வாயில்லாப்பிராணி
மீ.விசுவநாதன்
எங்கெங்கோ பறந்தோடி எடுத்த சுள்ளி
இப்படியும் அப்படியும் அடுக்கி வைத்து
தங்குவதற் கானகூடு பறவை செய்யும் !
தகிக்கின்ற நல்வெயிலும் மழையும் கண்டும்
தங்களது உறவுகளை நன்றாய்ப் பேணும் !
தவிக்கின்ற தன்குஞ்சு வாயில் ஊட்டி
உங்களுக்கு நானிருக்கேன் என்று சொல்லி
உடல்முழுதும் அலகாலே வருடிக் கொஞ்சும் !
வாசலிலே போடுகிற அரிசிச் சோறு
வாய்க்குள்ளே வைத்தபடி காதல் பேசும்
பாசமுள்ள குருவிகளைப் பார்க்கும் போது
பாசத்தைப் பணத்திற்காய்க் கொன்று போடும்
தூசுபெறா மனிதகுணம் வெட்கிப் போகும் !
துன்பத்தில் தன்னினத்தைத் தழுவிக் கொண்டு
மாசுவராக் கருணையாலே இணைந்து வாழும்
வாயில்லாப் பிராணிகளை வணங்கு கின்றேன் !