இந்தியப்பிரதமரின் அதிரடி நடவடிக்கை!

1

பவள சங்கரி

தலையங்கம்

மிகச்சரியான நேரத்தில் அதிரடியாக பொருளாதாரத்தில் ‘surgical strike’ என்று அனைவராலும் விமர்சிக்கப்படுகிற ஒரு அறுவை சிகிச்சை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பு இந்திய எல்லையில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையைப்போன்று நேற்று இரவு பொருளாதாரத்தில் பாரதப் பிரதமர் மேதகு மோதி அவர்களால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை பாராட்டுக்குரியது. பதவியேற்ற இவ்வளவு நாட்களாக கறுப்புப் பணத்திற்கு எதிராக மோதி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்தவர்களின் எண்ணங்களை தவிடுபொடியாக்கியுள்ளார். சரியாகச் சொல்லவேண்டுமென்றால் மூன்று மாதத்திற்கு முன்பே இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கவேண்டும். பரிவர்த்தனையிலுள்ள வங்கியாளர்களுக்கோ நிதியமைச்சகத்தைச் சார்ந்த உயரதிகாரிகளைத் தவிர்த்து மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் இரகசியமாகவே இந்தப் பொருளாதார அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருந்த 10,000, 5000, 1000 உரூபாய் நோட்டுகள் வெகு காலம் முன்பு ஒழிக்கப்பட்டு 500 உரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டது. அளவில் பெரியதான 100 உரூபாய் நோட்டும் ஒழிக்கப்பட்டது. ஆனால் அவைகள் அனைத்தையும்விட இம்முறை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இரகசியமாக எதிர்பாராத நேரத்தில் அறிவிக்கப்பட்ட சரியான அறிவிப்பாக அமைந்துள்ளது. நாட்டு நலனில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டும் பெற்றுள்ளது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் இச்செய்தி நம் இந்தியாவில் சராசரியாக 2 முதல் 3 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடும். மலைவாழ் மக்கள், தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள், கல்வியறிவற்றவர்கள் அனைவருக்கும் பெரும் குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். இன்று உரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால் அனைவரின் கையிலும் 500, 1000 உரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் உள்ளன. வங்கிகளே 100 உரூபாய் நோட்டு கட்டுகளை வாங்க மறுக்கின்றன. இதிலிருந்து மக்கள் மீண்டு யதார்த்த நிலைக்கு வருவதற்கு 60 நாட்களாவது ஆகலாம். ஆனாலும் புறையோடிய நம்முடைய பொருளாதாரத்தை சீர்செய்வதற்கு இந்த அறுவைச் சிகிச்சை தேவையாகத்தான் உள்ளது.

ரிசர்வ் வங்கி இது தொடர்பாக மும்பை, தில்லி ஆகிய நகரங்களில் இதற்கான தனிப்பட்ட அலுவலகங்களை அமைத்திருப்பதாகவும் அறியமுடிகிறது. இதுபோன்று நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகள் பணப்பரிமாற்றத்திற்கு காசாளர்களை அதிக நேரங்களுக்கு பணிபுரிய வைப்பதும் நலம் பயக்கும்.

இதனுடைய பாதிப்பாக தங்கம், வெள்ளியின் சந்தை நிலவரங்கள் பாதிப்படையும். பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவினைச் சந்திக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம். உரூபாயின் மதிப்பு அதிகரிக்க வேண்டும். பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை சரியக்கூடும். சமீப காலங்களில் குறைந்துள்ள பணப்புழக்கம் இந்த நிலையில் மேலும் அதிகரிக்கலாம். அனைத்துத் துறைகளிலும் இதனுடைய பாதிப்பு வெளிப்படையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அரசு இந்நிலையில் மக்களை அனுசரித்து செயல்பட்டால் இந்த அறுவை சிகிச்சையின் பலன் பூரணமாகக் கிடைத்து, ஆரோக்கியமாகவும் அமையும் என்பது உறுதி!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்தியப்பிரதமரின் அதிரடி நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *