கீர்த்தனா

”டேய், மகேஸ்!… எழுந்திருடா…… மணி 7 ஆச்சு….இன்னும் தூங்கிட்டு இருந்தா காலேஜ் பஸ் போயிடும்…..”

“என்ன சீதா இப்படி பண்ணிட்டிங்க….இப்பதான் ஒரு நல்ல கனவு வந்தது…. சரி விடுங்க…அதை அப்படியே காலேஜ் போய் கண்டினியூ பண்ணிக்கிறேன்….” என்றான் மகேஸ்.

“அதெல்லாம் அப்பறம் பண்ணிக்கலாம்….போய் முதல்ல பல் விலக்கிட்டு, உள்ளே சுடுதண்ணி வச்சிருக்கேன் குளிச்சிட்டு வா…”

அவனை அனுப்பி விட்டு சமையல் வேலையை ஆரம்பித்தார், சீதா.

குளித்து விட்டு வந்தவன், சமையலறைக்குள் புகுந்தான்…..

”இன்னைக்கு என்ன சமையல்……. வாசம் சுண்டி இழுக்குது…”

”என் தங்கத்துக்கு பிடிச்ச முருங்கைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல்-தான் செஞ்சிருக்கேன்….”

“இதுதான் என்னோட சீதா-ங்கறது….. ஆனா இன்னும் கொஞ்ச நாள் கஸ்டப்படுங்க….. அதுக்கப்பறம்….”

“அதுக்கப்பறம்…. நீ சமைக்க போறேனு சொல்லிடாதப்பா…..  நான் பாவம்ல”

“ச்ச….ச்ச….. நான் அந்த மாதிரி கெட்ட பையன் இல்ல…… நான் என்ன சொல்ல வந்தேன் தெரியுமா….. ஒரு நல்ல மருமகளா கூட்டிட்டு வந்துடுவேன்… அவ உங்களை நல்லா கவனிச்சுப்பா….. நீங்க ஜாலியா இருக்கலாம்……. அவ்வளவுதான்..”

“ஆசைப்படுடா…… அதுக்காக பேராசைப்படறியே!   வர்ற மருமக என்னை கவனிக்கலைனாலும் பராவாயில்லை….உன்னை எப்பவும் ஒரு தாய் மாதிரி பார்த்துக்கிட்டா, அதுவே எனக்கு போதும்….”

“ அதெல்லாம் பார்த்துக்கலாம்… உங்களுக்கு ஆபிஸ்க்கு லேட்டாகிடுச்சு….இந்தாங்க உங்க லஞ்ச் பாக்ஸ்…….. நீங்க கிளம்புங்க”

“உன்கிட்ட பேசிகிட்டே மணிய பார்க்காம இருக்கேன்… சரி.. நான் புறப்படுறேன்…. ரூம்ல உன் டிரஸ் அயர்ன் பண்ணி வச்சிருக்கேன்… உன்னோட பொருள் எதையும் தேட வேண்டியதில்லை…. எல்லாம் ஹால்ல இருக்கு…. அப்பறம் உன் ஹூவையும் பாலிஸ் போட்டுடேன்….

 சீக்கிரம் புறப்பட்டு போ தம்பி…. காலேஜ் பஸ்ஸ விட்டுட்டு, வெளி பஸ்ல போய், கூட்டத்துல மாட்டிகிட்டு சிரமப்படாத…”

“சரி.. சரி.. நான் பார்த்து போய்க்கிறேன்….”

அவர் கிளம்பி போனதும், அவனுடைய வேலைகளை முடித்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு சென்றான்.

அங்கு அவன் நண்பன் யாதவ் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

“டேய், என்னடா! இன்னைக்கும் லேட் பண்ணிட்ட…….. பஸ் போயி 10 நிமிஸம் ஆகுது… சரி வா ஏதாவது டவுன் பஸ் வந்தா போகலாம்..”

“சாரிடா….. லேட்டாயிடுச்சு..” என்றவனின் நினைவில் சீதா வந்தார்…… அவர் முன்பே அவனை எச்சரித்திருந்தார் அல்லவா!!!!

’இன்னைக்கு காலேஜ் பஸ்ஸ விட்டுட்டோம்னு சீதாவுக்கு தெரிஞ்சுது…… கண்டிப்பா என்மேல கோவிச்சுப்பாங்க…’

அடுத்ததாக வந்த பஸ்ஸில் ஏறினார்கள். கூட்டம் நிரம்பி வழிந்தது…..

யாதவ், “சரிடா.. இன்னைக்கு புட்போர்டு-தான் போலருக்கு” என்றான்.

மகேஸ், “அதெல்லாம் முடியாது! எங்க வீட்டுல வெளி பஸ்ல போகவே வேண்டாம்னு சொல்வாங்க……. நீ என்ன புட்போர்டு அடிக்க கூப்பிடற……. வந்து மேலே ஏறுடா…..”

உள்ளே போனதும்தான் தெரிந்தது….அந்த பஸ்ஸில்தான் சீதாவும் இருந்தார். அவனை பார்த்து விட்டார். ஆனால் எதுவும் பேசவில்லை. அவருடைய ஸ்டாப்பிங் வந்ததும் இறங்கி சென்று விட்டார்.

காலேஜ் போன பின்னும் இதே நினைவுதான்….. அவரின் அமைதி அவனை அலைக்கழித்தது.  ’நல்லா கோவிச்சுகிட்டாங்கன்னு நினைக்கிறேன்….’

அங்கு சீதாவும் நிம்மதியாக இல்லை. ‘இன்னும் விளையாட்டுப் பையனா இருக்கானே…… இப்படி கூட்டத்துல ரொம்ப நேரம் நின்னுட்டு போனா, அவன் அதுலயே டயர்டு ஆகிடுவான். நான் சொன்னதை புரிஞ்சிக்கவே இல்லையே……

இதுக்காகதான்  நான் அவனை காலேஜ் பஸ்ல போக சொல்றேன்…… பேசாம, ஒரு பைக் வாங்கி குடுத்துடலாமா?……. அவன் விருப்பப்படற நேரத்துக்கு புறப்பட்டுக் கொள்ளலாம்……

ஆனா, பைக்லையும் பார்த்து கவனமாக போகனும்…… இப்ப எல்லாம்  டிராபிக்கும் அதிகம்…… அவன் வயசு பசங்க எல்லாரும் வச்சிருக்காங்க…. அவனுக்கும் ஆசை இருக்கும்……. இதுவரைக்கும் பைக் வாங்கி குடுங்கன்னு அவனா கேட்டதில்லை…..’

மாலை 6 மணி…

பல எண்ணங்களோடு ஆபிஸிலிருந்து கிளம்பினார்.

வீட்டில் ஏற்கனவே மகேஸ் வந்திருந்தான்…..

அவர் உள்ளே வந்ததை கவனித்தவன்…. அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

“ தயவுசெய்து, என்னை கோவிச்சுக்காதிங்க….. ப்ளீஸ்..நான் இனிமே லேட்டாக போக மாட்டேன்…”

”டேய், உன்மேல எப்பவும் எனக்கு கோபம் வராது…. ஏன்னா, நீ என்னோட செல்ல பையன்…. அதனாலதான் உன்னோட எல்லா வேலையிலும் குறுக்க வரேன்னு நினைக்கிறேன்….”

”எனக்கு தெரியும் அப்பா!! நீங்க இத்தனை நாளா என்மேல காட்டுன அன்பு, பாசம் எல்லாமே அம்மா உயிரோட இருந்தாக்கூட காட்டிருக்க முடியுமான்னு தெரியல… என்னோட 10 வயசுல அம்மா இறந்தப்ப இருந்து இந்த நிமிஸம் வரைக்கும் அம்மா இல்லாத குறையே தெரியாம வளர்ந்து இருக்கேன்….. அது உங்களால தான் அப்பா!!! “

தன் மகனை சமாதனப்படுத்தினார், சீதா என்கிற சீதாராமன்.

அவனை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றார்…… அங்கு புது பைக் அவனுடைய பிறந்தநாள் பரிசாக நின்று கொண்டிருந்தது….. நாளைக்கு அவனது பிறந்தநாள்…..

அந்த பைக் இரு அன்பு நெஞ்சங்களை சுமந்து கொண்டு ஊர்வலம் சென்று கொண்டிருந்தது!!!!!!!

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தாய்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *