சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

0

-க.பிரகாஷ் 

விருந்தோம்பல்

     விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவுமுறை. பொதுவாக விருந்தோம்பல் உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பதுண்டு.  ஆங்கிலத்தில் விருந்தோம்பல் என்ற சொல்லுக்கு ‘ஹாஸ்பிட்டாலிட்டி’ என்று குறிப்பிடுகின்றனர். இது இலத்தீன் மொழிச் சொல்லான ஹாஸ்பெஸ் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல்லோ ‘அதிகாரம் கொள்ளல்’ எனப் பொருள்படுவதான ‘ஹாஸ்டடிஸ்’ என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ‘ஹோஸ்ட்’ என்பதன் பொருள் சொற்சார்ந்து அப்படியே உரைப்பதாயின் அந்நியர்களின் பெருமகன் எனப் பொருளாகும்.

     ஹோமரின் காலங்களில் கிரேக்க மதக் கடவுளரின் தலைவராக இருந்த ஜீயஸ் என்னும் கடவுளின் பொறுப்பில் விருந்தோம்பல் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஜீயஸ் கடவுளை ஜெனோஸ் ஜீயஸ் (ஜெனோஸ் என்பதன் பொருள் அந்நியன்) என்றும் கூறுவதுண்டு. விருந்தோம்பலே தலையாய பணி எனும் மெய்ம்மையை வலியுறுத்துவதாக இது அமைந்தது. கிரேக்கத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரை அவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவரான புரவலர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே அவரது பெயரைக் கூடக் கேட்டறிந்து கொள்ளும் வழக்கம் உண்டு.

பண்டைய கால விருந்தோம்பல்

     பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களுக்கு விருந்தேம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. தனது விருந்தாளிகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டனவா என்று உறுதிசெய்து கொள்வது ஒரு புரவலனின் கட்டுப்பாடாக இருந்தது. பண்டைய கிரேக்கச் சொல்லான எக்ஸெனியா என்பதன் பொருள் விருந்தாளி – நட்புச் சடங்கு உறவைச் சுட்டுவதாகும்.

     பண்டைய உலகில் விருந்தோம்பல் எவ்வாறு மிகப்பெரும் இடம் பெற்றிருந்தது என்பதை பாசில் மற்றும் ஃபிலோமின் கதை விவரிக்கிறது. இக்கதையில் பழங்காலத்திய கடவுளரான ஜீயஸ் மற்றும் ஹெர்ரமஸ் ஆகியோர் ஃபிர்ஜியா நகரில் எளிய உழவர் போல வேடம் புனைந்து வருகின்றனர். இரவுக்கான உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் அலைகையில் பெரும்பாலும் மூடிய கதவுகளையே சந்திக்கின்றனர். இறுதியாக பாசிஸ் மற்றும் ஃபிலோமினின் இல்லத்தை அடைகின்றனர். தாங்கள் ஏழ்மையில் வாடியபோதும் இத்தம்பதி இருக்கும் மிகக் குறைவான உணவை விருந்தினருக்கு அளிக்கின்றனர். தங்களது விருந்தினர் உண்மையில் கடவுள் என அறிகையில் தங்களது வீட்டைக் காக்கும் ஒரே வாத்தையும் வெட்டிப் படைப்பதற்கு முன்வருகின்றனர். இதற்கு வெகுமதியாக கடவுளர் அவர்களுக்கு வரம் ஒன்றை கொடுக்கின்றனர்.

செல்ட்டிக் நாகரிகங்களில் விருந்தோம்பல்

     விருந்தோம்பல் என்னும் பண்பு, குறிப்பாக, பாதுகாப்பு அளிப்பது ஆகும்.  செல்ட்டிக் நாகரிகத்தைச் சார்ந்த சமூகங்களில் மிகுந்த அளவில் மதிப்புற்றிருந்தது. அடைக்கலம் கேட்டு வரும் ஒருவருக்குப் புரவலரானவர், உண்டியும் உறைவிடமும் மட்டும் அன்றித் தமது கவனிப்பில் இருக்கையில் அவருக்குத் தீங்கு ஏதும் நேராத வண்ணம் பாதுகாக்கவும் வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு யதார்த்தமான வாழ்க்கையில் உதாரணம் ஒன்றை வரலாறு அளிக்கிறது.

கி.பி 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்தது ஸ்காட்டிஷ் மெக்கிராகோர் எனும் குலம். இலாமோண்ட் என்னும் குலத் தலைவர் கிளைன்ஸ்டிரேவில் வாழும் மெக்கிராகோர் தலைவரின் இல்லத்தை அடைந்து தாம் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வருவதாகக் கூறி அடைக்கலம் கோருகிறார். தமது சகோதரத் தலைவரை கேள்விகள் ஏதும் கேட்காமலேயே மெக்கிரோகர் வரவேற்கிறார். பின்னர், இரவுப் பொழுதில் இலாமோண்ட் தலைவரைத் தேடி வரும் மெக்கிரகோர் குல மக்கள் மெக்கிரகோரிடம் உண்மையில் அவரது மகனையே இலாமோண்ட் தலைவர் கொன்றுவிட்டதாக குறிப்பிடுகின்றனர். விருந்தோம்பலின் புனிதக் கடமையின் பாற்பட்டு மெக்கிரோகர் தலைவர் இலாமோண்ட்டைத் தனது குல மக்களிடம் ஒப்படைக்க மறுப்பது மட்டும் அல்லாது மறுநாள் காலை அவரை அவரது பூர்வீக இடத்திற்குத் தாமே வழித்துணையாக உடன்சென்று அனுப்பிவைக்கின்றார்.

இந்தியாவில் விருந்தோம்பல்

     உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. தொன்மையான கலாசாரங்களைப் போலவே விருந்தோம்பல் உள்ளிட்ட பல அருமையான பண்புகளை இந்தியக் கலாசாரமும் கொண்டுள்ளது. மூடன் ஒருவன் அழையாத விருந்தாளியுடன் தனது சிறு உண்டியை மறுபேச்சின்றிப் பகிர்ந்து கொள்கையில் தன்னிடம் வந்த விருந்தாளி மாறுவேடம் பூண்ட இறைவன் என்பதைக் கண்டு கொள்கிறான். அவனது தாராள மனத்திற்காகக் கடவுள் அவனுக்கு மிகுந்த செல்வமளிக்கிறார்.

     பசியுடன் இருக்கும் அனைவரும் உண்பதற்காகப் பெண் ஒருத்தி தன்னிடம் இருக்கும் கிச்சடி அனைத்தையும் சமைத்து அளிக்கிறாள். ஒரு நாள் அவளிடம் இருக்கும் உணவுப் பண்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடவே இறுதியாகப் பசியுடன் வரும் ஒருவனுக்குத் தன் உணவையே அவள் அளிக்கையில் இறைவனிடம் இருந்து என்றும் குன்றாது நிறைந்தே இருக்கும் கிச்சிடி கொண்ட பாத்திரம் ஒன்றைப் பெறுகிறாள். குழந்தைகளாகத் தாம் இருந்த காலம்தொட்டே இத்தகைய கதைகளைக் கேட்டு வளரும் பெரும்பாலான இந்தியர்கள், விருந்தாளியே ஆண்டவன் என்பதை உணர்ந்து, சமூக நிகழ்வுகளிலும் விருந்தாளிகளின்பால் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளும் இந்த அணுகு முறையை உருவாக்கினர்.

எனவே தமிழில் படைக்கப்பட்ட தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள், சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் விருந்தோம்பல் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

“…………………………………………………………………………………………….
     உண்டாயின் பதம் கொடுத்து
     இல்லாயின் உடன் உண்ணும்
     இல்லோர் ஒக்கல் தலைவன்
    அண்ணல் எம்கோமான், வைந் நுதி வேலே”                (புறம் – 95)

     செல்வமுடையராய் இருக்கும்போது உணவு கொடுத்தும், இல்லாதபோது இருப்பதைப் பகிர்ந்து உடன் உண்ணும் வறியோர் சுற்றத்திற்குத் தலைவனும், தலைமை சான்றவனுமாகிய வேந்தன், அவனுடைய கூரிய துனியையுடைய வேல் முதலான அவைதாம் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து குறுகிய பணிக் களரியில் கிடப்பனவாயின.

     “ஒரு தலைப் பதலை தூங்க ஒரு தலைத்
       தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
       கவிழ்ந்த மண்டை மலர்க்கு நர்யார் எனச்
      சுரன் முதல் இருந்த சில்வளை விறலி”                                     – (புறம் – 103)

     தோள் அமையினது ஒருபுறத்தே பதலை என்னும் கருவி தொங்குகின்றது. மற்றொரு புறத்தே துளையுடைய சிறிய முழா தொங்குகின்றது. இவற்றைச் சுமந்தவாறே எமக்கு உணவு இடுவார் யாருமிலராயினர். எமக்கு உணவு இட்டு கவிழ்ந்து கிடைக்கும் உண்கலத்தை மலர்த்த வல்லார் யாரெனச் சொல்லிச் சுரத்திடையே வந்திருந்து வருந்தும் விறலியே… நீ அவனிடத்துச் செல்வையாயின், பல வேற்படையையுடைய அதியாமான் ஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும் படுதலால் ஈரம் காயாத உண்கலத்தில் மெழுகான் இயன்ற மெல்லிய அடைபோலக் கொழுத்த நிணம் மிக அளித்தல் வல்லன்.

     “………………………………………………………………………………………………
     பிறர் அஞ்சுவது அஞ்சி
     புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழிஎனின்
     உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
     அன்ன மாட்சி அனையர் ஆகி”  ( புறம் – 182)

     தேவர்க்குரிய அமிழ்தம் தெய்வத்தாலோ தவத்தாலோ தமக்க வந்து கூடுவதாயினும் அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டலும் இலர். யாரோடும் வெறுப்பிலர் பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி, அது தீர்த்தற் பொருட்டுச் சோம்பியிருத்தலும் இலர். புகழ் கிடைக்குமாயின் தம் உயிரையும் கொடுப்பர், பழியெனின் அதனால் உலகம் முழுதும் பெறினும் கொள்ளார்; மனக்கவலை இல்லார். அத்தகைய மாட்சிமைப்பட்ட தன்மையராய், தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் சான்றோரால் இவ்வுலகம் இருக்கின்றது.

     தனித்துத் தாம் மட்டும் உண்ணுவதை விரும்பார்; இதனை இனிது எனத் தமியர் உண்டலும் இலர் என்றார். யாவரிடத்தும் அன்புடையர் என்பதை உணர்த்த முனிவிலர் என்றும் அஞ்சத்தகும் துன்பத்திற்கு அஞ்சி, அதனால் செயல்படாது சோம்பியிரார் என்பதை ‘துஞ்சலும் இலர்’ என்று குறித்தார்.

     “உண்க என உணரா உயவிற்று ஆயினும்     ………………………………………………………………………………………………………………………..
     வரகும் தினையும் உற்றவை எல்லாம்
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென
    …………………………………… கூட்டு” ( புறம் – 333)

     தம்மிடம் உள்ள வரகும் தினையும் இரவலர்க்கு வழங்கப்பட்டுவிட்டன. குறி எதிர்ப்பாகத் தந்த பொருள்களும் கிடைக்கப் பெறவில்லை. வீரனின் மனைவி, விதைப்பதற்காக வைத்திருந்த தினையைக் குத்தி உணவு சமைத்து வழங்கினாள். அவ்வுணவே போர் மேற்செல்லும் வீரனின் உணவுமாயின. ஒரு வீரனின் மனைவியின் விருந்தோம்பும் இயல்பு இப்பாடலால் விளக்கப்பட்டுள்ளது. பகைவரொடு போர் செய்வதற்கு அரசர்கள் வழங்கும் பொருளை அவன் பாணர் முதலியோர்க்கும் பரிசாக வழங்குவான்.

     “எழுதி யன்ன திண்நிலைக் கதவம்
     கழுதுவழங்கு அரைநாள் காவல் மடிந்தென     ……………………………………………………………………………………………………..
     இம்மை உலகத்து இல் எனப் பல்நாள்
     பொம்பல் ஓதி நீவிய காதலொடு”  (அகம் – 311)

          மழை பெய்யாது பொய்த்தமையால் திசையெல்லாம் வெப்பம் மிகுந்தது. பாலைவழி வருவோரைப் பேணிக் காக்கும் பண்பினைப் பெற்ற வெற்றி ஆயர்கள் இளைய எருதுகளின் எழுத்தில் கட்டிய மூங்கில்குழாயுள் அடைத்து வைத்த சுவைமிக்க புளிச் சோற்றினை தேக்கின் இலையில் இட்டு அப்புதியோரின் பசி நீங்கக் கொடுத்தார்.

     அத்தகைய புல்லி என்பானது நல்ல நாட்டின் அப்பாலுள்ள கடத்தற்கரிய பாலை வழியைக் கடந்து நம் தலைவர் சென்றிருந்தாலும் காலந் தாழ்த்தாது நின்னை நினைந்து விரைந்து வருவார்.

     “ அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்              முல்லை சான்ற கற்பின்
      மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே”

                                       ( நற்றி – 142)

     இரவு நேரத்தே விருந்து வரினும் உவப்பவள் என் தலைவி. அவள் என்சொற் கேட்டு இல்லிருந்து நல்லறம் செய்யும் கற்பினையும், மென்மையான இயல்பையும் இளமையையும் உடையவள் ஆவாள். அத்தகைய காதலி தங்கியிருப்பதும் பொய்யாத வருவாயுடையதுமான ஊர் காட்டகத்தே அமைந்தது.

***** 

குறிப்புகள்: 

சங்க இலக்கியம்
புறநானூறு – 1, 2
அகநானூறு – 1, 2
குறுந்தொகை – 1, 2
நற்றிணை – 1 – நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்
41 – பி -சிட்கோ, இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை – 098

*****

க.பிரகாஷ்
தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
முனைவர் பட்ட ஆய்வாளர் ( பகுதி நேரம்)
தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *