நிர்மலா ராகவன்

பெண்ணியம் என்பது

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2

`பெண்ணியம் என்றால் என்ன?’ என்று தமிழ்நாட்டிலுள்ள ஒரு கல்லூரி மாணவன் கேட்டான்.

`அது என்ன இல்லை என்பதைச் சொல்கிறேன்,’ என்றுவிட்டு, `ஆண்கள் ப்ரா அணிகிறார்களா? நாங்கள் மட்டும் எதற்கு அணியவேண்டும் என்று உள்ளாடையைக் கொளுத்துவது பெண்ணியம் இல்லை!’ என்று நான் கூறியதும், அந்த `கெட்ட’ வார்த்தையைக் கேட்டோ, என்னவோ, அரங்கத்திலிருந்த எல்லா இளவயதினரும் உரக்கச் சிரித்தார்கள்.

ஆண்களும் பெண்களும் சமூகத்தில், கல்வியில், பொருளாதாரத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பெண்ணியம்.

பெண்ணியவாதியான ஒரு பெண், ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக்கொண்டு வாழ்பவள், ஆண்களை வெறுக்கிறாள் என்று அர்த்தமில்லை. தன்னை மதித்து நடக்கும் ஆண்களிடம் நட்பாகப் பழகுவாள். தானும் ஒரு பொருட்டுதான் என்று எண்ணி, பிறர் தன்னை நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அவ்வளவுதான்.

`நாங்கள் பெண்ணியவாதிகள். ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களில்லை!’ என்ற மமதையுடன் சிகரெட் புகைப்பதும், விஸ்கி குடிப்பதும், பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதும்தான் சுதந்திரம் என்று முதலில் நினைப்பவர்கள்கூட முப்பத்தைந்து வயதைத் தாண்டிவிட்டால், ஒரு வெறுமையை உணர்கிறார்கள்.

`ஆண்கள் இல்லாமலே நாங்கள் வாழ்ந்து காட்ட முடியும்!’ என்ற சவால் அர்த்தமற்றது. ஏதோ காரணத்திற்காகத்தானே இருபாலரும் இவ்வுலகில் பிறந்திருக்கிறார்கள்?

நாற்பத்தைந்து வயதுக்குட்பட்ட பல பெண்கள், “சிறு வயதில், ஆசிரியை அடித்தார், `நன்றாகப் படி!’ என்று. குறைந்த மதிப்பெண்கள் வாங்கினால் அப்பா கோபித்தார். படிப்பு, போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றால் அம்மா மகிழ்ந்தாள். ஆனால், அவர்கள் சொற்படியெல்லாம் கேட்டு, மிக நன்றாகப் படித்து, ஆண்களுக்குச் சரிசமமாக பெரிய உத்தியோகம் அமைந்தாலும், சுதந்திரமாக இருந்தால் பழிச்சொல் வருகிறதே!” என்று என்னிடம் அரற்றியிருக்கிறார்கள்.

சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை உண்டே!

கதை: ஒரு பெண்ணியவாதியுடன் நெடுநேரம்

என்னுடன் பள்ளியில் படித்த கஸ்தூரி மேற்கூறியபடி — மனம் போனபடியெல்லாம் — நடந்தபோது, நெருங்கிய உறவினர்கள்கூட அவளைத் தம் வீட்டுக்கு வரக்கூடாது என்று தடை விதித்தார்கள். தந்தையோ, அவளுடன் பேசுவதையே விட்டார். அவருடைய உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. தாய் மட்டும் அன்பாக இருந்தாள்.

எனக்குத் திருமணமானபின் அவளைச் சந்தித்து நெடுநேரம் அவள் வாழ்க்கைமுறையைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ஆரம்பப்பள்ளியிலிருந்தே இருவருக்கும் பழக்கம். அவள் சொல்வதையெல்லாம் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, `என்றாவது உன் கதையை எழுதுவேன்!’ என்றதும், பலக்கச் சிரித்தாள்.

`உன்னிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று தோன்றுகிறது!’ என்றவளிடம், `உன் அம்மாவுக்கு உன் நடத்தையால் எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்பதை யோசித்தாயா?’ என்று கேட்டேன்.

`வாய்ப்பு இருந்திருந்தால், அம்மாவும் இப்படித்தான் நடந்திருப்பார்கள்!’ என்றாள் கஸ்தூரி, அலட்சியமாக.

உயர்கல்வி மற்றும் உத்தியோக நிமித்தம் தனித்து வாழும் வாய்ப்பு கிடைத்தால் யார் குறுக்கீடும் இல்லாமல், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்றெண்ணும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. சமூகத்தின் எதிர்ப்பு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

`எனக்கு ஒன்றுதான் புரியவில்லை. என்னுடன் நெருக்கமாகப் பழகியிருந்த ஆண்கள் கல்யாணமாகி, தம் மனைவியுடன் எங்காவது செல்லும்போது நான் எதிர்ப்பட்டால், தெரியாதமாதிரி நடப்பார்கள். அது ஏன்?’ என்று கேட்டாள் கஸ்தூரி.

நான் ஒன்றும் பேசவில்லை. அவர்கள் ஆண். சற்று முன்னேபின்னே நடக்க அவர்களுக்குச் சமூக அங்கீகாரம் இருக்கிறது. ஆனால், `சுதந்திரம்’ என்ற மயக்கத்துடன் ஒரு பெண் தான்தோன்றித்தனமாக நடக்கத் துணிந்தால், அவளுக்குத்தான் அவப்பெயர்.

பெண்களை மதியுங்கள்

ஒரு பெண் எப்படி நடக்கவேண்டும் என்று யார் யார் தீர்மானிக்கிறார்கள்?

பதில்: சமூகத்தை ஒட்டி நடக்கும் குடும்பத்துப் பெரியவர்கள், இலக்கியம் மற்றும் திரைப்படங்கள்.

பெரும்பாலான தமிழ்ப்படங்களில் அப்பா என்பவர் மகனைக் கரித்துக் கொண்டிருப்பார். அம்மா பின்னால் சோகமாக நின்று, அவனுக்குப் பரிவாள். ஏனெனில் அவன் ஆண்மகன். அவனைப் பெற்றெடுத்ததால் சமூகத்தில் அவளுடைய மதிப்பும் உயர்ந்துவிட்டது என எண்ணுகிறாள்.

அந்த மகனுக்குக் கல்யாண வயது வரும்போது, தனக்கு வாய்ப்பவளும் தன் தாய்போல் தன்னை எந்த நிலையிலும் ஆதரிப்பவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுகிறது. அதற்கு அவனுக்கு அடங்கியவளாக இருக்கவேண்டும்.

பொதுவாக, ஆண்கள் எப்படி நடக்கவேண்டும் என்று அவர்களுக்கு இன்னொரு விதமாகவும் கற்பிக்கப்படுகிறது. `பொம்பளைமாதிரி அழாதே!’ என்று ஒரு சிறுவனைக் கண்டிக்கும்போது, பெண்களைவிட தான் உயர்த்தி என்று அவன் எண்ண வழிகோலுகிறோம்.

அதனாலேயே தங்களைவிட அதிகமான தன்னம்பிக்கையோ, அறிவுத்திறனோ ஒரு பெண்ணுக்கு இருந்தால், `இனிமே நாங்கதான் புடவை கட்டிக்கணும்!’ என்று அயர்வார்கள் சிலர். பெண்களின் உயர்வு அவர்களை அச்சவைக்கும், குறுகவைக்கும், தன்மையா?

கதை: தேவை –_கல்யாணம்

வினுதா கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தவள். அவளுடைய படிப்பைவிட உயர்ந்த கல்வி கற்றிருந்த மணமகன் அமைவது கடினமாகப்போக, தனக்கும் திருமணம் என்று ஒன்று நடக்குமா!’ என்ற ஏக்கம் பிறந்திருக்க வேண்டும்.

இறுதியில் ஒருவர் அமைந்தார் — அவள் தன் உத்தியோகத்தை விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன். பெண் என்றால் இல்லற வாழ்க்கை, குழந்தைகள், சமையல் என்று தன் தாயைப் பார்த்துக் கற்றிருந்தவளுக்கு அது ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. மகிழ்ச்சியுடன் உடன்பட்டாள்.
`நான் சம்பாதிச்சு ஒண்ணும் ஆகப்போறதில்லே. அவரே கைநிறையச் சம்பாதிக்கிறார்!’ என்று பெருமை பேசிக்கொண்டாள்.

செக்கு மாடு

திருமணமானபின்னரும் நான் வேலைக்குப் போகிறேன் என்று நான் சொல்லக் கேட்ட ஒரு முதியவள், `ஆக, ஒன் ஆத்துக்காரர் சம்பாதிச்சு ஒனக்கு சாப்பாடு போடலே?’ என்று கேட்டாள், கேலியாக.

இவர்களைப் போன்றவர்களுக்கு, எந்த ஒரு தேவைக்கும் ஆணின் கையை எதிர்பார்ப்பது பெருமை; அதனாலேயே உயர்கல்வி பெண்களுக்குக் கூடாத ஒன்று. ஏனெனில் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்து, `உரிமை’ என்று ஏடாகூடமாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம் சமூகத்தில் இதுவரை கடைப்பிடித்தது எல்லாவற்றிற்கும் அர்த்தம் இல்லாது போய்விடுமே!

பெண்கள் வீட்டிலேயே இருந்த காலத்தில், தங்கள் எல்லாத் தேவைகளுக்கும் கணவனை எதிர்பார்த்திருந்ததால், முடிந்ததோ, இல்லையோ, எல்லா வேலைகளையும் தாமே செய்தார்கள்.

அவர்களிலும் சிந்திக்க அஞ்சாத ஓரிருவர், `இது என்ன வாழ்க்கை! எல்லா நாட்களும் ஒரேபோல!’ என்று அலுத்துக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், `இப்படித்தான் நடக்க வேண்டும்,’ என்ற கட்டாயம் இருந்ததால், சுயவிருப்பம் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போயிற்று. தனித்துவம் என்ற வார்த்தைக்கே அவர்கள் அகராதியில் இடமில்லை. புதுமையாகச் சிந்தித்தால் பழி வருமோ என்ற அச்சம் வேறு. அப்படி நடந்துவந்த ஒரு பெண்மணி கூறினார், `நாங்க செக்கு மாடு மாதிரி ஒரே இடத்திலே சுத்திச் சுத்தி வரோம்!’

பெண்ணிய ஆண்கள்

`நாள்பூராவும் வேலை செய்துவிட்டு வந்து எனக்கு அசதியா இருக்கு,’ என்று மனைவி கூற, அன்றையிலிருந்து துவைக்கும் இயந்திரத்தில் துணிகளைப் போடுவதைத் தன் வழக்கமாக ஏற்றார் கணவர். குழந்தை வளர்ப்பிலும் மகிழ்ச்சி கொண்டார். `பெண்டாட்டி தாசன்!’ என்று பிறர் கேலி செய்தார்கள். அவர்கள் புரியாதவர்கள். எப்போதும் பெண்களைவிட உயர்ந்த நிலையிலேயே இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஆண்களின் நிம்மதியைத்தான் பறித்துவிடாதா?

இருவரும் உயரலாம்

வாழ்க்கை என்னும் தராசில், ஆணோ, பெண்ணோ கீழேயே இருக்க நேர்ந்தால், அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? இல்லை, `நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா?’ என்று ஆராயும் துணிவுதான் அவர்களிடம் இருக்க முடியுமா? `நான் சந்தோஷமாக இருக்கிறேன். இல்லை?’ என்று அடிக்கடி பிறரிடம் கேட்பார்கள் இவர்கள்.

`நீயும் மேலே வா!’ என்று ஒரு பெண்ணை, அவள் மனைவியோ, மகளோ, முன்னுக்கு வர வழிவகுக்கும்போது உடன் இருக்கும் ஆணும் உயர்கிறான்.

இதிலும் ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது. அவனிடமிருந்து மாறுபட்டிருக்கும் பிறர், `பெண்களுக்கு ரொம்ப இடம் கொடுத்தால், தலைக்குமேல் ஏறுவார்கள்!’ என்று பயமுறுத்துவார்கள்.

யோசித்தால், இதுவும் உண்மைதான் என்றே தோன்றுகிறது. அபூர்வமாகத் தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளால், பிற பெண்களிலிருந்து அவள் வித்தியாசப்பட்டிருப்பதால், அவளுடைய சுயமதிப்பு கூடிவிட, எல்லோர்மேலும் அதிகாரம் செலுத்த ஆரம்பிக்கிறாள்.

ஆனால், அவ்வப்போது அப்பெண்கள் செய்வது ஏதாவது ஏன் சரியில்லை என்று சொன்னால், சிந்தித்து, தம் தவற்றைத் திருத்திக்கொள்வார்கள்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நலம் .. நலமறிய ஆவல் … (35)

  1. இது இந்தியநாட்டுப்(அடிப்படைஉரிமை) பெண்ணியம்மேற்கத்தியப் பெண்ணியம் என்பது வேறு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *