.தமிழ் அழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசு கலைகல்லூரி, அரியலூர்

ஆதி இலக்கியங்கள் கவிதை வடிவின. தொல்காப்பியம் கூறும் செய்யுளியல் இலக்கணம் அவர்காலத்திற்கு முன்னர் எழுந்த இலக்கியங்களின் வடிவங்களை விளக்கும். காரிகை கற்று எவரும் கவிதை இயற்றுவதில்லை. யாப்பருங்கலக்காரிகை எனும் யாப்பிலக்கணநூல் தொல்காப்பியத்திற்கு பின்னர் தோன்றியது. வடிவம் மட்டும் கவிதையாகிவிடாது. தேமா, புளிமா சேர்க்கையோடு எதுகை, மோனையுடன் கருத்துணர்வு நிலையும் சேர்ந்தால்தான் கவிதை உயிர்பெறுகிறது. தற்காலத்தில் கவிஞர்கள் பலர் முற்றிலும், வடிவிலும், பொருளிலும் மாறுபட்டு புதிய பிறவியாகக் காட்சியளிக்கும் புதுக்கவிதைகளை இயற்றிவருகின்றனர். அத்தகைய புதுக்கவிதைகளின் நோக்கும் போக்கும் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நோக்கம்

          அக்காலக் கவிதைகளில் அகமும், புறமும் பாடுபொருளாயின. இன்று மனித சமுதாயத்தின் பல்வேறு படிநிலைகள் பாடுபொருளாக்கப்படுகின்றன. நிற்கவே நேரமில்லாத இயந்திர உலகத்தில் விரைந்து படிக்கவேண்டும். எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கவிஞர்கள் தத்தம் அனுபவ கருத்துக்கள் விரைவில் மக்களைச் சென்றடைய வேண்டும் எனக் கருதுகின்றனர்.

          சொல் புதிது, பொருள் புதிது என்று பாரதி கூறியிருப்பதும் மரபிலிருந்து மாற்றம் தேவை என்பதையே குறிக்கிறது. அதனால்தான் மானிடவர்க்கத்தின் பாடுகளையும், பட்டினிக் கோலங்களையும், பெண்களின் நிலைகளையும் கருத்துப்பொருளாகக் கொண்டு படைப்புகளைப் படைக்கின்றனர்.

          புதுக்கவிதை பிரெஞ்சுப்புரட்சியின் விளைவாகப் பிரான்சு நாட்டில் தோன்றியதாகும். ஆங்கிலக் கவிஞர் ‘வால்ட் விட்மன்’, ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதையைப் படைத்தார். தொடக்கக்காலத்தில் ஆங்கிலம் படித்த கவிஞர்கள் மட்டுமே பிறநாட்டுக் கவிஞர்களின் புதுக்கவிதைகளைப் படித்து தமிழ் மொழியில் புதுக்கவிதைகளை எழுதினர். எனினும் கவிதை வடிவங்களில் காலந்தோறும் புதுமைகள் நிகழ்ந்துள்ளன. நாட்டுப்புற பாடல்களிலும் புதுக்கவிதைகளின் வடிவங்களைக் காணலாம். ஜப்பான் நாட்டு ஹைகூ கவிதைகள் தமிழில் குறும்பாக்கள் தோன்றக் காரணமாயின. இருப்பினும், தமிழ் விடுகதைப்பாடல்களை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

          எருக்கிலைப் பழுப்பதேன்

           எறுமைக் கன்று சாவதேன்

           பாலின்மையால்”

இவ்விடுகதைப் பாடல் ஜப்பானிய ‘ஹைகூ’ பாடலின் வடிவம் கொண்டதுதான் என்றாலும், ஒலிநயச் சேர்க்கை இருப்பதாலும், எதுகை மோனை அமைவதாலும், இதனை மரபுக்கவிதையில் அடக்கிவிடுகின்றனர். கருத்து வடிவத்தை நோக்கின் இது ஹைகூ வடிவமேயாகும்.

          மரபுக்கவிஞர்கள் உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி போன்ற உத்திகளைப் பயன்படுத்தி யாப்பிற்கு உட்பட்டு கவிதைகளை யாத்தனர். அவற்றைப் புரிந்துகொள்ள விளக்கவுரை, பொழிப்புரை, கருத்துரை என உரையாசிரியர்களின் உரை விளக்கங்கள் தேவைப்பட்டன. புதுக்கவிதைப் படைப்பாளர்கள், உருவம், உள்ளடக்கம், படிமம், குறியீடு, அங்கதம், முரண் என்பன போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தி யாப்பின்றி கவிதைகளை எழுதுகின்றனர். மரபு மீறலிலும் புதுமைகள் பொலிகின்றன. புதிய வகையான உவமைகளைப் பயன்படுத்தி யதார்த்தப்போக்கில் கருத்துக்களை கவிதையாக்குகின்றனர். நமக்குப் பரிச்சயமான உவமைகளைக் கையாளும்போது கவிதை சிறக்கின்றது. சிலர் பிற கவிஞர்களின் படைப்புகளைப் படித்துவிட்டு அதைப்போல எழுத முயல்கின்றனர். சிலர் தங்கள் விருப்பத்தை நிறைவுசெய்யும் பொருட்டு முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி கவிதைகளைக் குறைப் பிரசவமாக்கிவிடுவதால் தரமற்ற கவிதைகள் தோன்றுகின்றன. அவை நீர்க்குமிழிபோல மறைந்து விடுகின்றன.

