சந்தனப்பேழைக்குள் ஒரு சங்கீதம்
க.பாலசுப்ரமணியன்
வாழ்ந்துபார்த்த ஒரு ராகமாலிகை
இன்று ..
சந்தனப்பேழைக்குள்
அமைதியாய் ..
அவள்..
அறிவுக்கு அழகு
அன்புக்கு அம்மா
பெண்மையின் பெருமை
கலையுலகின் கண்மணி
நம்பிக்கையின் துருவநட்சத்திரம்
நாளையை இன்றே
கணித்த அரசியல் கணிதம் ..
அமர்ந்த பார்வை
அர்த்தமுள்ள புன்னகை
இளகிய நெஞ்சம்
இரும்புக் கரங்கள்
தெளிவான பேச்சு
திறமையின் சின்னம் ..
பூமியைவிட்டு..
புதியதோர் உலகம் ..
எப்படிச்செல்லும்?
அன்பர்களின்
கண்ணீர்க் கடலில்
நீந்தியா ?
அல்லது..
எளியோர்களின் வீடுகளில்
ஏற்றிய தீபங்களின்
ஒளிக்கதிர்களிலா ?
ஏழைகளுக்கு அளித்த
ஏணிப்படிகள் ..
ஏறிச்செல்ல ..
இன்று வானத்தை
தொடுகின்றதாமே?
வழியெல்லாம் மலர்தூவி
வானமும் காத்திருக்குமோ?