இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (217)
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்களுடன் உங்களுடன் உரையாடுவதில் மிகவும் மகிழ்கிறேன். வாழ்வின் அதிமுக்கியத் திருப்பத்தை எமது வாழ்நாளில் சந்தித்து விட்டோம் என்று பெருமூச்செறிந்து விட்டுச் சற்றுஅயர்ந்து உட்கார்ந்தால் அது என்ன பெரிய திருப்பம் இதை விடவா ? எனும் வகையில் காலம் எனும் சக்கரம் எம்முன்னே அடுத்தொரு பெரிய திருப்பத்தைத் தூக்கிப் போட்டுவிடுகிறது. ஆம், சரித்திரப் புத்தகத்தில் 2016ஆம் ஆண்டு மேற்குலக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை எனும் வகையில் தன்னுள் இதுவரை எண்ணியிராத பல திருப்பங்களை எம்முன்னே நிகழ்த்திக் காட்டிவிட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த நிகழ்வுகள் எமக்குப் பிடித்தவகையில் அமைந்தனவோ இல்லை எம்மால் ஏற்றுக்கொள்ளாதவைகளாக இருந்தனவோ அவைகளை ஏற்றுக்கொண்டு வாழ்க்கைக்கு முகம் கொடுப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை.
மேற்குலக ஜனநாயகம் எனும் அரசியல் கோட்பாட்டினுள் சிக்கிச் சுழலும் துகள்களில் எம்மைப்போன்ற புலம்பெயர் தமிழர்களும் அடங்குகிறோம். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து இன்று நாம் பிறந்தமண்ணை விட்டு எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் எமது வாழ்வை அமைத்து நாம் வாழும் நாட்டின் பிரஜைகளாக எமை மாற்றிக் கொண்டு வாழும் எமக்குப் பல நிகழ்வுகள் நாடகமேடைக் காட்சிகள் போன்றவையே. ஆனால் யதார்த்த வாழ்வில் அந்நிகழ்வுகளின் தாக்கங்களுக்கு நாமும் உள்ளாகப் போகிறோம் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகிறது.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி இங்கிலாந்து நாட்டின் பெரும்பான்மை மக்களின் தீர்ப்பான ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம் வெளியேற வேண்டும் எனும் முடிவு ஆட்சியிலிருந்த ராசாங்கம், எதிர்க்கட்சி வழமையான அரசியற்கட்சிகள் என்பனவற்றின் எதிர்பார்ப்புகளுக்கும் பல கருத்துக் கணிப்பு அமைப்புகளின் கணிப்புகளுக்கும் முற்றிலும் முரணான ஒரு முடிவைத் தூக்கிப் போட்டது. அதேபோல உலகின் முன்னணிப் பொருளாதார நாடாகவும், உலகில் பல நாடுகளின் முன்னோடி நாடாகவும் விளங்கிய ஜக்கிய அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இன்று காலை கொடுத்த இந்த அதிரடியான, எதிர்பார்ப்புகளுக்கு முரணான முடிவு அகில உலகம் முழுவதுமே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. இவ்வதிர்வலைகள் நேர்மறையானவையா அன்றி எதிர்மறையானவையா என்பது நாட்டிற்கு நாடு வேறுபட்டிருக்கிறது.
வெளிநாடுகளில் இன்று புலம்பெயர் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் போன்றவர்களின் முன்னால் இம்முடிவுகளின் பின்னணி பலவகையான கேள்விகளைத் தூக்கிப் போட்டிருக்கின்றன. இவ்வதிரடியான அரசியல் திருப்பங்களின் அடியில் ஒருவகையான தேசிய உணர்வு புதைந்திருப்பதை யாரும் மறுக்கமுடியாது. இத்தேசிய உணர்வின் மீது இனத்துவேஷம் எனும் சாயம் பூசப்பட்டிருக்கிறதா என்பதுவே மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகிறது. அப்படியே தேசிய உணர்வுகளின் மீது இனத்துவேஷம் அடிப்படையாக அமைந்திருக்குமானல் அதன் காரணம்தான் என்ன?
வெளிநாட்டிலிருந்து குடியேறுவாசிகளாகவோ அன்றி அகதிகளாகவோ வந்த அனைவரையும் இருகரம் நீட்டி வரவேற்றுச் சகிப்புத்தன்மைக்கும், புரிந்துணர்வுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்த நாடுகளில் இத்தகைய காழ்ப்புணர்ச்சிகள் ஊடுருவக் காரணம்தான் என்ன? இவற்றிற்கு புலம்பெயர் மக்களாகிய எம் போன்றவர்களின் செயற்பாடுகள் எந்த அளவுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன? இவற்றுக்கெல்லாம் உளச்சுத்தியோடு, நேர்மையாக விடைகளை அலசவேண்டியது எம் அனைவருடைய கடமையாகிறது.
உதரணத்திற்கு நான் வாழும் இங்கிலாந்தினை எடுத்துக் கொள்வோம். அடிப்படையில் இங்கிலாந்து கிறிஸ்துவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. இந்நாட்டிற்கு வெளிநாடுகளில் குறிப்பாக ஆசியநாடுகளில் இருந்து குடியேறுவாசிகளாக வந்த நாம் இந்நாட்டின் மதத்தினை எந்த அளவுக்குக் கௌரவித்து வாழ்கிறோம்? அவர்களது கலாசார விழுமியங்களின் தாத்பரியங்களைச் சரியாக உள்வாங்கி இருக்கிறோமா? எமது கலாசாரத்தையும், எமது மதக்கோட்பாடுகளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எனும் ஆதங்கத்தில் இந்நாட்டு மக்கள் எமக்கு அளித்த சலுகைகளை அவைகளின் எல்லை மட்டும் கொண்டுசென்று இவர்களது சகிப்புத்தன்மையை சோதிக்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டோமா ? நாம் வாழும் நகரங்கள்தோறும் கோவில்களை அமைப்பதன்மூலம் எமது சமயத்தையும், எமது கலாசாரத்தையும் காப்பாற்றுகிறோம் எனும் பெயரில் அவர்களது கலாசார விழுமியங்களின் அடையாளங்களை அவர்கள் இழப்பது போன்ற ஒரு தோற்றத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி விட்டோமா? இவையெல்லாம் எம்முள்ளே எழவேண்டிய கேள்விகள். எமக்கு இந்நாடுகள் வாடகை வீடாக இருப்பது போன்ற உணர்வு இருக்கலாம்; ஆனால் எமது சந்ததியினருக்கு இது அவர்களது சொந்த வீடு அல்லவா ?அவர்களது சொந்த வீட்டிலேயே அவர்கள் நிம்மதியாக வாழமுடியாத வகையில் ஒரு நிலைமையை ஏற்படுத்தி விட்டோமா ?
“ப்ரெக்ஸிட்” எனும் இங்கிலாந்தின் முடிவும், அமெரிக்க ஜனாதிபதியாக “ட்ரம்ப்” அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதும் முக்கியமான திருப்பங்கள்; ஆனால் இவற்றின் அடிக்கோடாக இனத்துவேஷ உணர்வுகள் இருப்பதகாக் கூறிக் கொள்ளும் அதேநேரம் இந்த “ப்ரெக்ஸிட்” முடிவையும், “ட்ரம்ப்” அவர்கள் ஜனாதிபதியாக வருவதையும் ஆதரித்த எம்மவர் பலரை நான் சந்தித்திருக்கிறேன் என்பதுவே உண்மை. அப்படியாயின் இம்முடிவுகள் எப்படி “இனத்துவேஷம்” கொண்டவையாக இருக்க முடியும்? இதன் காரணங்கள்… ஒன்று இவற்றின் பின்னால் இருக்கும் நாட்டின் பொருளாதார நன்மைகளை உள்வாங்கியதால் எம்மவர் அதரித்திருக்கலாம்; இரண்டாவதாக தம்மை இந்நாடுகளின் பிரஜைகளாகவும், தமக்கும் இந்நாட்டின் பெரும்பான்மையினராகிய வெள்ளை இனத்தவருக்கும் எதுவித வேறுபாடுமில்லை என்பதனால் எம்மவர் ஆதரித்திருக்கலாம்.
எது எப்படி இருப்பினும் இந்நிகழ்வுகள் நடந்து முடிந்துவிட்டன என்பதுவே உண்மை. இவை இரண்டின் முடிவுகளுக்கும் எதிரான கருத்துக்களை ஆதரித்தவன் நான்; இருப்பினும் மேற்குலக ஜனநாயகத்தின் அடிப்படையில் இம்மக்களின் இப்பெரும்பான்மை முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனுடன் எம்மை இணைத்துக் கொண்டு வாழ்வது ஒன்றே இயல்பான நிலையாகிறது. “ப்ரெக்ஸிட்” எனும் நிகழ்வின் எதிரொலியாக ஏற்படும் நிலைகளை எமக்குச் சாதகமாக்கி அதன்மூலம் அனுகூலமான வாழ்வினை ஏற்படுத்திக் கொள்வதே புலம்பெயர்ந்தவர்களாகிய எமது கடமையாகிறது. அதேபோல “ட்ரம்ப்” அவர்களின் பிரசாரக் கோஷங்களைக் கேட்டு அவரைப் பற்றி நானெடுத்த கணிப்பு வெற்றியடைந்த பின்னால் அவர் கொடுத்த உரையைக் கேட்டதும் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது. ஆம், அமெரிக்க மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் அரசியல் பின்னணி எதுவுமற்ற ஒரு வெற்று வியாபார முதலாளியைத் தமது ஜனாதிபதியாக்கியுள்ளார்கள். அவர்க்குச் சந்தர்ப்பம் அளித்து அவரது செயற்பாடுகளை அவதானிப்பது ஒன்றே இன்றைய எமது தேவையாகிறது. பிரசார மேடைகளில் கர்ஜித்த “ட்ரம்ப்” என்பவருக்கும் ஜனாதிபதியாகப் பதவியேற்கப்போகும் “ட்ரம்ப்” என்பவருக்கும் இடையில் வேறுபடு இருப்பது போலவும் அவ்வேறுபாடு அனுகூலமிக்கது போலவும் தென்படுகிறது.
“கண்ணாலே காண்பதும் பொய், காதாலே கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் ” எனும் முன்னோர்கள் கூற்றுக்கேற்ப ஜானாதிபதி “ட்ரம்ப்” அவர்களுக்குச் சந்தர்ப்பம் அளித்துப் பார்க்க வேண்டியது ஜனநாயகத்தை நம்பும் அனைவரது கடமையாகிறது.
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்