பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

14699821_1119456678108530_1064601304_n

62059640n05_rகாயத்ரி அகல்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 22.10.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி .. (83)

  1. அனைத்தும் ஆட்டத்துள்
    அடங்குவது உலகாமோ . . . . .

    ஆடுமது ஆட்டமெல்லாம்
    மாதவளின் ஆட்டம்
    கூடுமது கூட்டமது
    உடனாடும் கூட்டம்
    மாதவளின் ஆட்டமதில்
    மாதவனின் தோற்றம்
    கைமொழியோ கனிமொழியோ
    கவிதைநிகர் கலைமொழியோ
    உடனாடும் குழுமாதர்
    உடல்மொழி உரைப்பர்
    தடம் மாறா ஆடலுடன்
    பாடலுமே இசைக்க
    பன்னுதமிழ் இன்னிசையால்
    பாரோரே இரசிக்க
    மங்கையவள் முன்னாட
    பின்னாடும் மதிமுகங்கள்
    கையசைவில் கவிபாடும்
    குழலசைவே துதிபாடும்
    ஆட்டமதின் நாயகியாய்
    ஆடுமிவள் தெளிவாக
    ஆடும் பரம்பொருளாம்
    ஆதிசிவன் தன்ஆட்டம்
    ஆதிகேசவனின் ஒயிலாட்டம்
    ஆதிசக்தியவள் நெறியாட்டம்
    அனைத்தையும் படைத்து
    ஆடலுடன் காட்டியதால்
    ஆதிபிரம்மத்தின் வழியாமோ
    ஆதிமாயை தொழிலாமோ
    அனைத்தும் ஆட்டத்துள்
    அடங்குவது உலகாமோ
    அடங்காத மனமதனை
    அடக்குவதும் அறிவாமோ
    அறியாத நிலையறிந்து
    அதுவாக ஆவதுவே
    அத்வைதம் உரைத்ததுவே
    ஆடலில் உரைத்தாலே
    அனைவர்க்கும் போதுமன்றோ.

    நக்கினம் சிவம்

  2. ஆடர் கலையே பரதமாகும்

    அதனை ஆரம்பித்தவரும் நடராஜராகும்

    ஆடலும் பாடலும் இரு கண்கள்

    ஒன்றையொன்று சார்ந்த கலைகள்

    பாடல் செவிக்கு விருந்து

    நாட்டியமோ கண்ணுக்கு விருந்து

    நாட்டியம் என்றாலே பரத நாட்டியமே

    தொன்றுதொட்டு வந்த கலை அம்சமே

    நாட்டியத்தில் பல வகை உண்டு

    மாநிலத்திற்கு,மாநிலம் வேறுபடுவதுண்டு

    நாட்டியதிலே கண்கள் பேசும்,கையும்,காலும்,அபிநயம் பிடிக்கும்

    காட்சியின் தன்மைகள் பாவத்துடன் ரசிகர்கள்முன் தோற்றமளிக்கும்

    ,

    ரம்பை,ஊர்வசியின் நாட்டியம் தேவலோகத்தையே ஆட்டிவைக்கும்

    நமது மழலைச் செல்வங்கள் ஆடும் ஆட்டம் நம்மை மகிழவைக்கும்

    சப்த ரிஷி மண்டலம் என்பது ஆகாயத்தில் சிறப்பாக தோன்றும்

    சப்த நடன மங்கையர்களின் நாட்டியம் மனதினை பரவசமூட்டும் !

    நாட்டியத்திற்காக தன் நாட்டையே பரிசாக அளித்தவருண்டு

    நாட்டியத்திற்கு அடிமைபட்டு,தவவலிமை, செல்வத்தையும் இழந்தவருண்டு

    நாட்டியக்கலையே அவனியில் தெய்வாம்சம் கொண்டது எனக்கூறுவர்

    பாடலுடன், இசையும், அதற்கேற்ற நாட்டியத்தையும் சிறந்ததாக கருதுவர் !

    ரா.பார்த்தசாரதி

  3. பாடலின் பொருளை

    ஆடலில் காட்டும்
    அழகு கலையே நாட்டியம்
    கைகள் முத்திரை காட்டும்
    தாளங்களை பாதங்கள் காட்டும்
    பாவத்தை முகத்திலும் கண்களிலும்
    வெளிக்கொணரும் நிருத்தியம்
    கைவழி முத்திரையையும்
    கண்வழி மனமும்
    முகம் வழி பாவமும்
    உடல் அசைவுகளால்
    மங்கையவள் முன்னின்று ஆட
    மற்றவர்கள் பின் பற்றி ஆட
    கண்ணனின் லீலைகளை
    ஓரங்க நாடகமாகவே நடத்தி
    தொண்மைக்கலைகளை
    தொய்வில்லாமல் நிகழ்த்துகிறார்

    சரஸ்வதிராசேந்திரன்

  4. ஆட்டத்தால்…

    ஆண்டவன் ஆடிய ஆட்டமிது
    ஆடுவர் இவரிதைக் கூட்டமாக,
    வேண்டுமிக் கலையெலாம் உளம்சிறக்க
    வாழ்வில் என்றும் வளம்பெருக,
    தூண்டுத லாகும் உடல்நலத்தில்
    துணிவும் வந்திடும் வாழ்வினிலே,
    தாண்டிட வேண்டாம் எல்லையதை
    தருமே கலையிது நலவாழ்வே…!

    -செண்பக ஜெகதீசன்…

  5. புதுமைப் பெண்ணே
    சூதாட்டுக் களத்தில் பந்தயப் பொருளானாலும்
    சூதாடிகளை வாதாடியவள்
    மாயமான் சதி வலையில் வீழ்ந்து போனாலும்
    நெருப்பைச் சுட்டெரித்த நெருப்புக் கனலி
    இந்திரப் பார்வையில் இல்லற வாழ்வை இழந்து
    கௌதமர் கட்டளையில் கற்சிலையானாலும்
    இராம பாதங்களுக்குப் புனிதமானவள்
    ஒற்றைக் காற்சிலம்பால் கொண்டவனை இழந்தாலும்
    ஒய்யார சபையிலே வாதாடி வாகை சூடியவள்
    ஊா்த்தவத் தாண்டவத்தில் விட்டுக் கொடுத்தாலும்
    அா்த்தநாரீஸ்வரின் பாகமானவள்
    வளையவரும் பெண்ணே!
    வீழ்ந்து விடாதே கண்ணே!
    வாழ்க்கை சுழற்சி வட்டத்தில்
    உயிர்ச்சுழற்சியோ உன்னிடத்தில்
    ஆணவக்கரங்களை
    வளைக்கரங்களால் வீழ்த்தும் வித்தை
    வஞ்சியே உன் சதுராட்டத்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *