அவ்வை மகள்

 பெண்ணின் “பெரினியம்” எனப்படும் மூலாதார யோகமுத்திரை

பெண்ணியம் என்பதை விடப் பெண்ணியலும் பெண்ணறமும் தான் மிகவும் முக்கியம் என்ற அந்த இராணுவ அதிகாரியைப் பார்த்துக்கொண்டே அப்படியே எழுந்து ஒரு சல்யூட் அடித்துவிட்டு உட்கார்ந்தேன். “என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படிப் பரவசப்படுகிறீர்கள்!” என்றார். “ஐயா! நான் நெகிழ்ந்ததன் காரணம் சொல்கிறேன் கேளுங்கள்” என்று சொன்னேன்:

‘“வங்கக் கடல்கடைந்த
மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச்
சேயிழையார் சென்றிறைஞ்சி”

என்ற எங்கள் மொழியில் உள்ள ஒரு பாசுரம் நினைவுக்கு வந்தது. குறிப்பாக, அதில் வரும் “சேயிழையார்” என்கிற சொல் என் முழு கவனத்திலும் வியாபித்தது. அதன் பொருளை நான் இந்நாள் வரை முழுதுமாய்ப் புரிந்துகொள்ளவில்லை – ஞானோபதேசம் செய்தீர்கள். நீங்கள் பேசப்பேச என்னுள், எங்கள் மொழியில் எங்கள் மூதாதையர்கள் சொல்லிவிட்டுப்போயிருக்கிற “சேயிழையார்” என்ற அந்தச் சொல்லின் ஆழ்ந்த பொருளும் அதிலே அவர்கள் சேர்த்துவிட்டுப் போயிருக்கிற அளப்பிலா நுட்பமும் புரிந்தது – நன்றி மீண்டும்” என்றேன்.

என்ன மொழி என்றார் – “இந்த உலகில் உள்ள எல்லா பேசப்படும் மொழிகளுக்கும் மூத்தமொழி எம்மொழி” என்றேன். பெயர் கேட்டார், “தமிழ்” என்றேன். என்றேன். அதற்குச் செம்மொழி தகுதியும் கூட உண்டோ? என்றார். “ஆம் ஐயா!” என்றேன். கணினி சென்றார் – உங்கள் நாடு இரண்டு செம்மொழிகளை வைத்திருக்கிறதே என்றார். சமஸ்கிருதமும் தமிழும் தொடர்புடையவையா என்றார். “ ஆம்! இரண்டிற்கும் பல பொதுப் பண்புகளும் உண்டு. பல தனிப் பண்புகளும் உண்டு” என்றேன். “Bravo!” என்று சொல்லி எழுந்து நின்று கை தட்டினார் – கை குலுக்கினார். உங்கள் திராவிட மொழிகளில் கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவையெல்லாம் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் கலந்து உருவானாவை போல் தெரிகின்றனவே என்றார். மனதுக்குள் ஒரு நிமிடம் நம்மூரில் மொழி நிலைமை திரையோடியது – “மொழியைப் புரிந்து கொள்ளும் இந்த இந்த எளிமை அங்கும் வர வேண்டுமே1” என்று எண்ணம் வேண்டியது.

“சரி விஷயத்திற்கு வருவோம், சேயிழையார் என்று ஏதோ சொன்னீர்களே அது என்ன?” என்றார். “நீங்கள் பெண் உடல் பற்றி சொன்ன யாவற்றையும் “சேயிழையார்” என்கிற ஒற்றைச் சொல்லில் எங்கள் மூதாதையர்கள் இரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்தச் சொல்லை நாங்கள் அறிவோம் என்றாலும் அதனை மேலோட்டாமாகப் பேசிப் போந்தோமே தவிர அதன் தாத்பரியத்தை உணர்ந்து கொள்ளவில்லை. இன்று அவற்றை உணர்ந்தேன் உங்கள் பேச்சின் மூலம்” என்றேன்

சேயிழை என்கிற சொல் எங்கள் மொழியில் எண்ணிறந்த இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்படுகிறது – பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் “சேயிழை” என்ற சொல் வரும். அதனை நாங்கள் பெரும்பாலும் அழகிய அணிகலன்களை அணிந்த சிவந்த நங்கையர் எனவே அறிந்து கொள்வோம். அந்த சொல்லுக்குப் பிற அர்த்தங்களும் உண்டுதான் – ஆனால், நாங்கள் அவற்றை அதிக சிரத்தையோடு பார்த்ததில்லை. உங்கள் பேச்சு என் சிந்தனையைத் தூண்டியது!” என்றேன். “என் மருத்துவ அறிவியலின் வழியே புதிய சிந்தனைகள் பிறந்தன!” என்றேன்.

“Quite interesting” மேலே தொடருங்கள் என்றார். அவருக்கு நான் அளித்த பதில் இதோ:

“ சேயிழை – இங்கு இழை என்பதை இடை எனும் சொல்லும் அந்த இழைக்குள் இருப்பதாகக் கொள்ளவேண்டும். ஏனெனில் பெண்களுக்கு இடையே பிரதானம். அதுவும் அவர்களுடைய இடை – நெய்ய்ந்து பின்னியதோர் அமைப்புள்ள எலும்பால் ஆக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல பெண்ணுக்கு இடையே பிரதானம் என்பது விளங்கும் படியாக, பிரம்மன், பெண்ணின் இடையுடன் அவளது மூளையையும் இருதயத்தையும் மட்டுமல்ல பிரபஞ்சத்தையே இணைத்து வைத்திருக்கிறான்.

பெண்ணின் இடையில் பிரபஞ்சம் அடக்கம் என்பதற்கு எடுத்துக் காட்டாக, நிலவின் இயக்கம் பெண்ணின் இடையில் நிகழ்வதைக் காண்கிறோம். அவளது மாதவிலக்கின் காலச் சுழற்சியின் கால அளவும் நிலவின் சுழற்சியின் கால அளவும் ஒன்று. ருதுவான பெண்ணுக்கு, மாதவிடாய் என்பது ஒவ்வொரு 28 நாட்களிலும் நிகழ்வது. இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமிகளுக்கு இடையில் உள்ள காலம் 28 நாட்கள் என்பதை நாம் அறிவோம். நிலவுக்கு வளர் பிறை பாதி – தேய் பிறை பாதி என்பது போல. பெண்ணின் இடுப்பில் உள்ள சூலகத்தில் கரு முட்டை இருப்பது பாதி நாட்கள் – இல்லாமல் இருப்பது பாதி நாட்கள். ஒவ்வொரு மாதமும், அமாவாசையிலிருந்து மூன்றாம் பிறை – மொத்தம் நான்கு நாட்கள் – ஒவ்வொரு மாதமும் பெண் குருதி சொரியும் முக்கியமான நாட்கள் நான்கு. மாதவிலக்கு முடிந்த நான்காம் நாள் பெண்ணின் உடலில் மகோன்னத எழிலும் சக்தியும் செறிந்து நிற்கின்றன. முழு நிலவை விட மூன்றாம் பிறையை எழிலுக்கும் வசீகரத்துக்கும், புனிதத்துக்கும், எடுத்துக்காட்டாய் முதன்மைப்படுத்தி வளர் பிறையின் மூன்றாம் பிறையை மிக முக்கியமான நாளாக நிலவின் இயக்கத்தில் காண்பிப்பது இது பற்றியே.

அது மட்டுமல்ல பெண்ணின் இடையில் கடவுளே கூட இணைந்திருக்கிறான். எங்கள் ஆலயங்களில் கர்ப்பக் கிரகத்தில் தான் மூலவர் இருப்பார். எங்கள் ஆலயத்தில் “Sanctum sanctorum” என்னும் மூலஸ்தானத்திற்குப் போகும் வழியில் நாங்கள் சில வாசல்களைக் கடந்து செல்ல வேண்டும் – பெண்ணுறுப்பில் உள்ள வாசல்களின் – துளை நிலைகளின் சாட்சிகள் அவை” என்றேன்

அப்படியா? ஆச்சரியமாய் இருக்கிறதே! மேலே சொல்லுங்கள் என்றார் – தொடர்ந்தேன்.

சேயிழை என்பதில் உள்ள “சே” எனும் எழுத்து “சிவப்பு” என்று பொருள் படும். எங்கள் ஊர் வெப்பப் பிரதேசம் – அங்கே சிவந்த நிற மங்கையர் இல்லை எனவே இங்கு சிவப்பு என்பது பெண்களின் தோலை – மேனியைக் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. எனவே சேயிழை என்பதை சிவப்பு இழை என்றே கொள்ளவேண்டும். இடை என்பது இழையில் ஏற்கனவே ஒளிந்திருக்கிறது என்பதை நான் குறிப்பிட்டேன் அல்லவா? அதன் வழியில் சென்று, இங்கு இழை என்பது எதைக்குறிக்கிறது என்று நீங்கள் கேட்டால் அது பெண்ணின் இடுப்பில் பொருந்தியிருக்கிற, முற்றிலும் இழையாலான, உறுப்பான பெரினியத்தை (perineum) குறிக்கிறது என்பேன்.

ஒரு பெண் என்ற முறையிலும் – ஒரு தாய் என்ற முறையிலும் – மருத்துவ அறிவியலில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உழன்று கொண்டிருப்பவள் என்ற முறையிலும் பெண்ணின் பெரினியத்தின் தன்மைகளை நான் மிகவும் அறிந்தவள். எந்த நிறப் பெண்ணாக இருந்தாலும் சிவப்பு நிறத்தில் முற்றிலும் திசு இழைகளால் மட்டுமேயான ஒரு உறுப்பு எல்லாப் பெண்களிடமும் இருக்கிறது என்றால் அதுதான் பெரினியம். எனவே “சேயிழை” என்பதை உடல் மருத்துவ ரீதியாகப் பார்த்தால் அது பெரினியமே எனக் கொள்ளலாம்.

சொல்லப்போனால் இந்தப் பெரினியத்தின் தன்மையை மருத்துவ அறிவியல் தொழிலுக்கு வருவதற்கு முன்பே நான் அறிந்து கொன்டேன். எப்படி என்றால் எனக்குப் பதினாறு வயது இருக்கும்போது ஓரிரவு மதுரை சென்று கொண்டிருந்தேன். அக்காவின் கணவருக்கு, விபத்து ஏற்பட்டுப்போய் தகவல் வர, உதவிக்கு என்னை உடனடியாக அனுப்பி வைக்க, சென்னையிலிருந்து செல்கிறேன் -அந்த சமயத்தில் ஒரு பெண்ணுக்கு பஸ்ஸிலேயே பிரசவம் ஏற்படலானது. அவளுக்கு உதவி செய்யப்போனேன். அப்போது பெரினியத்தின் தரிசனம் கிடைத்தது – அதன் வடிவைப் பார்த்து அப்படியே அசந்து போய்விட்டேன். அவ்வுறுப்பின் நிறமும் தெய்வீக வடிவும், அந்த சிசு அதனுள் உட்புறமிருந்து பிரவேசிக்கும் அந்தப் பிரசவத்தின் ஆற்றல் வெளிப்பாடும் என்னுள் அன்று மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கின. அன்று நான் கண்ட தொப்புள் கொடியையும் – வெளிவந்த குருதி வெள்ளத்தையும், வெளித்தள்ளப்பட்ட நஞ்சையும், சிசுவின் மேலிருந்த சாம்பல் பூச்சையும், வெளிக்காற்றை அனுபவித்த நொடி அந்த சிசுவின் உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பையும் – அந்த சிலிர்ப்பில் அது கண் திறந்த அந்த க்ஷணத்தையும் நான் இறக்கும் வரை மறவேன்.

அதுவும் அத்தருணம், தமிழில் பெரினியத்திறகு இட்டுள்ள பெயர் என் நினைவுக்கு வரவும் அது என்னை அப்படியே ஒரு உலுக்கு உலுக்கி என்னை நிறுத்திச் சொன்னது, “அடி பெண்ணே! நீ ஒரு பொக்கிஷம் – நீ ஒரு முழு முதல் தெய்வம் – நீ ஒரு பிரம்மா மட்டுமல்லடி – நீ ஒரு தாய் – தாய் என்பவள் மூன்று தெய்வங்களும் சேர்ந்த முழுமுதல் தெய்வம் – நீ படைக்கிறாய் – படைத்ததைக் காக்கிறாய் – படைத்தலும் அதைக் காத்தலும் என்ற பணியில் – உன் படைப்புக்கு எதிரிடையாய் வரும் அனைத்துத் தீய சக்திகளையும் அழித்தெறிகிறாய்! நீயே சக்தி! – உன்னால் தானடி இங்கு உள்ளவை யாவும் – நீயே அனைத்தும் நீயே பிரபஞ்சம்!” என்றது.

இத்தனை முக்கியத்துவமா – இத்தனைப் புளகாங்கிதமா என்றார் – என் நா தொடர்ந்து.

உண்மையில், பெண்ணின் பெரினியத்தின் வடிவம் ஒரு யோக முத்திரையாகும். – ஒரு பெண்ணின் உடலம் ஒரு யோக முத்திரையில் அமர்ந்திருக்கும் காட்சி பெண்ணின் பெரினியத்தில் தெரியும் – இந்த வடிவை உற்று நோக்கினால் அதற்குள்ளே அண்ட சராசரங்களும் பொருந்தியிருப்பது புரியும் எங்கள் ஊரில் ஐயப்ப சாமி ஏறக்குறைய இந்த முத்திரையோடு தான் அமர்ந்திருப்பார்.

பேசிக்கொண்டே கணினியில் சென்று எதையோ அவர் பார்த்த அந்நொடியில் அவருள் என்ன தோன்றியதோ தெரியாது – கண் பளபளத்தது.

சரி, உங்கள் மொழியில் பெரினியத்தின் பெயர் என்னவென்றார்
“மூலாதாரம்” “The ultimate origin” என்றேன்.

கண்ணில் நீர் திரண்டு முத்தாய் இறங்கியது

கலாச்சாரம் வேறு – நாடு வேறு – இருப்பதோ இராணுவப் பணி – முரடும் – கடினமும் – கொண்ட ஆள் – வாழ்வில் எத்தனையோ பெண்களைப் பார்த்தவர் – மூன்று முறை டைவர்ஸ் செய்திருக்கிறவர். ஐம்பது வயதில் நான்காம் திருமண பந்தம் ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். அப்படம் கண்டு நெகிழ்ந்தார்.

நீங்களும் பார்க்கலாம் – வயதுவந்தவராக இருந்தால்

https://en.wikipedia.org/wiki/Pelvis#/media/File:Gray408.png

What can be more noble than the female body? என்றார்.

உங்கள் மொழியும் உங்கள் கலாச்சாரமும் இத்தனை உயர்வாய் இருக்கிறதே என்றார். மூலாதாரம் என்கிறீர்களே அது பற்றி மேலும் விளக்கமுடியுமா என்கிறார். அதற்கு நான் அவ்வையைத் துணைக்கழைக்க வேண்டும். அவ்வை எங்கள் ஊரில் ஒரு சிறப்பு மிக்க பெண் புலவர் – விவேகி என்றேன்.

மேலும் பேசுவோம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “எழுவகைப் பெண்கள்: 7

  1. A really thought-provoking article, to be seriously considered. Will reserve my full comments tiill it gets completed. My best wishes to dr.renuka.

  2. புதிய கோணம், புதிய தரிசனம். கோவில் கருவறையும் மாதர் கருவறையும் ஒன்று என்ற கருத்துகளை முன்னம் படித்திருந்தாலும், இந்தப் பெரினியத்தின் யோக முத்திரை, வேறு நிலையில் நிற்கின்றது. இராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதாவைச் சக்தியாக வழிபட்டதற்கும் இதர சாக்த / சக்தி வழிபாடுகளுக்கும் தொடர்பு இருக்கும் எனக் கருதுகிறேன்.

  3. சீதாயண நாடக மதிப்புரை, 

    பிரபஞ்ச விஞ்ஞானி படைத்துள்ள எல்லாவற்றிலும் பெண்ணே உன்னதப் படைப்பு என்பது என் அழுத்தமான எண்ணம். 

    கடவுள் படைப்பிலே நுட்ப ஞானமுள்ள, தாய்மைக்கான நுணுக்க உறுப்புள்ள, சிசுவுக்குக் கருப்பையில் உயிரூட்டும் பெண்ணே முதலில் உருவாக்கப் பட்டு, ஆணை அவளுக்கு உதவும் ஒரு கருவியாய்ப் பிறகு வடிவாக்கியது என்று கருதுகிறேன்.

    1.  https://www.vallamai.com/?p=69878

    2. https://www.vallamai.com/?p=29618

    சி. ஜெயபாரதன்

  4. Wow! Great unveiling of the treasure inside a single word. There are aplenty of such treasures to explore!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *