ஃபிடல் காஸ்ட்ரோ

unnamed
எஸ் வி வேணுகோபாலன்

கொடுங்கோலன் பாடிஸ்டாவை
உறக்கம் தொலைக்கச்செய்து
இறுதி மோதலில் வீழ்த்தவும் செய்தவனே

மனிதகுல விடுதலைக்கான வேலைகள்
கூடிக் கொண்டிருக்கவே செய்தது உனக்கு

உலகளாவிய புரட்சிகர இதயங்களுக்கு
நம்பிக்கைக் குருதி பாய்ச்சிக் கொண்டிருந்தாய்

ஏகாதிபத்தியத்தின் கனவுகளில் ஊடுருவிக்
கலகம் விளைவித்துக் கொண்டிருந்தாய்

உன் அடிச்சுவடுகளை அந்நாளில்
தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்கள்
புரட்சி வேட்கை கொண்டோர் மட்டுமன்று
தீர்த்துக் கட்டத் துடித்த சதிகார சக்திகளும்தான் !

இளமையில் புகட்டப்பட்டிருந்த
விவிலியம்* விரவிய இலக்கிய மொழியில் (*விவிலியம் = பைபிள்)
மதங்களுக்கு அப்பாற்பட்ட தத்துவம் விரிந்தது

ஆயுதங்களற்ற வேளைகளிலும்
பேச்சுகளின் வீச்சில்
நடுங்கி ஓடின எதிர்ப்புரட்சிக் கும்பல்கள்

பொதுவுடைமையின் சாத்திய சாட்சியமாகிய
கியூப மண்ணில்
அடுத்தடுத்த தலைமுறை குழந்தைகள் கைகளிலும்
புரட்சியின் பூங்கொத்துகள்

சந்தைப் பொருளாதாரத்தின்
சத்தங்களுக்கு இடையே
நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மனித உணர்வுகளை
அன்பின் பேரூற்றால் தளிர்க்கச் செய்யும்
எதிர்கால நம்பிக்கைக்கு
எக்காலத்திற்குமான
சிறு நெருப்பின் பெருந்துளி நீ!

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டில்
அமைதி பெறுகிறது
ஒட்டுமொத்த உயிர்களுக்காகவும் துடித்த
உன் உன்னத இதயம் !
உற்ற தோழன் சே குவேராவை
மீண்டும் நினைவிலேந்தி வழியனுப்புகிறது
உலகம் இருவரையும்!

உலகம் யாவிலும் உன் பெயரால்
சுடர்ந்தெரியும் மெழுகு தீபங்களிலிருந்து
பரவும் வெளிச்சம்
சுரண்டல் இருளை ஒருநாள்
முற்றாகத் துடைத்தெறியும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *