எல்லோருக்கும் சமநீதி எப்போது?
நாகேஸ்வரி அண்ணாமலை
நடிகர் அருண் விஜய் போதையில் காரை ஓட்டி ஒரு காவல் நிலையத்தில் நின்றிருந்த வேனில் மோதி, அதைச் சேதப்படுத்தினார். நான்கு நாட்களுக்குமுன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடிகை ராதிகாவின் மகளின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு, விடிய விடிய மது அருந்தியிருக்கிறார். மறுநாள் காலை மூன்று மணிக்கு ஒட்டலிலிருந்து கிளம்பி நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் காரை ஓட்டி வந்திருக்கிறார். அவருடைய மனைவியும் உடன் இருந்தார். காரை மிகவும் வேகமாக ஓட்டிச் சென்று காவல்நிலைய வாகனத்தின் மீது மோதி அதைச் சேதப்படுத்திய.சத்தம் கேட்டு வெளியே வந்த நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரிகள் காரிலிருந்து போதையில் தள்ளாடியபடி இறங்கிய அருண் விஜயையும் அவர் மனைவியையும் கைதுசெய்தனர். காவல்துறையினர் அருண் விஜயை விசாரித்தபோது செமபோதையில் இருந்தார். பரிசோதனையில் குடித்த மதுவின் அளவு இரத்தத்தில் சதவிகிதமாக ஐம்பது இருந்தது.
வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க அருண் விஜய் பேரம் பேசினார். காவல் அதிகாரிகள் உடன்பட மறுத்தனர்; உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பினர். இதற்கிடையில் நடிகர் அருண் விஜயின் தந்தையான நடிகர் விஜயகுமார் அங்கு வந்து சேர்ந்தார். மகன் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்றும். சேதமடைந்த வாகனத்தைத் தான் சரிசெய்து தருவதாகவும் கூறினார். தனி நபர் வாகனங்களில் சேதம் ஏற்படுத்தினால் மட்டுமே இந்திய சட்டப்பிரிவு 279இன் கீழ் சமரசம் செய்துகொள்ள முடியும். பொதுச் சொத்து என்றால் சமரசம் ஏற்படுத்த முடியாது. அதனால் அதிகாரிகள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு மாறாக விஜய்குமார் தன் அறிக்கையில் சொல்லியிருப்பது உண்மையாக இருக்க முடியாது.
நுங்கம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவிலிருந்து அருண் விஜயின் வழக்கு பாண்டிபஜார் காவல்நிலையத்திற்கு போக்குவரத்துக் குற்றங்களை வழக்கை விசாரிக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு அருண் விஜய் போலீசார் அழைத்தபோது தந்தை விஜயகுமாரின் காரில் வருவதாகச் சொன்னார், போலீசாரும் அதை அனுமதித்தனர். ஆனால் அவர் வரவில்லை.
அதனால், காவலிலிருந்து தப்பி ஓடியவர்களின் பட்டியலில் அருண் விஜய் சேர்க்கப்பட்டார். இதன் பிறகு அருண் விஜய் சரணடைந்தார். அதை அடுத்து வாகன சட்டப் பிரிவு 185, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 279 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் பணம் செலுத்திய பின் ஜாமீனில் அவர்களுடைய காரை எடுத்துச் சென்றனர். அருண் விஜய் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பொதுச் சொத்திற்குச் சேதம் ஏற்படுத்தியது என்ற பிரிவுகளின்கீழ்மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
இதே மாதிரி இன்னொரு வழக்கு. பெங்களூரைச் சேர்ந்த பவதாரணி என்பவர் ஒரு பார்ட்டியில் குடித்துவிட்டுத் தன் காரை ஓட்டிக்கொண்டுவந்த போது வேலை முடிந்து வீட்டுக்குத் தெருவில் நடந்துகொண்டிருந்த ஐம்பது வயதான ஒரு தையல்காரர் மீது காரை ஏற்றினார். அதன் பிறகு அருகில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் மீது மோதினார்; நடைப் பயிற்சியில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதினார். நல்ல வேளையாக, இவர் சிறு காயங்களுடன் தப்பினார். ஆனால், தையல்காரர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிரிழந்தார். லண்டனில் MBA Pடித்துக்கொண்டிருக்கும் இப்பெண் இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருக்கிறார். போலீசாரின் இரத்தப் பரிசோதனையில் இவர் அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்தது தெரிய வந்தது. இவரைக் காவல்துறை கைதுசெய்து காவலில் வைத்திருக்கிறது. போலீஸிடம் தான் ஒரு பத்திரிக்கையாளர் என்று பொய் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன பத்திரிக்கை நின்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஒரு அப்பாவி தையல்காரரைக் கொன்றதற்கு இவளுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? போக்குவரத்து சம்பந்தமான கொலை என்றாலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் பதினைந்து ஆண்டுகளாவது சிறைத்தண்டனை கிடைக்கும் இந்தியாவில் இந்தப் பெண் ஜாமீனில் வெளியே வந்து லண்டனுக்குப் போய்விடலாம்!
பிரபல இந்தி நடிகர் மும்பையில் கடற்கரைச் சாலையில் குடித்துவிட்டுக் காரை ஓட்டிய போது நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த ஆறு பேர் மேல் காரை ஏற்றினார். அவர்களில் ஒருவர் இறந்தார். நீதிமன்றத்தில் முதலில் விபத்து நடந்த நேரத்தில் தன் டிரைவர்தான் காரை ஒட்டினார் என்று சொல்லி, அவருக்குத் தண்டனை வாங்கிக்கொடுத்துத் தான் தப்பிக்கலாம் என்று நினைத்தார். ஆனாலும், கீழ் நீதி மன்றம் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்தது. ஜாமீனில் வெளிவந்து. மேல்முறையீடு செய்து பன்னிரண்டு ஆண்டுகள் வழக்கு நடந்த பின் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார்.
மேலே சொன்ன குற்றங்களை ஒரு எளியவர் செய்திருந்தால் சட்டம் அவரைச் சும்மா விட்டிருக்குமா? முதல் வழக்கிலும் மூன்றாவது வழக்கிலும் ஈடுபட்டவருக்கு நடிகர் என்ற மமதை. இரண்டாவது வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் லண்டனிலிருந்து விடுமுறைக்கு வந்த இடத்தில் குடிக்கும் பார்ட்டியில் கலந்துகொண்டு ஒரு அப்பாவி உயிரைப் பலிகொள்ள வேண்டுமா? இவர்களுக்கெல்லாம் இறைவனின் கோர்ட்டில் என்ன தண்டனை காத்திருக்கிறதோ?