இருண்மை
பவள சங்கரி
மலையில் மணம்வீசும் மென்மலர்கள்
மாலையில் கலையிழந்து தலைசாயும்
மறுபடியும் மொட்டாகி மலரும்மணம்
இது மலரின் வாடிக்கை
மழையும் புயலும் வெள்ளமும்
மலரையும் மணத்தையும் அள்ளிச்செல்லும்
கனியும் சுவையும் காணாமலடிக்கும்
இது இயற்கையின் வேடிக்கை
மலையும் அறமும் அசராமல் நிற்கும்
கலையும் மணமும் கருத்தென கொள்ளும்
மழையும் வெள்ளமும் இயல்பென ஏற்கும்
இது மலையின் நிறம்
பூவோ புயலோ மழையோ வெள்ளமோ
காயோ கனியோ கருப்போ வெளுப்போ
மலையைப் பிளக்க மாதவம் செய்வதில்லை
இது மலையின் வரம்
பூவும் மணமும் கலையும் மலையும்
இயற்கையின் அம்சங்கள் மாறா நிலைகள்
மனமும் குணமும் மதமும் மாற்றமும்
இயல்பாய் நீளும் இருண்மைகள்