செந்தூர் முருகன்
மீ.விசுவநாதன்
குடகு மலையோ பொதிகை மலையோ
குறிஞ்சித் தலைவன் இடமதுதான் – என்
குமரன் இருக்கும் குகையதுதான் – ஒரு
படகு எடுத்துக் கடலில் மிதப்பேன்
பயத்தை மறந்த பயணம்தான் – குக
பக்தி கொடுக்கும் துணிவேதான் !
செந்தூர் முருகன் சிரிக்கும் அழகை
சிந்தை செய்வ தொருபழக்கம் – ஒரு
சின்னப் பொழுதி(ல்) அவன்நெருக்கம் – நான்
எந்தூர் திசையில் இருந்த போதும்
இந்தப் பிள்ளை நினைவேதான் – என்
இதயம் அவனின் அருளேதான் !
வானம் முழுக்க வரைந்த விரல்கள்
வடித்த உருவே முருகன்தான் – அதை
வணங்க மனமும் அடங்கும்தான் – தன்
மானம் நிறுத்த மலையில் தனித்த
மகேச மகனே குருவானான் – அவன்
மட்டும் எனக்குள் குடியானான் !