க. பாலசுப்பிரமணியன்

 

கன்னியாகுமரி தேவி குமரி அம்மன்

wpe7

நீலக்கடலோரும்  நிற்கின்ற நீலியே குமரியே !

நிலமகளும் அலைமகளும் கலைகொடுத்த செல்வியே

நிலவோடு கதிரும் எழுந்திடுமே நின்விழியிலே !

நிழலான வாழ்விற்கு நிஜம்காட்டும் மாயே!

 

அலையோசை கடலோரம் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க

அரியணைகள் துறந்தோர் அடைக்கலமாய் காத்திருக்க

அகத்தினையும் செகத்தினையும் வென்றிடவே வழிகாட்டி

அருளாட்சி செய்கின்ற  எழில்ராணி அபிராமி  !

 

கடல்காற்றின்  கானத்திற்கு காதணிகள் அசைந்திருக்க

களையான மூக்குத்தி கலங்கரை ஒளிபெருக்க

கருங்குழலை  அன்றலர்ந்த மலர்கள் அலங்கரிக்க

கன்னிகையே! காலமெல்லாம் காலடியில் கண்விழிப்பேன் !

 

கேரளத்து இளநீரால் நித்தம் நீராட்டி

கார்மேக ஊஞ்சலிலே உன்னைத் தாலாட்டி

கன்னித்தமிழ் சொல்லால் உன்னைப் பாராட்டி

கண்மணியே! கண்ணிமைக்குள் நித்தம் காத்திருப்பேன் !

 

பரமனைத் துறந்த துறவியே பார்வதியே !

பக்தர்கள் குரலுக்குப் பணிந்திடும் பாரதியே !

பாரெல்லாம் படைத்தாளும் பவானி பகவதியே !

பாணனை அழித்திட்ட பரமேஸ்வரி பயங்கரியே !

 

குமரியாய் நிற்கின்ற குலமகள் செல்லமே

குவிந்திடும் நிலமெல்லாம் காலடி சரணமே

கோலங்கள் பலகொண்டு  கூடிய பெண்மையே

கொலுவிருக்க வருவாயே! குறைவின்றி அருள்வாயே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *