மாக்கருணைக் கொடையன்றோ !
புலம்பெயர்ந்து சென்றாலும் புறப்பட்டு வந்திடுவார்
நலம்கிடைக்கும் நல்லூரான் நற்றிருவிழா காண்பதற்காய்
புலனைந்தும் தனைமறந்து புத்துணர்வு பெற்றுநிற்கும்
புதுமையினைப் பெற்றுவிட புறப்படுவார் அன்பரெலாம் !
வெள்ளைமணல் வீதியிலே விரதமுடன் அடியார்கள்
உள்ளமெலாம் உருகிநிற்க உருக்கமுடன் பாடிநின்றி
கள்ளமெலாம் களைந்துவிடு கந்தாவென அழைத்து
நல்லதமிழ் பாடிநிற்பார் நல்லூரான் சன்னிதியில் !
நாகரிகம் வந்தாலும் நல்லூரான் கோவிலிலே
நல்லதமிழ்ப் பண்பாடே நாளுமே மிளிர்ந்துநிற்கும்
நோயகல வீனைதீர நூறுமுறை அடியழித்துக்
காதலுடன் நல்லூரான் காலடியைப் போற்றிநிற்பார் !
முத்தமிழைத் தந்தகந்தன் அத்தமிழைக் கேட்பதற்காய்
எத்திக்கும் எதிரொலிக்கும் எழில்கொஞ்சும் எங்கள்தமிழ்
தமிழ்கேட்ட அனைவருமே தமைமறந்தே இருப்பார்கள்
இவையாவும் நல்லூரான் இருப்பிடத்தின் பெருமையன்றோ !
துறைதோய்ந்த நல்லறிஞர் துணிவுநிறை இளையோர்கள்
அவையேறித் தமிழ்சாற்றி அனைவருக்கும் விருந்தளிப்பார்
மறையுடனே திருமுறையும் மனம்சிறக்கச் செய்துநிற்கும்
மங்கலங்கள் நல்லூரான் மாக்கருணைக் கொடையன்றோ !
நல்லூரை நினைத்துவிடின் நம்மனத்தில் மாற்றம்வரும்
எல்லாமே எங்களுக்கு இறையெனவே எண்ணவரும்
நல்லசித்தர் பரம்பரையே நல்லூரில் உருவாச்சே
நாமுமங்கு சென்றுவிடின் நாளுமே நன்மைவரும் !