புதிய பாடுபொருள்

          கடவுளர்களையும், அரசர்களையும் பாடிவந்த காலம்மாறி சமுதாய அவலங்களை விளக்க பாட்டாளிகள், பாமரர்கள், சமூக விரோதிகள், அரசியல்வாதிகள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், விபச்சாரிகள் போன்றவர்களையும் வேலையில்லாத் திண்டாட்டம், வரதட்சணைக் கொடுமை, வறுமை, லஞ்சம், பெண்ணியம், தலித்தியம் என்பன போன்ற அன்றாட நடப்புகளையும் புதுக்கவிதையின் பாடுபொருளாக்குகின்றனர்.

படிமம்

          பொருளையும், அனுபவத்தையும், உணர்ச்சிகளையும் படிப்பவர் மனதில் எழுப்பிக் காட்டுவதையே ‘படிமம்’ என்கின்றோம்.  இன்றைய புதுக்கவிதைகள் நிலைத்து நிற்பதற்கும், இலக்கியத் தகுதிபெறுவதற்கும் படிமம், குறியீடு, அங்கதம், முரண் போன்ற கருத்துச்செறிவுகள் அவசியமாகின்றது.

          புதிதாகக் கவிதை எழுத நினைப்பவர்கள் எடுத்த எடுப்பில் காதலைப் பற்றி எழுதுகின்றனர். ஆகையால் புதுக்கவிதைகளில் காதல் கவிதைகள் பெருகிவருகின்றன.

          இனியவளே                       

           ஈரக்கூந்தலை இறுக்கி

           முடியாதே

           எனக்கு இதயம் வலிக்கிறது”      (. பன்னீர்செல்வம்)

புரியாத புதிர்

          சிலர்தம் விருப்பம்போல சொற்களைப் பயன்படுத்திப் புலனுக்கோ, புத்திக்கோ புரியாத வண்ணம் புதுக்கவிதை படைக்கின்றனர்.

          நிஜம் நிஜத்தை நிஜமாக

          நிஜமாக நிஜம் நிஜத்தை

          நிஜத்தை நிஜமாக நிஜம்

          நிஜமும் நிஜமும் நிஜமாக

          நிஜமோ நிஜமே நிஜம்

          நிஜம் நிஜம் நிஜம்” (ஆத்மாநாம் கவிதைகள், . 120)

இக்கவிதை நிஜமாகவே புரியாத புதிராகும். இவ்வகைக் கவிதைகள் படைப்பாளருக்கும், வாசகருக்கும் உள்ள தூரத்தை அதிகரிக்கின்றது.

அரசியல்வாதி

          சமூக அக்கறையுள்ள கவிஞன் சில சமூகச்சீர்கேடுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றான். கவிஞர் ஈரோடு தமிழன்பன்,

         லுகைகள்

          சீர்திருத்தங்கள்

          வாக்குறுதிகள்’      

          புரட்சி தவத்தைக் கலைக்க

          ஆதிக்க

          புரியிலிருந்து புறப்பட்டுவரும்

          மேனகை ரம்பை

        திலோத்தமை ஊர்வசியாய்”

என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசும் அரசியல்வாதிகள் மக்களின் உள்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றார்.

வேலையில்லாத் திண்டாட்டம்

          கவிஞர் அறிவுமதி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் நிலையை,

          எம்ப்ளாய்மெண்ட்

          எக்சேஞ்சுக்கு

          புறப்பட்டுப்போன

          மகனிடம் கேட்டுக்கொண்டார்

          தந்தை

          என்னுடையதையும்

          ரெனிவல் செய்துகொண்டு

          வந்துவிடப்பா”

என்று பாடியுள்ளார். இக்கவிதையில் ஆங்கிலச் சொற்கள் தமிழ் ஒலிக்கேற்ப பயின்று வந்துள்ளன. இது பிறபொழிச்சொற்கள் சரளமாகக் கையாளப்பட்டுள்ள போக்கினைக் காட்டுகிறது.

பெண்ணியக் கருத்துக்கள்

          பெண்ணிய எழுத்தாளர்கள் பலர் தங்கள் கவிதைகளில் பெண்ணியக் கருத்துக்களைக் கையாண்டுள்ளனர். கவிஞர் மு. மேத்தா பெண்சிசுக் கொலையை,

          பெண்கள் கிளிகளாம்

            உவமை சரி

           நெல்மணி”

எனும் கவிதை வரிகளில் பாடியுள்ளார். வரதட்சணைக் கொடுமையால் மணமாகாத முதிர்கன்னியின் நிலையை,

          விழிகள்

          நட்சத்திரங்களை வருடினாலும்

          விரல்கள் என்னவோ

          ஜன்னல் கம்பிகளோடுதான்”

என்று கண்ணில் கனவுகளையும், நெஞ்சில் காதலையும் சுமந்து கொண்டு வாழும் பெண்களின் அவலநிலையை இக்கவிதை விளக்குகிறது.

          கவிதை என்ற சொல் மரபுக்கவிதையைக் குறித்தமையால் வடிவாலும், பொருளாலும் புதுமையாக விளங்கும் கவிதைகளைப் புதுக் கவிதைகள் என்று அழைக்கின்றனர். யாப்பு மீறல் மட்டுமே புதுக்கவிதைப் பண்பாகாது. யதார்த்த பாடுபொருளாலும் உணர்வு நிலையாலும், சொல்லாடல்களாலும் புதுமை பெற்று விளங்குவதால் புதுக்கவிதை நிலைத்து நிற்கிறது. ஆண்கவிஞர்களும், பெண் கவிஞர்களும் தங்கள் அனுபவங்களையும், சமூகச் சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டிக் குறைந்த அடிகளில் எளிய சொற்களைப் பயன்படுத்துவதால் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சிறந்த கவிதைகள் நிலைத்தும், தரமற்ற கவிதைகள் அழிந்தும் போவதை அறிய முடிகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *