அறுபடைவீடு (5)- திருமாலிருஞ்சோலை ( பழமுதிர்ச்சோலை )
க. பாலசுப்பிரமணியன்
தேன்மணக்கும் தினைமணக்கும் தமிழ்மணக்கும் நிலத்தினிலே
பூமணக்கும் காய்மணக்கும் கனிமணக்கும் சோலையிலே
வான்மணக்கும் இசையமைக்கும் தெம்மாங்கின் அசைவினிலே
வாய்மணக்கும் சொல்மணக்கும் கந்தாவென அழைத்திடவே !
எட்டுக்குடி வேலனவன் எட்டாமல் நின்றிருப்பான்
விட்டகுறை தொட்டகுறை வேதனைகள் விலக்கிடுவான்
பட்டுமேனி தெய்வானை பாசமுள்ள குறமகளும்
தொட்டிருக்கத் துணைகொண்டு துரிதமாய் காத்திடுவான் !
விளையாடத் தமிழிருக்க இடையனாய் வந்திருப்பான்
இசைக்கவிகள் இதழசைவில் இனியத்தமிழ் கேட்டிருப்பான்
சுட்டப்பழம் தந்திருப்பான் சுடாதபழம் வைத்திருப்பான்
பட்டமர வாழ்வினிலே கொட்டும்மழையாய் வந்திடுவான்!
குறுஞ்சியென்ன நெய்தலென்ன குமரனுக்கு ச் சம்மதமே
குன்றென்று ஒன்றிருந்தால் கந்தனுக்கு உறைவிடமே
குறைதீர்க்கக் கொடியேந்தி மயிலேறும் ஆறுமுகமே
குறையில்லா இதயத்தில் குடியிருக்கும் இன்முகமே !
வேலுண்டு வினையில்லை விரைவில் வந்திடுவாய்
தாள்கண்டு தரணியிலே தாகங்கள் தீர்த்திடுவேன்
கோளெல்லாம் உனைக்கண்டு குறைகள் நீக்கிடுமே
நாளெல்லாம் துணையாக உனையன்றி யாரிருப்பார் ?
தெளியாத அறிவோடு தெருவெல்லாம் அலைகின்றேன்
தெவிட்டாத இன்பம் நீயன்றோ:? வாடுகின்றேன் !
தோதாகப் பரிசொன்றும் உனக்கென்று கிடைக்கவில்லை
தோத்திரங்கள் செய்கின்றேன் துரிதாக வந்திடுவாய் !