத்துவான் எனும்
வணிகனின் ஒரே மகனாய்ப் பிறந்து
ஊழ்வினை துரத்தியதால்
பொருள் ஈட்டி வாழ விரும்பி….
உன் மதுரை நகரில் புகுந்து
இங்கே என் காற்சிலம்பை விற்க வந்தபோது
உன்னால் கொலைக்களத்தில் வெட்டப்பட்டுக்
கொலையுண்ட கோவலனின் மனைவி நான்..
என் பெயர் கண்ணகி ” என்றாள்.
படத்துக்கு நன்றி:
கூகுள்