இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 204)

0

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள்.

ஒரு வாரம் ! அது இத்தனை நீளமானதா ? ஒரு வாரத்தின் அளவு அவ்வாரத்துக்குள் நடக்கும் நிகழ்வுகளின் ஆழத்தில் அமைந்துள்ளது என்று எங்கோ எப்போதோ யாரோ சொன்னதைப் படித்ததாக ஞாபகம். என்ன எதற்காக இவ்வாரத்தின் நீளத்தின் அளவு பற்றிய அலசல் எனும் எண்ணம் எழுகிறதா ? காரணம் இருக்கிறது.

இங்கிலாந்தின் அரசியல் அரங்கிலே தினமும் மேடையேறும் காட்சிகளும் அதன் மாற்றங்களும் கொடுக்கும் அதிர்வுகளும் அதன் தாக்கங்களும் தாக்கத்தின் விளைவுகளும் முன்பு எப்போதும் காணாதவகையில் நிகழ்வதாக அனுபவத்தில் முதிர்ந்த, பழுத்த பல அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

6a2b06ec-dbe7-4bb1-bfdf-2dbce6c3db78

எனது இந்த நாற்பத்தியொரு வருட இங்கிலாந்து வாழ்வில் நான் இதுவரை இவ்வேகத்தில் அரசியல் நிகழ்வுகள் நிகழ்ந்ததை அவதானித்ததேயில்லை. ஆமாம் ஐக்கிய இராச்சியம் , ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதா இல்லை வெளியேறுவதா எனும் முடிவை இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரன் பொதுமக்களின் கைகளில் கொடுத்தது ஜீன் 23ம் திகதி இன்று இம்மடலை நான் வரைந்து கொண்டிருப்பது ஜீலை 13ம் திகதி , இன்று டேவிட் கமரன் அவர்கள் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராகி விட்டார். ஆமாம் அரசியல் ஆட்டத்தின் வேகம் படுவேகமாக சுழன்றோடி விட்டது.

e9247de6-bc4c-4124-aaf0-c5c8bd196297அவ்வரசியல் அதிர்வான ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது எனும் முடிவு வெளிவந்ததையடுத்து அப்போதைய பிரதமர் அதாவது பெரும்பான்மை பெற்று இரண்டாவது தேர்தல் வெற்றியீட்டி ஒரு வருடமே முடிந்த நிலையில் தொடர்ந்து ஆறு வருடங்களாக ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்த டேவிட் கமரன் அவர்கள் இன்று தனது இராஜினாமாக் கடிதத்தை இங்கிலாந்து மகாராணியாரிடம் கையளித்தார்.

சரி இவர் தான் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக ஜூன் மாதம் 24ம் திகதி அறிவித்தபோது செப்டெம்பர் மாதம் வரை தனது கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்படுபவர் பிரதமராக பதவியேற்கும்வரை தான் பதவியிலிருப்பேன் என்று கூறியவர் இரண்டே வாரத்தில் வெளியேறியதன் பின்னணி என்ன ?

டேவிட் கமரனின் கன்சர்வேடிவ் கட்சி அவரின் அறிவித்தலைத் தொடர்ந்து தனது தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல் முறையை முடுக்கிவிட்டிருந்தது. அதற்கான தேர்தலில் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் எனப்பிரச்சாரம் செய்த பல கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முன்னணி அரசியல் பிரமுகர்கள் குதிப்பார்கள் எனும் எதிர்பார்ப்பு இருந்தது. முன்னாள் லண்டன் மேயர் பொரிஸ் ஜான்சன் நிச்சயம் தேர்தலில் குதிப்பார் எனவும் தலைவராகும் சந்தர்ப்ப்பம் அவருக்கே கூடுதலாக இருந்தது என்றும் அரசியல் அரங்கில் பலமான கருத்து நிலவியது. ஆனால் நடந்தது என்ன ?

அவருடன் இணையாக , அவரோடு ஒன்றிணைந்து ஐக்கிய இராச்சியம்b3a04ca6-dd18-423c-855d-fb04c3c41922 வெளியேறவேண்டும் எனப்பிரச்சாரம் செய்த நீதியமைச்சர் மைக்கல் காவ் அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கு முரணாகக் கூடஇருந்து குழி பறிப்பவர் போல தானே தலைவருக்கான தேர்தல் களத்தில் குதித்தார். விளைவு பொரிஸ் ஜான்சன் ஒதுங்கிக் கொண்டார். எதிர்பார்த்தது போல உள்துறை அமைச்சரான திருமதி தெரேசா மே அவர்களும், முன்னாள் வெளியுறவு அமைச்சராக இருந்த லியாம் வொக்ஸ் அவர்களும், வேல்ஸ் நிர்வாக அமைச்சரும், சுற்றுச்சூழல் அமைச்சரும் தேர்தல் களத்தில் குதித்தனர். ஒவ்வொரு சுற்றிலும் ஒருவர் நீக்கப்பட இறுதியாக திருமதி தெரேசா மே அவர்களும் திருமதி அன்ட்ரியா லீட்சம் அவர்களும் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களின் முன்னால் குதித்தனர். அங்கேயும் மறுபடி ஒரு திருப்பம். என்ன என்கிறீர்களா ?

கடந்த வாரவிடுமுறை இங்கிலாந்தின் முன்னணி தினசரிகளில் ஒன்றான “த டைம்ஸ் ” எனும் பத்திரிகை தலைவர் வேட்பாளர்களில் ஒருவரான அன்ட்ரியா லீட்சம் அவர்களைப் பேட்டி கண்டது வந்ததே சோதனை அன்ட்ரியா அவர்களுக்கு. குழந்தைப் பேறற்ற திருமதி தெரேசா மே அவர்களை விட குழந்தைகள் உடைய, தான் சமுதாயப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளும் அனுபவம் உடையவர் என்று அவர் கூறியது அப்படியே ஊடகங்களில் வெளிவந்தது.. சும்மா விடுவார்களா ! வெறும் வாயை மெல்பவர்களிடம் அவல் கிடைத்தால் எப்படி இருக்கும் ? வறுத்தெடுத்து விட்டார்கள் அன்ட்ரியா அவர்களை. தாங்காமல் திருமதி தெரேசா மே அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் அன்ட்ரியா. அது மட்டுமல்ல கடந்த திங்கட்கிழமை காலை பத்திரிகையாளர்களைக் கூட்டி நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு புதியதோர் பிரதமர் விரைவாகப் பதவியேற்றும் நிலையை உருவாக்க தாம் போட்டியினின்றும் விலகிக் கொள்வதாக அறிக்கை விட்டார். மிஞ்சியது திருமதி தெரேசா மே ஒருவர்தான். “ஏகமனதாக” எனும் முடியைச் சூட்டிக்கொண்டார் திருமதி தெரேசா மே.

அப்புறம் என்ன ?

அரசியல் அரங்கின் சக்கரங்கள் வெகுவேகமாகச் சுழன்றன. அன்றையப் பிரதமர் டேவிட் கமரன் , தான் இரண்டு நாட்களில் பிரதமர் பதவியை திருமதி தெரேசா மே அவர்களிடம் கையளிக்கப்போவதாக அறிவித்தார். விளைவாக நான் இக்கட்டுரையை ஆரம்பிக்கும் போது பிரதமராக டேவிட் கமரனும், இதை எழுதி முடிக்கும் போது பிரதமராக திருமதி தெரேசா மே அவர்களும் இருக்கும் நிலை.

ஆமாம் இப்போது ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமர் ” தெரேசா மே ” அவர்கள். யார் இந்த தெரேசா மே ?

இங்கிலாந்தின் கரையோரப் பகுதிகளில் ஒன்றான ஈஸ்ட் சசெக்ஸ் ( East Sussex) எனும் பகுதியில் ஹுர்பேர்ட் பிரேசியர் என்பவருக்கும் சைடி மேரி என்பவருக்கும் ஒரே மகளாக 1956ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் 1ம் திகதி பிறந்தார் (ஓ நான் பிறந்த அதே ஆண்டோ ?) . இவரது தந்தை ஒரு கத்தோலிக்க மதகுரு ஆவார். ஆக்ஸ்வேர்ட் எனும் பகுதியில் உள்ள தேவாலயத்தின் பாதிரியாராகப் பணிபுரிந்தார் இவர் தந்தை. ஆக்ஸ்வேர்டு தனியார் பாடசாலையில் கல்வி பயின்ற இவர் , ஆக்ஸ்வேர்டு பல்கலைக்கழகத்தில் பூமிசாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற பட்டதாரியானர். 1997 ஆம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக மேடின்கெட் பகுதிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.. தொடர்ந்து ஆறு வருடங்கள் இங்கிலாந்து அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.. இன்று ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

அவர் முன்னே இருக்கும் சவால்கள் ஏராளம் அவற்றில் எத்தனையை அவர் வெற்றிகரமாகச் சமாளிப்பார் என்பதற்குக் காலம் தான் எமக்கு விடை பகர வேண்டும்.

இவ்வாரம் நடந்த நிகழ்வுகள் பல அவற்றில் சிலவற்றையே உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். லேபர் கட்சியின் தலைவரின் முன்னால் இருக்கும் சவால்களைப் பற்றி அடுத்தவார மடலில் பார்ப்போம்.

மீண்டும் அடுத்தவாரம் சந்திக்கும்வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *