இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 7

0

அவ்வை மகள்

திரிகரணத்தைப் பறைசாற்றும் மும்முகச் சிம்மம்

இறையியல் சிந்தனைகள்

திரிகரண சுத்தியும் அத்வைதமும் வள்ளலாரின் இறைமார்க்கத்தில் இரண்டறக் கலந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது என்றோம். திரிகரண சுத்தியை சைவ சித்தாந்தம் வெகுமிக முக்கியமாக வலியுறுத்தும் பாங்கு வெகு நேர்த்தியான விஷயம். பதஞ்சலி எனும் ஆத்ரேயரிடம் திரிகரணசுத்தியின் வாக்கு வடிவத்தின் ஆரம்பப்புள்ளியைக் காணலாம் என்பர். திருமூலரும் திரிகரண சுத்தியைப் பற்றிப் பகர்வதாகவும் காண்கிறோம்.

உடல், சொல், மனம் என்கிற மூன்று ஜீவாதார மையங்கள் மனிதனது இயக்கங்களுக்கு ஓயாமல் அடிமைகளாகி, அவனது/அவளது இயக்கங்களால் பாதிக்கப்பட்டு – உருமாற்றம் அடைந்து, அவன்/அவள் எத்தகையவர் என்பதை அவரறியாமலேயே பரிபாஷையாக பிறருக்கு அப்பட்டமாய் அறிவிக்கின்றன. அந்த அறிவிப்பால் பிறருக்கு சிலபல பாதிப்புகள் எழுகின்றன என்பதால், இந்த மூன்றையும் ஒவ்வொரு தனி நபரும் சுத்தி செய்வது அவசியமாகிறது. ஆக, தனிமனிதர்களின் மெய், வாக்கு, சிந்தையின் தூய்மையானது – சமுதாயத்தின் – பிரபஞ்சத்தின் – புனிதத்தின் – இறைமையின் இலக்கணம் என்பது திரிகரண சுத்தியின் அடிப்படை.

உடல், சொல், மனம் என்கிற மூன்றும் ஏன் அதிமுக்கியமானவையாகின்றன என்றால் அவை மனிதனால் ஓயாமல் கையாளப்படும் கரணங்களாய் அதாவது ஆயுதங்களாய் இருக்கின்றன.

உணவும், உடுப்பும், உறையுளும், மனிதனது உடல் அவனுக்காய்ப் பேசுகின்ற பாஷையாகின்றன. மனிதன் பேசுகின்ற சொல் அவன்/அவள் குலத்தையும், ஒழுக்கததையும், பூர்வீகத்தையும், பக்குவத்தையும், முதிர்ச்சியையும், சகவாசத்தின் தன்மையையும் வெளிக்காட்டும். மனிதனின் மனம் அவனது இலக்கு, சிந்தனை, கருத்து ஆகியவற்றில் புலப்படும்.

குடித்திருப்பவனின் உடல் தள்ளாட்டம் காணும் அல்லவா?. கேவலமான வார்த்தை பேசுகிறவனிடம் ஒழுக்கம் இருக்காது தானே? பேருந்தில், “மகளிர்” என்று பேர் போட்டிருக்கிற சீட்டில் அமர்ந்துகொண்டு நிற்கும் பெண்ணுக்கு இருக்கையை காலி செய்து அவள் உட்கார இடம் கொடுக்காமல், பார்த்தும் பாராமுகமாய் வேண்டுமென்றே அழுத்தமாய் அமர்ந்திருக்கிறவனின் உள்ளத்தில் பெண்ணார்ந்த சிந்தனை நல்லதாக இல்லை என்று வெளிப்படையாய் அவன் நடத்தை சொல்லுகின்றதல்லவா?

ஆக, மெய், வாக்கு, மனம் எனும் மூன்றுமே தாமே முந்துறுத்தி வந்து ஒருவன் அல்லது ஒருத்தியின் தராதரத்தை வெளிக்காட்டும் வல்லமை உடையன எனக் காண்கிறோம்.

இப்போது சிலர் கேள்வியை எழுப்பலாம்: அவனவன் சொந்த வாழ்வில் எப்படியோ பேசட்டுமே, எப்படியோ நடந்து கொள்ளட்டுமே – அப்படியே கெட்டும் கூடப் போகட்டுமே. அது அவனது தனிப்பட்ட விஷயம். அவன் தனிவாழ்வால் இங்கே என்ன குடி முழுகிப்போய்விடுமா என்று.

நல்ல கேள்வி தான்.

இத்தகைய கேள்வியை எழுப்புவோர்கள் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால், தனிமனிதர்களின் நடத்தைதான் குடியை – குலத்தை – சமுதாயத்தை ஆக்குகிறது அல்லது பாழாக்குகிறது என்பதையே.

குடும்பங்கள்-சமுதாயம் இரண்டும் பிரிக்கவியலா ரெட்டையர்கள். இந்தப் பிரிக்கவியலா அமைப்பை Domino விளையாட்டுடன் ஒப்பிடலாம். சமுதாயம் என்பது Domino விளையாட்டின் கடைசிப் பலகை போன்றது. குடும்பங்கள் Dominoவின் பிற பலகைகள். கடைசிப் பலகைதான் எல்லாப்பலகைகளிலும், மிகப் பெரிதானதும் வலிதானதுமான பலகையாகும். இந்த வலிய பலகை சரிந்து வீழ நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் – அங்குள்ள பலகைகள் யாவற்றுக்குள்ளும் மிகமிகச் சிறியதான அந்த “தம்மாத்துண்டு” எனும்படியான குட்டிப்பலகையை இலேசாக அசைத்தால் போதும். காண்க Domino விளையாட்டை:

https://www.youtube.com/watch?v=y97rBdSYbkg

Domino effect எனப்படும் தொடர் வினை எவ்வாறு நிகழ்கிறதோ அவ்வாறே தான் குடும்பங்களின் தாழ்ச்சியும் வீழ்ச்சியும் சமுதாயத்தைத் தாழ்த்துகின்றன.

maxresdefault

சிந்தித்துப் பாருங்கள்: பக்கத்துவீட்டுக்காரர் குடித்துவிட்டு வந்து அவர் வீட்டுக்குள் அவர் அட்டகாசம் செய்ய நாம் நம் வீட்டை காலி செய்துகொண்டு வேறிடம் குடிபுகும் முயற்சியில் இறங்குகிறோம். எதிர் வீட்டு ஆளின் பார்வை சரியில்லை – மனைவியை ஒரு மாதிரி பார்க்கிறான் என்று அந்த ஊரையே விட்டு வெளியேறுகிறோம். மகனுடன் படிக்கும் குழந்தைகள் மிக்க கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்துப் பேசுகிறார்கள் என்று நம் குழந்தையை வேறு பள்ளிக்கூடத்துக்கு மாற்றுகிறோம் அப்பள்ளி எத்தனைத் தொலைவானாலும் பரவாயில்லை என்று. இவற்றையெல்லாம் நாம் ஏன் செய்கிறோம் என்றால் பிறரது மெய், வாக்கு, மனம் ஆகியனவற்றால் நாம் பாதிக்கப்படுவதால் தான்.

இங்கு வாக்கு என்பதனை பேச்சு என்று மட்டும் கொள்ளாமல் எழுத்து என்றும் கொள்வது வேண்டும். இன்றைய ஊடக யுகமான காலகட்டத்தில், தனி நபர்களின் எழுத்துக்கள் – சினிமாப் பாடல்கள் – சினிமா வசனங்கள் – சில அரசியல்வாதிகளின் கூக்குரல்கள் – சில மதவாதிகளின் அணுகுமுறைகள் – சில பயங்கரவாதிகளின் கொடூரச் சிந்தனைகள் – மாமிசத்துக்காய் பசுக்களையும் இளம் கன்றுகளையும் கொன்றுகுவிக்கும் சில புலால் வர்த்தகர்களின் வலைப்பின்னல் வசனங்கள் ஆகியன – எத்தனை ஆக்ரோஷணமாய்ச் சென்று சமுதாயத்தைச் சின்னாபின்னமாக்குகின்றன என்பதனை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். தனிமனிதனின் வாக்கிலே விஷமும், நெருப்பும், போதையும், ஏமாற்றும் கலந்து போவதன் விளைவுகளை நாம் நம் கண்முன்னே காண்கிறோம். கெடுதல் செய்யும் உள்ளெண்ணம் உள்ள மனிதர்களின் நாக்கு, பிண்ணாக்காய் நஞ்சு கக்குகிறபோது சமுதாயமே கொலைக்களமாகிறது.

ஆக, தனி மனிதர்களே சமுதாயத்தை உயர்த்தவும் தாழ்த்தவும் வல்லவர்கள் என்பதை உணர்க. இது நிற்க.

பொதுவாக, நம் வழக்கில், ஒருவர் சொல்வதை பிறர் கேட்கிறார்கள் என்றால் அவரை செல்வாக்கு நிறைந்தவர் என்கிறோம். செல்லுபடியாகும் வாக்கு வைத்திருப்பவர் அவர்.

வள்ளுவர் கூறுவார்:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

என்று.
ஒரு நிலத்தில் நிலைத்துத் தங்கியிருக்கும் வேதங்களும், சாத்திரங்களும், பழமொழிகளும், இலக்கியங்களும் அம்மண்ணில் வாழ்ந்த – வாழுகிற மேலோர்கள் எத்தகையவர்கள் என்பதையே காட்டுகிறது என்பதை வள்ளுவர் வெகு அனாயாசமாகச் சொல்லிப்போனார்.

ஆக, சமுதாயம் என்பது ஒரு ஜடப் பொருள் அல்ல என்பதைத் தெளிவாய்ப் புரிந்து கொள்கிறோம்.

ஆம்! சமுதாயம் என்பது ஜீவிதம் நிறைந்தது மட்டுமல்ல – அது அங்கு வாழும் அனைத்து மக்களின் ஜீவாதாரத்தின் அடிப்படைத் தளமுமாகும். மேலும், சமுதாயம் என்பது எந்நாளும் ஒரு சிறுகுழந்தையைப் போன்றது. ஒரு சிறு குழந்தை தன் இயக்கங்களுக்கும் போக்கிற்கும் டக்கென்று பார்த்து – டக்கென்று பழக பளிச்சென்ற முன்னுதாரணங்களை எதிர்பார்த்து நிற்கிறது. அதைப்போலத்தான் எந்த ஒரு சமுதாயமும், டக்கென்று பார்த்து – டக்கென்று பழகவென பளிச்சென்ற முன்னுதாரணங்களை எந்நாளும் எதிர்பார்த்து நிற்கின்றது. இந்நிலையில் சமுதாயத்தில் கிளப்பப்படும் முன்னுதாரணங்கள் நல்லவையானால் சமுதாயம் நல்லதாகும் அம்முன்னுதாரணங்கள் அல்லவை என்றால் சமுதாயமும் அல்லவையாகும்.

மனிதன் வாசம் செய்வதாக அவன் வசிக்கும் இடத்தில், அக்கம் பக்கம் உள்ள மனிதர்களின் பழக்க வழக்கங்கள், சொல், சிந்தனை ஆகியவை எவ்வாறு மனிதனை வடிவமைக்கின்றன – எவ்வாறு அவனை அடையாளம் காட்டுகின்றன என்று பார்க்கவேண்டும் என்றால் – நம் வாழ்வில் நாம் எப்போதாவது சந்தித்தேயாகவேண்டிய ஒரு நிகழ்வைப் பார்ப்போம். நீங்கள் ஆணாக இருந்து எங்கோ வெளி ஊருக்குப் போயிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம் – அப்போது அங்கு நீங்கள் சென்றுள்ள இடத்தில், உங்களைப் பார்த்து ஒரு பெரியவர் கேட்கிறார், “நீங்கள் எந்த ஊர்?” என்று. ஏன் அவர் அவ்வாறு கேட்கிறார் என்றால் ஊர் எனும் சமுதாயத்தை நீங்கள் சுமந்து கொண்டபடியே எங்கும் செல்கிறீர்கள் என்பதால் தான். அவரது கேள்விக்கு நீங்கள், “நான் மும்பையிலிருந்து வருகிறேன்” என்று சொல்வதாக வைத்துக் கொள்ளவோம். “மும்பையா அது? பாம்பாய் தானய்யா அது! பேரைத் தான் மாத்திப்புட்டானுகளே! அது சரி, அந்த ஊர் அப்படி இப்டின்னு கேள்விப்பட்டிருக்கேனே – ரெட் லைட் ஏரியாக்கள் சர்வ சகஜமா இருக்குமாமே – நீயும் அங்கல்லாம் போனதுண்டா?” என்பார். உங்களுக்கு அவர் சொன்னது அசவுகரியமாகக் கூட இருந்திருக்கும் – உங்களுள் கோபம் கூடக் கொப்புளித்திருக்கும் – இப்படிப் பச்சையாய்ப் பேசிவிட்டாரே என்று கொதிப்பீர்கள். ஆனால் உள்ளத்தில் உள்ளதுவாறு அவர் பேசுகிறார். அவர் பேசியது மும்பையைப்பற்றி அவரறிந்த உண்மை. அவர் வாய் பேசியதெல்லாம் அவர் உள்ளத்து மொழி. அவர் கள்ளம் கபடம் அல்லாதவர் – இதுவரையிலும் மும்பை செல்லாத காரணததால் அறிவுத்தேடலோடு தன் சிற்றறிவை வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவே.

நாம் வெளியிடத்துக்கு எங்கு சென்றாலும் பிறர் நம்மை இவ்வாறு விசாரிப்பத்து வெகு சகஜம். இதில் சங்கோஜப்பட்டோ – கோபப்பட்டோ இலாபமில்லை – ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் நம் சமுதாயத்தை தேகத்திலும், அங்கத்திலும், தோற்றத்திலும், பார்வையிலும், பேச்சிலும் சுமந்தபடியே செல்கிறோம். இவ்வகையில் நாம் நம் சமுதத்தின் பிரசிங்கிகள் – அரசாங்கம் நியமிக்கும் ஏதோ ஓரு பிரசிங்கியா (Ambassador) நம் ஊரை – நம் நாட்டை – நம் கலாச்சாரத்தைப் பரப்புகிறார்? நாம் தாமன்றோ உண்மைப் பிரசிங்கிகள்?

இன்னொன்றையும் பாருங்கள்: ஒரு நாட்டின் தலைவராக ஒருவரை நியமிக்க பல தகுதிகளை – பல யோக்கியதாம்சங்களை முன்வைக்கிறார்கள். அது ஏன் என்று நிச்சயம் நீங்கள் யோசித்திருப்பீர்கள். இருப்பினும் சுருக்கமாக அதனைக் கொஞ்சம் பார்ப்போம். நன்னடத்தையும், நற்சிந்தையும், ஒழுக்கமான பரிபாஷைகளும் கொண்ட ஒருவர் மட்டுமே சமுதாயத்தில் ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்து இந்த சமுதாயத்தை வழிநடத்த முடியும் என்கிற ஒரே காரணம் தான் நாட்டின் தலைவருக்கு வைக்கப்படும் யோக்கியதாம்சங்களின் அடிப்படை.

சமுதாய மனித முன்னுதாரணங்களை, சமுதாயப் பிரதிநிதிகளைப் பற்றி, வெகு எளிமையாக – வெகு அருமையாகப் பேசிப்போயிருக்கிறவர் வள்ளுவர்:

காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்

தக்காங்கு நடித்த தலைச் செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

அல்லவைதேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

சமுதாயத்தை நெறிநடாத்திச் செல்லும் தனிமனிதர்களின் திரிகரண சுத்தியின் தனிப்பெரும் வல்லமையை வள்ளுவர் வெகு சாதுரியமாகவே சொல்லிப் போஇருக்கிறார் அல்லவா?

இவ்வகையில் வள்ளலார் முன்வைத்த சமரச சன் (சத்) மார்க்கம் என்பது தனிமனிதர்களின் திரிகரண சுத்திக்கு முதன்மை ஸ்தானம் அளித்தது. கரணம் எனும் சொல்லுக்கு – ஆயுதம் – வித்தை – ஒரு கால அளவு என்று பல அர்த்தங்கள் இருக்கின்றன. இவற்றில், திரிகரணம் எனப்படும் மும்முனைத் தூய்மையில், மெய், வாக்கு, மனம் என்கிற மூன்று ஆயுதங்களைக் கையாளுவதிலே அப்பழுக்கற்ற தூய ஆளுகை வேண்டும் என்பது முன்னிறுத்தப்படுகிறது. கரணம் தப்பினால் மரணம் என்பதன் பொருளை இங்கு முழுமையாக உணரமுடிகிறது. மெய், வாக்கு, மனம் என்ற மூன்றும் ஆயுதங்கள் எனும்போது, ஒரு கத்தியைப் போல், ஒரு சுத்தியைப்போல், ஒரு கோடரியைப் போல், ஒரு துப்பாக்கியைப்போல் இவை செயல்படும் வீரியம் கொண்டவை என்பதையும், இவற்றைக் கையாளுபவர்கள் நெறிபிறழும்போது இந்த ஆயுதங்கள் பதம் பார்த்துவிடும் என்பதும் புலப்படுகிறது.

கரணத்தின் பிற இரண்டு அர்த்தங்களும் கூட, திரிகரண சுத்திக்கு மிகவும் பொருந்துகின்றன. எப்படியெனில், திரிகரண சுத்தியை, பிள்ளைப் பிராயத்திலேயே வேரூன்றவேண்டும் – அப்போது தான் அது தனிமனிதர்களின் வாழ்வில் நிலைபேற்றுக்கு நிற்கும். வளர்ந்த பிறகு கற்றுக்கொள்ளலாம் என நினைப்பது – கடல் ஓய்ந்தபின் – குளிக்கலாம் எனக் காத்திருப்பதை போன்றது. ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையுமா என்பார்கள் அல்லவா? இளமையிற் கல்வி சிலைமேல் எழுத்து என்பது சத்தியம் மட்டுமல்ல – சாத்தியமான விஷயமும் ஆகும். திரிகரண சுத்தியை, அன்றாட நடைமுறைக்குக் கொணர்ந்து நிறுத்த – சரியான பெற்றோர்கள் – சரியான பள்ளி போதனைகள் – சரியான ஆசிரியர்கள் – சரியான இறைமை சிந்தனைகள் உள்ள மக்கட்பிரதிநிதிகள் என நாம் சமுதாய விஸ்தாரத்துக்குள்ளே தான் மீண்டும் பயணிக்க வேண்டி இருக்கிறது.

இளம் பிராயத்தில் திரிகரண சுத்தியை நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்துவிட்டோமேயானால் – அது தனிமனிதர்களின் வாழ்வியல் வித்தையாக – சமுதாயத்தின் ஒருமித்த வாழ்வியல் வித்தகமாக எழுமிக்கிறது. அந்நிலையில், நம் சமுதாயம் தாழ எந்நாளும் வாய்ப்புகள் இல்லை. இல்லறவாழ்வில், குடும்பங்களில் இருப்பவர் யாவரும் வாய்மையை மேவினால் அது

மனத்தொடு வாய்மை மொழியும் தவத்தோடு
தானஞ்செய் வாரின் தலை

என்ற வள்ளுவரின் வாக்கை மனதில் அசைபோட்டபடியே நம் நாட்டின் அசோக சக்கரச் சின்னத்தைப் பாருங்கள், “வாய்மையே வெல்லும்” என்று நம் சின்னத்தின் மூன்று சிம்மக்குரல்களும் உலகம் முழுதும் ஒலிக்கும்படி கர்ஜிப்பது என்ன? “எங்கள் நாட்டில் தனிமனிதர்கள் யாவரும் மெய், வாக்கு, மனம் என்கிற திரிகரணங்களால் வாய்மை பயிர் செய்து, வாய்மை அறுவடை செய்து, வாய்மையையே உணவாகவும், நீராகவும், மூச்சாகவும் கொண்டு வாழ்கின்றார்கள்” என்பதல்லவா?

ஆன்ம நேயத்தில், திரிகரண சுத்தியில் அசோகச் சக்கரவர்த்தி ஒரு தலைசிறந்த சமுதாயப் பிரதிநிதி. இவ்வகையில் ஞானத் துறவியாகிய வள்ளலாரும், தொழில்நுட்பத் துறவியாக ஸ்டீவ் ஜாப்ஸும் கொண்டிருந்த வாய்மை ததும்பிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுச் சிந்தனை பிரிந்தும் ஒத்ததாய் விளங்கும் சீர்மை ஒரு சிறப்புறு மேன்மை. சமுதாயச் சிந்தனையில், திரிகரண சுத்தியையும் அருள், ஒளி, கருணை என்கிற திரிசூலத்தையும் இவர்கள் இருவரும் கலந்த இலகுவை உணர்தல் பேரின்பமே.

மேலும் பேசுவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *