“கரையைத் தேடும் அலைகள்” – நூல் மதிப்புரை
உமாஸ்ரீ
நான் ரசித்த புத்தகம் – லக்ஷ்மி ரமணனின் “கரையைத் தேடும் அலைகள்”
சிறுகதை எழுதுவது ஒரு கலை. சிறப்பாகச் சிறுகதை எழுதுவது ஒரு தனித்திறமை. எழுத்தாளர் லக்ஷ்மி ரமணனிடம் அது மிகுதியாக இருக்கிறது. லக்ஷ்மி ரமணன் ஒரு அருமையான எழுத்தாளர். குடத்திலிருக்கும் விளக்குப் போல் அடக்கம் மிகுந்தவர். வாசகர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்.
அவர் எழுதிய ”கரையைத் தேடும் அலைகள்” என்னும் புத்தகத்தைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஒரு நாவலும், ஒரு குறு நாவலும், ஒன்பது சிறுகதைகளும் ஆக மொத்தம் 11 கதைகளைக் கொண்ட ஒரு அருமையான தொகுப்பு. மொத்தம் 224 பக்கங்கள். கண்ணில் பட்டால் விட்டுவிடாதீர்கள்.
“ கரையைத் தேடும் அலைகள்” அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவாகப் பரிசு பெற்ற நாவல். 15 அத்தியாயங்கள். 105 பக்கங்கள். பிருந்தா, சபேசன் தம்பதிகள் அமெரிக்காவில் டெட்ராயிட் விமான நிலையத்தில் இறங்குகிறார்கள். அமெரிக்காவில் நிகழ்ந்த சம்பவங்கள். மகிழ்ச்சி பொங்க மனநிறைவைத் தந்த சம்பவங்களுடன் அவர்களது அமெரிக்க விஜயம் நிறைவு பெற்றது! என்று நாவலை முடிக்கிறார் ஆசிரியர்.
”நேற்று இல்லாத மாற்றம்” சிறுகதையும் அமெரிக்காவில் உள்ள இந்தியக் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசலைப் பற்றியும் அது எப்படிச் சாதுர்யமாகத் தீர்க்கப்படுகிறது என்பதையும் அழகாக விவரிக்கிறது.
அமுதசுரபி சிறுகதைப் போட்டியில் பரிசு வாங்கிய கதைகள் “ பத்து பவுன் சங்கலி” மற்றும் ”அத்தையின் கட்டில். ” லோகநாயகி அத்தை அபூர்வ பிறவி. பத்து வருடமாய்த் தனக்கு அடைக்கலம் தந்த கட்டில், இங்கேயே என் உயிர் பிரியட்டும்னு சந்தோஷமாச் சொன்னா. முடிவு வந்துடுத்தேன்னு கலங்கவே இல்லை. போர் பூமியில் நிற்கிற வீரன் மாதிரி… “
அவர் பிரிவு கேட்டு அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். கட்டில் மள மளவென்று முறிஞ்சி பீஸ் பீஸாய் விழுந்துடுத்தாம்.
என் கண்களில் பொங்கிய நீரை அடக்கிக் கொண்டேன். அத்தைக்கு அழுதால் பிடிக்காது“ என்று கதையை முடித்திருப்பார் ஆசிரியர். ஆனால் கதையைப் வாசிக்கும் வாசகரின் கண்ணில்வரும் நீரை அடக்க முடியாது என்பது உறுதி.
கலைமகள் அமரர் சூடாமணி நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைதான் “சொல்லாமலே” .
இலக்கிய பீடம் இதழில் வெளியான துணை, தேவி வார இதழில் வெளி வந்த ஒரு கைத்தடியின் பயணம் மற்றும் பந்தம் ஆகிய இரண்டு சிறுகதைகளும் குறுநாவலான லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த காற்று நகரில் ஒரு காதல் கதை என எல்லாமே அருமையான கதைகள்.
இப்போது தில்லி தூரமில்லை – இலக்கியப் பீடம் பரிசுபெற்ற கதை –சிவாவின் காதல் நிறைவேறாமல் போய்விடுகிறது. அதற்கு விதிதான் காரணம் என்பது கதையின் கரு.
ஒரு கதை – சுதேசமித்திரனில் வெளிவந்த கதை. இது என்னைப் பற்றிய கதையல்ல என்று ஆரம்பிக்கும் ஆசிரியரின் கதை சொல்லும் உத்தி மனதைக் கவருகிறது.
நல்ல கதை, ஆற்றோட்டமான நடை, ஒரு முறை படித்தால் மறுபடியும் படிக்கத் தூண்டுமளவுக்கு மிகவும் சுவாரஸ்யமான எழுத்து. சிறுகதை எழுத ஆவலாயிருப்பவர்கள் அவர் கதைகளை முன்னோடியாய்க் கொள்ளலாம்.
எழுத்தாளர் லக்ஷ்மி ரமணன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!