படக்கவிதைப் போட்டி … (70)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்
கவிதை 1
குலசாமி எல்லைச் சாமி
காக்க வேணும் மண்ணுயிர
சொல்லவேணும் உண்மைகள
புறம்போக்கு இடமெங்கும்
நீ
சுயம்புவாய் தோன்றினாயா – சிலர்
சுயநலத்தால் தோன்றினாயா
உண்மை சொல்ல வேணும் – இந்த
உழைப்பாளி ஜனங்களுக்கு,
வானம் பார்த்த பூமியாக
பாவிமக நிக்கிறேன்
பட்டா போட்ட வீடு
வெறும் கனவா
உன்னைக் கேட்கிறேன்
புறம்போக்கு நிலத்த
பட்டா போட நினைச்சு
படுபாவிக் கூட்டம்
கோயில் கட்டி வைக்குது,
ரோட்டோர இடத்தை
அபகரிச்சு நிக்குது…………..
மூடநம்பிக்கை சாயம் பூசி
முதலாளி வா்க்கத்தின் நிலஅபகரிப்பு
ஒய்யாரமாய் இருக்குது
சாயம் வெளுக்க வேணும்
சாமியே! துணை இருக்க வேணும் ……
கவிதை 2
மண்ணை காக்க வந்த தெய்வமே!
உன்னைக் காக்க ஆளில்லே
உடைந்த பாதைகளில்
உம்முடைய பீடம்
உரக்கச் சாற்றுவது
மூடநம்பிக்கை மட்டும் தான்.
மூடநம்பிக்கையெனச் சொல்பவரெல்லாம்
உழைப்பாளி ஜனங்களுக்கு
உண்மையைச் சொன்னாலும்
முளைத்துக் கொண்டு தான் இருக்கின்றன
புறம்போக்கு இடமெங்கும்
இது போன்ற காவல்தெய்வம்
காவல் தெய்வம் ஊர் காக்க
காவல் தெய்வத்தை யார் காக்க ?
அவலமிது நம் நாட்டில்
அன்றாட நிகழ்வாகிப் போனது
priyaarul065@gmail.com
முனைவா் மா. பத்ம பிாியா
தமிழ்த்துறை உதவிப்பேராசிாியர்
எஸ்.எஃப்.ஆா்.மகளிா் கல்லூாி
சிவகாசி
எங்க ஊரு சாமி
ஊருக்கு எல்லையிலே கோவிலக்கட்டி
உன்னேத் தானே சாமி வச்சாங்க
கொட்டு மேளம் கொண்டாந்தாங்க
கும்மாள்ம் போட்டு கும்மி அடிச்சாங்க
உள்ளூர் சனமும் தப்பாமே தானே
ஒல வச்சு பொங்கலும் பொங்கி படைச்சாங்க
ஒத்துமையா அம்புட்டு சாதிசனமும் தான்
கூடி வந்து கும்பிட்டு போனாங்க
எவன் கண்ணு பட்டுச்சோ எப்படிதான்
புத்தியும் கெட்டு தொலைஞ்சுச்சோ
காதும் காதும் வச்சாப்பிலே கோயிலைத்தான்
காசுக்குப் பேசியே முடிச்சாங்க
கோயில இடிச்ச கொடுமை கதைய
குமுறி அழுது சொல்லுறேங்க
தடுத்து நிறுத்த தடியாலே அடிச்சாங்க
தாங்காமத்தான் கேட்டேங்க அதுக்கு பதிலு
சாமி ஒண்ணும் கேக்காதுன்னு
ச்மாதானம் பேச்சு பேசுதுக
எல்லாத்தையும் கொடுத்த சாமி
ஏம்பா ஒனக்கு இந்த கதி
கோயிலு இல்லாட்டி இப்போ என்ன
கும்பிடுறேன் ஒன்னே நெஞ்சுலே வச்சு
ஒலகமே ஒன்னோட வீடானாலும்
ஒக்காரது இந்த நெஞ்சிலதானே
அனுப்புனர்
ராதா விச்வநாதன்
மண்ணாகி விண்ணாகி நிற்கும் இறைவா
பண்ணாகி இசையாகி தொழும் என்னை
பெண்ணாகி பேதமை கொண்டு வாழாமல்
கண்ணாகி மணியாகி எனைக் காத்தருளுக
இடரன பலபல தொடரினும் அஞ்சேன்
இதயத்தில் நீயிருக்க பயமேது முண்டோ
இருகரம் தூக்கி உனை தினம் தொழவே
குணமதைக் குறைவின்றி கொடுத் தருகவே
சரணமென உன்னடியில் வீழ்ந்து-அந்தக்
கரண மதிலும் தூய்மை கொண்டே
பாதமதை பணிந்து நிற்கும் எம்மை
பரமனே காத்தருள இனிதடை யேதுமுண்டோ
அனுப்புனர்
ராதா விஸ்வநாதன்
முன் பெல்லாம்
கண் முன் தெய்வம்
தோன்றுமென சொல்வார்கள்
அன்றாடும் அற்புதங்கள்
ஆற்றும் அதிசயங்கள்
அரங்கேறி உள்ளன ஆனால்
கடமைகள் மற ந்து நீயும்
தடம் புரளுவது ஏன் ?
இறைவன் உண்டு என்று
இறைவனை ஏத்தியே
எழுதினார்கள் பாக்கள் அன்று
இயற்கை சீற்றம் தந்தாய்
எங்கள் தவறென உணர்ந்தோம் வெளியில் செல்லும் பெண்களை
பலியிடும் ஆண்களை கண்டும்
காணாதது மாதிரி இருப்பதேன்?
கொலை கொள்ளை என
கொலைக்களமாக மாறியிருக்கும்
தமிழகத்தை காக்கமல் இருப்பதேன்
தளர்ந்து போயிட்டாயா அல்லது கை
தாழ்ந்துபோய் நீயும் லஞ்சம் வாங்கி விட்டாயா?
வானகம் சாட்சி
வையகமும் சாட்சி
எல்லை சாமியே நீ இனியாவது
கொலைச் சாமியாகாமல் உன் குலப்
பெண்களுக்கு கொடுமை நேராதுகாத்திடு
துக்கம் துயரமெல்லாம் தூரம் போக
திக்கு திசையெட்டும் அருளாலே
மக்களை மக்களாக வாழவிடு
மாக்களாக மாற்றாமல்!
எஞ்சியுள்ள காலமாவது இனியதாக
வஞ்சகங்கள் சூழாமல் காப்பாயாக எல்லை சாமியே !
வேண்டுதல்…
குலமது காக்கும் சாமியென்றே
கும்பிட வைத்தார் முன்னோர்கள்,
நிலமதன் வருவாய் குறைந்ததாலே
நகரை நாடினர் கிராமத்தார்,
உலகைக் காப்பது கிராமமென்ற
உண்மையை உணர வைத்திடுவீர்
சிலையாய் நிற்கும் சாமிகளே
சிதைந்த நீவிரும் சீர்பெறவே…!
-செண்பக ஜெகதீசன்…