மறந்துவிட முடிவதில்லை !
புலம்பெயர்ந்து வந்தாலும் புலனெல்லாம் பிறந்தமண்ணில்
நலங்கள்பல இங்கிருந்தும் நம்மனமோ வெறுமைநிலை
உளம்மகிழ வாழவெண்ணி உழைக்கின்றோம் ஓய்தலின்றி
உளமகிழ்வோ சிலநேரம் உளநெகிழ்வோ பலநேரம்
மனம்முழுக்க ஊரையெண்ணி மெளனித்தே நிற்கிறதே !
நீர்கண்ட இடமெல்லாம் நீந்திநாம் களித்திருந்தோம்
யாரென்ன கொடுத்தாலும் நாம்விரும்பி அதையுண்டோம்
தார்ரோட்டில் ஓடிநின்றோம் தலைநிறைய எண்ணெய் வைத்தோம்
கார்ப்பயணம் இல்லாமல் கால்நடையாய் சென்றுவந்தோம் !
ஓடிநிற்போம் பாடிநிற்போம் உடல்முழுக்க வியர்வைவரும்
ஒடியல்கூழ் குடித்துவிடின் உற்சாகம் தேடிவரும்
பனங்கிழங்கு பனாட்டு பனங்குட்டான் பால்றொட்டி
பாங்காக சுவைத்தபடி பந்தாடி மகிழ்ந்துநிற்போம் !
சைக்கிளை எடுத்துக்கொண்டு சவாரி போய்வருவோம்
சந்தோஷம் மனமெல்லாம் தானாக வந்துநிற்கும்
சைவத்தார் கடைவடையை சட்டினியில் தொட்டுநின்று
சகலரும் சுவைத்தநிலை சரித்திரமாய் போச்சுதிப்போ !
எங்களது கல்லூரி அருகிலுள்ள கடையதனில்
இடியப்பம் இடிசம்பல் இருப்பதுவோ சிலநாளே
தங்கராசு அண்ணனது தாராள மனத்தாலே
எங்களுக்கோ இடியப்பம் எப்படியோ கிடைத்துவிடும் !
பாடசாலை விடுமுறையில் பலநண்பர் சேர்ந்தபடி
கீரிமலைக் கேணிநோக்கி கிளம்பிடுவோம் சைக்கிளிலே
கேணியிலும் குளித்திடுவோம் கிட்டவுள்ள கடலிலும்
ஆசைதீர நீச்சலிட்டு அனைவருமே மகிழ்ந்துநிற்போம் !
சித்திரையில் பட்டங்கட்டி திரளாகப் பறக்கவிட்ட
சத்தமிட்டுக் கூத்தாடி சகலருமே நின்றிடுவோம்
வட்டமிடும் பட்டமெலாம் வாவெனவே அழைக்குதென
வண்ணக் கருவிழியால் வானத்தைப் பார்த்துநிற்போம் !
போரென்னும் பெயராலே ஊரெல்லாம் ஓடியது
ஊரிலுள்ள மக்களெலாம் உருக்குலைந்தும் போனார்கள்
ஊரைவிட்டு பேரைவிட்டு உற்றாரை இழந்துவிட்டு
யாருறவும் இல்லாத நாட்டிலிப்போ வசிக்கின்றோம் !
எங்களது உழைக்கும்சக்தி எந்நாட்டில் இருந்தாலும்
மங்காமல் இருப்பதனால் வாழுகிறோம் வீழாமல்
பொங்கிவரும் தமிழுணர்வால் எங்கள்தமிழ் வளர்க்கின்றோம்
என்றாலும் தமிழ்பற்றி இன்னுமே எண்ணல்வேண்டும் !
ஊரிலேவாழ்ந்த அந்த உவப்பில்லா காலமதை
உள்ளமது நினைக்கையிலே ஒருவெறுமை தெரிகிறது
வசதியுடன் வாழ்ந்தாலும் வசந்தகாலம் மனம்முழுக்க
வாழ்ந்துகொண்டே இருப்பதனை மறந்துவிட முடிவதில்லை !