மீ. விசுவநாதன்

 

பெற்ற உதவியை மறப்பதும்
உற்ற துணைதனை இழப்பதும் – மனமே
கற்ற வழியெது எண்ணுவாய் – தீ
தற்ற மொழியிலே சொல்லுவாய் !

நித்தம் கவலையில் திளைப்பதும்
சுத்த நினைவினை இழப்பதும் – மனமே
சித்தம் அறிந்துடன் காட்டுவாய் – உன்
குத்தம் குறைகளைக் கொட்டுவாய் !

உருவில் அழகினைக் கருதியும்
அருகில் பணத்தது புழுதியும் – மனமே
உருகி உருகியே கொஞ்சுவாய் – உயிர்
திருகித் தவிகையில் அஞ்சுவாய் !

நீரில் மிதக்கிற எண்ணையாய்
நாரில் விடுபடும் மலர்களாய் – மனமே
நூறில் ஒருவராம் என்றிட – நீ
சேறில் கமலமாய்த் தோன்றுவாய் !

(அரையடி வாய்பாடு: மா, விளம், விளம்)
(05.08.2016 07.39 am)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *