படக்கவிதைப் போட்டி .. (86)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
திருமதி. ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 19.11.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
செல்பி மோகம்
நின்றால் நடந்தால் இருந்தாலென்ன
சின்ன சின்ன அதிர்வுகளும் கவனிக்கப்படும்
செல்லப்பிள்ளையாய் மனசு துடிக்கும்
சிறுவெற்றிடம் கிடைத்தாலும்
கைபேசி காட்சிப்படமாய் விரிந்திடும்
காட்சிப்படங்களை நுட்பமாய் செதுக்குகையில்
காட்சிப்பிழைகளாய் அகாலமரணங்கள்
சிருங்காரம் முதல் மெய்ப்பாடுகள் கைடக்கப் பதிவுகளாய்
தன்மோகம் அதிகரித்து பிறர் வாட
வேடிக்கை பார்க்கும் நாகரிகம்
வேகமாய் பரவும் மாயமென்ன
இயற்கை அழகு கொட்டிக்கிடக்க
அன்னையவள் அருகிருக்க
பிஞ்சு மழலையின் பஞ்சு கரங்கள் பற்றிட ஆளில்லை
நெஞ்சுரத்தில் நஞ்சுரம் ஏறிய காரணமென்ன
யாம் அறியேன் பராபரமே!
நாளைய பாடம்…
கைக்குழந்தையைக் கவனிக்காமல்
கீழே விட்டு,
கைபேசியில் படமெடுத்து
மெய்மறந்தால்,
நாளை வரும்
பொய் வாழ்வு
தானே படம்பிக்கப்படுகிறது-
பிள்ளை நெஞ்சில்…!
-செண்பக ஜெகதீசன்…
நிஜங்களை விட
நிழல்களையே தேடுகிறது மனம்
நிழல்களை நிஜமாக்கி விட்டது விஞ்ஞானம் வானைமுட்டும் இதன் வளர்ச்சியில் . இன்று நிஜங்களின் பலி ஏராளம் பிஞ்சு மனத்தின் கெஞ்சல்
பெற்றவளின் காதில் எட்டவில்லை
சுயத்தின் நிழலில் தொலைந்து விட்டது
அவளது தொடு உணர்வு
தொடர்பு எல்லைக்கு அப்பால் அவள் நிற்க
பிள்ளை மனம் பித்தாகி
பெற்ற மனம் கல்லான இக்காட்சி
நிழல் அல்ல நிஜம்
தாயும் சேயும்.
சி. ஜெயபாரதன், கனடா.
சேயிக்குப் பசி !
தாய்ப்பால் கேட்கிறது !
தாயிக்கு மோகம் !
ஆண்பால் தேடுது !
பெண்பாலுக்கு ஆண்பால் !
அழுத பிள்ளைக்குப் பாலூட்டும்
அன்னை இல்லை !
தவமிருந்து பெற்ற பிள்ளை
தவியாய்த் தவிக்குது !
பிள்ளை இல்லாதவள் அந்த
பிரம்மாவைத் துதிப்பாள் !
பிள்ளை உள்ளவள் காதலன் தேடி
கல்லாகிப் போனாள் !
+++++++++++++