கவிஞர் ஜவஹர்லால்

இருட்டில் இருப்பவன் வெளிச்சம் வேண்டி
வெளியில் தேடுகிறான் ––மனசை
இருட்டுக் குகையென ஆக்கி வாழ்பவன்
எங்கே கண்டிடுவான் ?

அல்லவை தேடி அலையும் மனமொரு
கனத்த இருட்குகையே –அதில்
நல்லவை நாடி ஒருசிறு சுடரை
ஏற்றிடில் ஒளிபிறக்கும்.

சித்த மயக்கம் என்பது வாழ்வைச்
சூழும் இருட்டாகும்; –அங்கே
சித்தத் தெளிவினைச் சேர்க்கும் அறநூல்
சிறந்த விளக்காகும்.

சூழும் வஞ்சகம் சூது பொய்மை
சூழ்ந்துள மனசெல்லாம் – இருட்டில்
ஆழும் ஒருகுகை; அதனுள் பிசாசுகள்
அண்டிக் குடியிருக்கும்.

கருத்து வெளிச்சம் தானாய் வராது
கற்பன கற்றிடுவாய்! -–மனம்
வெறுத்து நீயே வீழ்ந்து விடாமல்
காப்பது கற்பவையே!

வெளிச்சம் தேடி வெளியில் அலைவோர்
பாறையில் விதைப்பவரே ! -–அந்த
வெளிச்சம் உள்ளே ஏற்றி வெளியே
விளங்கச் செய்திடுநீ !

அடுத்தவர் நலத்தை நினைத்துப் பார்நீ !
அங்கொரு சுடர்தோன்றும் ! –உன்னைக்
கெடுத்தவர் தமக்கும் நலமே செய்நீ !
கருத்துள் ஒளிபிறக்கும்.

உள்ளொளி தோன்றின் வெளியொளி பிறக்கும்
உள்ளே விளக்கேற்று ! –மிகத்
தெள்ளத் தெளிந்த அறிவொளி ஏற்றிச்
சூழும் இருள்நீக்கு !

வெளிச்சம் என்றும் வெளியில் இல்லை
விளைகிற இடம்மனமே ! –அந்த
வெளிச்சம் பிறர்க்கே ஒளிதர வேண்டும்;
மேன்மை நீயடைவாய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *