வைரமணிக் கதைகள்
வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் வையவன்.வைரமணிக்கதைகள் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் அவரது 497 பக்க சிறுகதைத்தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரியும் உண்மை இது . தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கூர்ந்த கவனிப்பு, இது சரி-இது தவறு என்பது குறித்த தெளிவான நிலைப்பாடு , சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான இலக்கியப் புரிதல் , சிறந்த சொல்லாடல் என வையவனின் எழுத்துச் சிறப்பைச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களின் ஒருவர் என்று சொல்ல வைக்கும் கதைகளை வழங்கினாலும் மிகுந்த தன்னடக்கத்தை வெளிப்படுத்துபவர்.எழுத்தாளர் வையவன். 58 ஆண்டுகளாக இலக்கியப்பங்காற்றிவரும் வையவனின் செழுமையின் தொகுப்பாகவே இந்த 80 கதைகளின் தொகுப்பு அமைந்துள்ளது. கதை பேசும் இடங்களின் -நபர்களின் சித்தரிப்பு , மனக்கண்ணில் கதையை ஓடவிடும் எழுத்தாளுமை , புத்தகத்தை கீழே வைக்கவிடாத அளவு ஈர்க்கும் கதைகள் என இது ஒரு தவறவிடக்கூடாத தொகுப்பு .
சிறிய கதைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர் இவர். நல்ல இலக்கியம் கால வித்தியாசமின்றி , தலைமுறைகளைத் தாண்டி வசீகரிக்கும் என்பார்கள். அவ்வாறு ட்விட்டரின் குறள் அளவு கமெண்ட்களின் யுகத்திலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த எழுத்தாளர் வையவன்.
———————–
மதிப்புரை வழங்கியவர் : பெமினா இதழில் எஸ். செந்தில் குமார்
வெளியிட்டோர்: தாரிணி பதிப்பகம், 4A , ரம்யா பிளாட்ஸ், 32 /79 ,காந்தி நகர் நகர் நான்காவது பிரதான சாலை, அடையாறு, சென்னை-20
[இந்த மதிப்புரையின் யூட்யூப் வடிவினை[http://vaiyavanvideos.blogspot.in/] காணலாம்]