கவிஞர் ஜவஹர்லால்

உண்ணவும் உறங்கவும் முடியவில்லை; –என்றன்
உடலும் உருகுது தாங்கவில்லை;
எண்ணமும் செயலுமே முடங்கிவிட– என்றன்
இயக்கமும் தடைப்பட நோய்ப்பட்டேன்.

நெஞ்சுளே ஏதோ உடைகிறது; – என்
நினைப்பதும் நொறுங்கிச் சிதைகிறது;
பஞ்சென உள்ளம் பறக்கிறது — எங்கோ
போய்ப்போய் மீண்டும் வருகிறது.

கண்ணிலே ஒளியும் குறைகிறது; – காணும்
காட்சிகள் குழம்பித் தெரிகிறது;
கண்ணுளே ஊசி புகுந்ததுபோல் – ஏதோ
கொடிய வலியுடன் வதைக்கிறது.

பெற்றவள் பார்த்துப் புலம்புகிறாள் – எங்கோ
பெரிய வைத்தியன் தேடுகிறாள்;
உற்றவ ரெல்லாம் எனைப்பார்த்தே – இங்கே
உருகி உருகிப் பேசுகிறார்.

வாதமா? பித்தமா? சிலேத்துமமா? -இந்த
நாடிகள் நாட்டியம் பிடிபடுதா?
வேதனை நான்பட மற்றவர்கள் – என்னை
வேடிக்கைப் பொருளெனப் பார்த்துநின்றார்.

எத்தனை மருந்துகள் விழுங்கிடினும் -அவள்
எனைவிழுங் கியநிலை தீர்ந்திடுமா?
எத்தனை மருந்துகள் பூசிடினும் -அவளை
எண்ணிய கொப்புளம் மறைந்திடுமா?

என்னவ ளிங்கே வரவேண்டும்; -மயில்
இறகென நீவியே தரவேண்டும்;
என்னவள் தந்தஅந் நோயினுக்கே -அந்த
இளையவ ளேபிற மருந்தில்லை.

நோய்களைத் தீர்த்திடும் மருந்துவகை; – அந்த
நோயெலாம் உலகில் வேறுவகை;
நோயிதைத் தீர்க்க மருந்தில்லை – இந்த
நோய்தந்த அவளே நோய்மருந்து.

பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.
புணர்ச்சிமகிழ்தல்–1102
திருவள்ளுவர் இலக்கியமன்றம்
நங்கநல்லூர்–08-07-06

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *